சங்கீதம் 95:1-7

தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த தேவையாக இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் உண்மையாக தேவனை ஆராதிப்பது என்பது ஒரு கடினமான காரியம். ஏன் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமானது? உண்மையாய் தேவனை ஆராதிப்பது மனிதனுடைய இயலாமையல்ல மனிதனுக்கு தேவனை ஆராதிப்பதை மனிதன் விரும்புதில்லை என்பது தான் அடிப்படை காரணம். இன்றைக்கும் தேவனை ஆராதிப்பது மனிதனுக்கு கடினமாக தான் இருக்கிறது. சபைக்கு போகனுமா? என்ற எண்ணம் அதிகமாக எழும்புகிறது. மனிதனுக்கு தேவனின் வார்த்தையை கேட்டவும், அவருடைய சமுகத்தில் வரவும், அவரை துதிக்கவும், நன்றி செலுத்தவும் ஆராதிக்கவும் விருப்பமில்லை.

கிறிஸ்தவ ஆராதனை என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூட்டமாக கூடுவது. ஆராதனையில் நாம் தேவனை சந்திக்க வேண்டும். தேவனை ஆராதிப்பது என்பது தேவனுடைய சமுகத்திற்கு முன்வந்து, நம்மை தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுத்துவது, தேவனின் சமுகத்தில் நம்மை காண்பிப்பதாகும்.  தேவனை ஆராதிப்பதில் நாம் கீழ்ப்படியாமையையும் அவிசுவாசத்தையும் தள்ளி, தேவன் மீதான நம்முடைய எதிர்புகளை அகற்றி, அவருக்கு கீழ்ப்படிந்து விசுவாசித்து துதித்து அவரில் களிகூருகிறோம். தேவனை ஆராதிப்பது எப்பொதும் மனந்திரும்புதலை உள்ளடக்கியுள்ளது. தேவனை ஆராதிப்பது மனிதனுடைய வாழ்வில் தொடர்சியான மனந்திரும்புதலை கொண்டுவருகிறதாயிருக்கிறது.

இந்த 95-ம் சங்கீதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

95:1-5 மகிழ்ச்சியாய் தேவனை ஆராதிக்க வாருங்கள்

95:6-7 தேவன் நம்முடைய தேவன்

95:8-11 கடின இருதயத்தின் உதாரணம்

சங்கீதம் 95தேவனை ஆராதிக்க நம்மை அழைக்கிறது. சங்கீதம் 95ல் கூறப்பட்டிருக்கிற ஆராதனை தனிப்பட்ட ஆராதனையல்ல, அனைவரும் சேர்ந்து ஆராதிக்கும் ஆராதனைக்கு அழைக்கிறது. சங்கீதம் 95:1- கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:6-நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். தேவனை ஆராதிப்பது ஒரு கூட்டாக கூடி செய்யும் செயல். ஏன்னென்றால், தேவன் எனக்கு மட்டும் தேவன் அல்ல, அவர் நம் எல்லாருடைய தேவன். ஒன்றாக கூடி தேவனை ஆராதிப்பது நமது விசுவாசத்தின் அடிப்படையாக இருக்கிறது.

இன்றைக்கு தேவனை ஆராதிப்பது தனிமனித விருப்பமாக மாறிவிட்டது. நான் தனியாக தேவனுக்குள்ளான உறவில் வாழ்கிறேன் சபைக்கு வருவதெல்லாம் அவசியமற்றது என்ற சிந்தனைக்குள்ளாக அநேகர் இருக்கிறார்கள். இந்த விருப்பமும் சிந்தனையும் வேத போதனைக்கு எதிரானது. வேதம் போதிக்கும் சத்தியம், நாம் தேவனை எல்லா தேவ பிள்ளைகளோடு இணைந்து அவரை ஆராதிக்க வேண்டும். உபாகமம்9:10 கூறுகிறது “அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர்  என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது”. இங்கு சபை கூடியிருந்த நாளில் என்ற பதம் ஆராதனையை குறிக்கிறது. தேவனுடைய கட்டளை அவருடைய பிள்ளைகள் ஒன்றாக கூடி அவரை ஆராதிக்க வேண்டும்.

தேவனை நாம் எவ்வாறு ஆராதிப்பது என்று இரண்டு காரியங்களையும் , ஏன் ஆராதிக்க வேண்டும் என்று நான்கு காரியங்களையும் சங்கீதம் 95 கூறுகிறது.

தேவனை நாம் எவ்வாறு ஆராதிப்பது என்றுசங்கீதம் 95  கூறும் இரண்டு காரியங்கள்

முதலாவதாக, ஆராதனை என்பது தேவனிடமாய் திரும்புதல். 

சங்கீதம் 95:1 வாருங்கள் மற்றும், 95:2  வந்து என்ற வார்த்தையில் அழைப்புவிடுக்கப்படுகிறது. ஆராதனையில் நாம் நம்முடைய தனிப்பட்ட  வேலைகள், பொறுப்புகள், செயல்களை விட்டு தேவனுடைய சமுகத்தில் திரும்புகிறோம். தேவனிடமாய் நம் வாழ்வை திருப்புகிறோம்.  தேவனிடமாய் நம் வாழ்வை திருப்பவில்லை என்றால் நம்முடைய வாழ்வின் மற்ற எல்லா காரியங்களும் சரியான பாதையில் இருக்காது. தேவனி ஆராதிப்பது மிக முக்கியமான செயல். ஆராதனை என்பது தேவன் பக்கமாய் திரும்புதல். 

இரண்டாவதாக, ஆராதனை என்பது ஆழமானது. சங்கீதம் 95:1 கெம்பீரமாய் 95:2 ஆர்ப்பரித்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த சங்கீதம் தேவாலயத்தில் செய்யப்படுகிற ஆராதனையை பிரதிபலிக்கிறது. ஆராதனை உற்சாகமாக நிகழ்கிறது. உற்சாகம் என்ற வார்த்தையை தவறாக புரிந்துக்கொள்ள கூடாது. உற்சாகம் நடனத்தையோ, குதித்தலையோ, விசில் அடிக்கிறதையோ, கத்துகிறதையோ குறிக்கவில்லை. உற்சாகமான ஆராதனை என்பது தேவன் மீதான ஆவலையும், அன்பையும் வெளிப்படுத்துதல்.  தேவன் மீதும், அவருடைய வழிகளையும் விரும்பி அவரை ஆராதித்தல். தேவனுடைய வழிகளை விரும்புதல் நம்முடைய இருதயத்தின் மையமாக இருக்க வேண்டும். ஆராதனையில் உணர்ச்சிகளை விட இருதயம் மிக முக்கியமானது. ஆராதனை ஏன் ஆழமானது என்றால், ஆராதனை தேவனைப் பற்றியது. 

தேவனிடமாய் திரும்பி அவரையும் அவருடைய வழிகளையும் நேசித்து தேவனை ஆராதிக்க வேண்டும் என்று சங்கீதம் கற்றுத்தருகிறது. 

ஏன் நாம் தேவனை ஆராதிக்க வேண்டும் நான்கு காரியங்களை இந்த சங்கீதம் கூறுகிறது.

முதலாவதாக, தேவன் பெரியவராயிருப்பதால் அவரை ஆராதிக்க வேண்டும். தேவன் பெரியவர் என்பதை அங்கீகரித்தல். தேவனுடைய எல்லையற்ற மகிமையையும்,  எல்லையற்ற வல்லமை, எல்லையற்ற ஞானம், எல்லையற்ற பரிசுத்தம், எல்லையற்ற நீதி,எல்லையற்ற நன்மை, எல்லையற்ற உண்மை, எல்லையற்ற அன்பு, எல்லையற்ற இரக்கம், எல்லையற்ற பொறுமை ஆகிய எண்ணற்ற குணாதிசயங்களை அங்கீகரித்தல். இப்படி அங்கீகரித்து ஆராதிப்பது தேவன் மட்டுமே பூரணமானவர் என்று வெளிப்படுத்துகிறது. 

இரண்டாவதாக தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும் என்றால் தேவன் ஒப்பிடப்படமுடியாதவர்.  சங்கீதம் 95:3 “கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்“. அவருடைய மகிமையை யாரோடும் ஒப்பிடவே முடியாது. இந்த உலகத்தில் உள்ளவைகளுக்கு அப்பாற்பட்டவர். மனிதன் செய்யும் எந்த தேவர்களாலும் அந்த மகிமைக்கு நெருங்க முடியாது. தேவன் எல்லாவற்றிக்கும் மேலானவர். 

மூன்றாவதாக, தேவன் எல்லாவற்றையும் படைத்து ஆளுகிறார். சங்கீதம் 95:4-5 “பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று“. தேவன் தான் படைத்தவர். ஒன்றுமில்லாமையில் இருந்து நாம் காண்கிற காணாத அனைத்தயும் படைத்திருக்கிறார். எந்த மனிதனாலும் செய்ய முடியாத கிரியையை தேவனுடைய கரம் செய்தது. படைத்து மாத்திரம் அல்ல, படைத்த அனைத்து படைப்பையும் இன்று வரை முழுவதுமாக ஆளுகை செய்து, பாராமரித்து வருகிறார். ஆகவே படைப்புகளாகிய நாம் படைத்தவரை மட்டுமே ஆராதிக்க வேண்டும்.சங்கீதம் 95:6 “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு  முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்“.

நான்காவதாக, சங்கீதம் 95:7 கூறுகிறது, அவர் நம்முடைய தேவன். “அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே“. தேவனை ஆராதிக்கும் போது அவருடைய சமுகத்தில் நாம் இருக்கிறோம், அப்பொழுது அவர் நம்மோடு அவருடைய வார்த்தையின் மூலமாக நம்மிடத்தில் பேசுகிறார். அவருடைய வார்த்தையின் மூலமாக தன்னை நமக்கு வெளிப்படுத்தி, நம்மோடு உறவை ஏற்படுத்துகிறார். அவருடைய வார்த்தையை கேட்டு கீழ்ப்படியும் போது தேவன் நம் மீது பிரியமாயிருக்கிறார். ஏசாயா 66:2 “என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர்  சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்“.

மனிதனுடைய பிரதான வேலையே தேவனை ஆராதிப்பது மட்டும் தான். கூட்டாக கூடி ஆராதிப்பது அவசியமானது. அதை தவறவிடக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் சபையில் கூடி தேவனை ஆராதிப்பதை நிறுத்திவிடக்கூடாது. நாம் தேவனுடைய கரத்தில் இருக்கிறோம். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருக்கிறார். ஆகவே நாம் தேவனை தொழுதுக்கொள்வோம்.