Blog

10 Apr
0

1689 விசுவாச அறிக்கையின் வரலாற்று பிண்ணனி மற்றும் அதன் பயன்கள்

முன்னுரை

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்து வருகிறோம். கடந்த இதழிலும் கூட நாம் விசுவாச அறிக்கையின் தேவையைபற்றி படித்தோம். விசுவாச அறிக்கையின் தேவையைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதில் 1. வேதம் தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது என்றும் 2. வேதம், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கூறுகிறது என்ற அடிப்படை சாராம்சங்களை கொண்டுள்ளது என்பதை படித்து, விசுவாச அறிக்கை வேதத்தில் உள்ளதா? என்ற கேள்விக்கு வேத ஆதாரங்களுடன் விசுவாச அறிக்கைக்கு சான்றழித்தோம்.

இன்றைய நாட்களில் கிறிஸ்தவ சபைகள் அநேக வித்தியாசமான போதனைகளால் நிறைந்திருக்கிறது, எல்லா சபைகளும் வேதத்தையும், இயேசு கிறிஸ்துவையும் குறித்து விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் நம்முடைய கேள்வி வேதத்தையும் இயேசுவையும் குறித்து என்னவிதமான விசுவாசம் கொண்டிருக்கிறார்கள்? என்பதே. இதேபோலத்தான் எல்லா சத்தியங்களையும் வேதம் கூறும் வகையில் விசுவாசிக்கிறோமா என்பதை நிதானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காகவே நம் முன்னோர்கள் வேத அடிப்படையிலான விசுவாச அறிக்கையை தொகுத்து சபைக்கு வழங்கினார்கள்.

சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் வேதத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிற 1689 லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கையை பின்பற்றுகிறோம். இந்த 1689 விசுவாச அறிக்கையின் வரலாற்று பிண்ணனியை பின்வரும் பத்தியில் நாம் படிக்கலாம்.

வரலாற்று பின்னணி

பரிசுத்த வேதாகமத்தின் வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து வழங்குகிறது 1689 விசுவாச அறிக்கை. 1677-ம் ஆண்டில் மூப்பர்களையும், விசுவாசிகளையும் கொண்ட இங்கிலாந்தில் இருந்த பல சபைகள் இணைந்து இதை முதலில் வெளியிட்டன. 1644-1648 இடைப்பட்ட காலங்களில் இங்கிலாந்தையும், ஸ்காட்லாந்தையும் சேர்ந்த பியூரிட்டன் பெரியோர்கள் வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கையைத் ( Westminister Confession of Faith ) தொகுத்து வெளியிட்டனர். அதே வேளை காங்ரிகேசனல் சபை (Congregationalists) அமைப்பைத் தழுவியவர்களும் சவோய் விசுவாச அறிக்கையை (Savoy Declaration of Faith and Order) 1658 -வெளியிட்டனர். வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கை பிரஸ்பிடீரியன் சபை அமைப்பு முறையின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. திருச்சபையின் தன்மை, திருமுழுக்கு, திருவிருந்து, சபை அரசமைப்பு போன்ற விசயங்களில் அவர்களிலிருந்து வேறுபட்ட கோட்பாடுகளை பாப்திஸ்து விசுவாசிகள் கொண்டிருந்தனர். 1644-ல் பாப்திஸ்துகள் ஏற்கனவே ஒரு சுருக்கமான விசுவாச அறிக்கையை எழுதி வைத்திருந்தனர். காலங்கூடி வந்தபோது அவர்கள் வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கையையும், சவோய் விசுவாச அறிக்கையையும் தழுவி, பாப்திஸ்து கோட்பாடுகளின் அடிப்படையில் 1677-ல் ஒரு விசுவாச அறிக்கையை எழுதினர். இம்மூன்று விசுவாச அறிக்கைகளும் சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றியதால் பல விதங்களில் ஒன்றையொன்று ஒத்திருந்தன. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் அக்காலத்தில் அரசால் துன்புறுத்தப்பட்டதால் இவ்விசுவாச அறிக்கையை பாப்திஸ்துகளால் உடனடியாக வெளியிட முடியவில்லை. 1689-ல் அரசின் துன்புறுத்தல் நின்று வழிபாட்டு சுதந்திரம் கிடைத்தபோது 37 பாப்திஸ்து போதகர்கள் இணைந்து இவ்விசுவாச அறிக்கையை வெளியிட்டனர். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு இங்கிலாந்திலும், வேல்ஸ் தேசத்திலும் பார்டிகுலர் அல்லது கல்வினிச பாப்திஸ்து சபைகளின் (Particular or Calvinistic) விசுவாச அறிக்கையாக இதுவே இருந்தது. இது லண்டன் விசுவாச அறிக்கை என்றும் அழைக்கப்பட்டது. 1744-ல் வட அமெரிக்காவில் இருந்த கல்வினிச பாப்திஸ்து சபைகள் இதை அங்கீகரித்து ஏற்று பிலடெல்பியா விசுவாச அறிக்கை (Philadelphia Confession of Faith) என்ற பெயரில் பயன்படுத்தினர். லண்டனில் நீயூ பார்க் சாலை சபையில் போதகராக இருந்த சார்லஸ் ஹெடன் ஸ்பர்ஜன் 1853ம் ஆண்டில் தனது சபையிலும் தம்மைச் சார்ந்திருந்த சபைகளிலும் அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தி வேத சத்தியங்களில் வழி நடத்த 1689 விசுவாச அறிக்கையை மறுபடியும் வெளியிட்டார். இதற்கு எழுதிய முன்னுரையில் ஸ்பர்ஜன், “உங்கள் விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள். சத்தியத்தின் காரணமாக நமக்கு ஒரு கொள்கைச் சின்னம் தேவைப்படுகிறது. மகத்துவமான நற்செய்தியின் நோக்கத்தை நிறைவேற்றத் துணைபுரிய, அதன் முக்கிய கோட்பாடுகளுக்கு இச்சிறுநூல் தெளிவான சாட்சியாக விளங்கும்” என்று எழுதினார். இது போதிக்கும் வேத சத்தியங்களை விசுவாசிக்காத தெளிந்த மனச்சாட்சியுடன் எவரும் சபையில் அங்கத்தவராக இருக்க முடியாது என்றும் சொன்னார். திருச்சபை சீர்திருத்தத்திற்கு சீர்திருத்தக் கோட்பாடுகளின் அவசியத்தை உணர்ந்த சபைகள் இதை ஏற்றுப்பயன்படுத்தின. மூன்னூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தபோதும் இவ்விசுவாச அறிக்கை இன்று உலகெங்கும் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சீர்திருத்த பாப்திஸ்து சபைகளின் விசுவாச அறிக்கையாக விளங்குகிறது.

விசுவாச அறிக்கையின் பயன்கள்

  1. சபைப்போதகர்களும், சபை அங்கத்தவர்களும் வேதத்தை விட்டு விலகிப்போகாதபடித் தம்மைக் காத்துக் கொள்ள இது உதவுகிறது. இவ்விசுவாச அறிக்கையை பயன்படுத்தும் சபைகளில் இதனை ஏற்றுக்கொள்ளாத போதகர்களுக்கு இடமில்லை, அங்கத்தவர்களுக்கும் இடமில்லை. “தனக்குத் தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த இராஜ்யமும் பாழாய்ப்போகும்” என்று இயேசு சொன்னார். ஆர்மீனியனிசப் போதனைகள், பெலேஜியனீசப் போதனைகள், கெரீஸ்மெட்டிக் போதனைகள் என்று எல்லாவற்றையும் விசுவாசிக்கும் போதகர்களையும் அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு சபை எப்படி ஒரே சத்தியத்தில் கூடி ஜெபிக்கவோ, ஆராதிக்கவோ, ஊழியம் செய்யவோ முடியும்? ஆகவே, விசுவாச அறிக்கையை முறையாகப் பின்பற்றும் சபைகளில் கலப்படமான இறையியலுக்கு இடமிருக்காது.

    2. ஒரு சபை தனது போதக ஊழியத்தை இதன் அடிப்படையில் ஆராய்ந்து தன்னையும், தனது போதகர்களையும் காத்துக்கொள்ள முடியும். போதகர்கள் (வேதத்தில்) உண்மையுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் (2 தீமோத்தேயு 2:2) சொல்கிறார். அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைக் கொண்டவர்களாகவும், எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் செய்ய வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் (தீத்து 1:8) என்றும் சொல்லுகிறார். வேதாகமக் கல்லூரிகள் இத்தகைய மனிதர்களை உருவாக்குவதை எதிர்பார்க்க முடியாத இந்நாட்களில் விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி சபை தன் போதகர்கள் சத்தியத்தில் உண்மையுள்ளவர்களாகவும் அதை மட்டும் போதிக்கிறவர்களாகவும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள முடியும்.

    3. போலிப்போதனைகள் சபையை அணுகும்போது அவற்றை வேதரீதியில் ஆராய்ந்து அவற்றில் இருந்து சபையைப் பாதுகாத்துக் கொள்ள விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சபையில் சத்தியத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும் விசுவாச அறிக்கை துணைசெய்கிறது.

    4. விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி வேத சத்தியங்களை முறையாகப் போதித்து சபை மக்களை சத்தியத்தில் வளர்க்க முடியும். வினா விடைப் போதனையும் (Catechism) இதே வகையில் உதவும்.

    5. சபையில் ஒழுங்கை நிலைநாட்டி தேவையானபோது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசுவாச அறிக்கை துணை செய்கிறது. சத்தியத்தை விட்டு விலகிப்போகிறவர்களை இனங்கண்டு அவர்களைத் திருத்தவும், சபையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

    6. சத்தியத்தின் அடிப்படையில் அமையாத சபைக்கூட்டும். ஐக்கியமும், ஆத்மீக வளர்ச்சிக்கு உதவாது. விசுவாச அறிக்கை நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும், அவற்றை விசுவாசிப்பவர்களோடு சேர்ந்து நாம் ஐக்கியத்தில் வரவும். வளரவும் துணை புரியும்.

7. இறுதியாக நமது சபைகளுக்கு வரலாற்று ரீதியிலான ஒரு தொடர்ச்சியை (Historical Continuity) விசுவாச                   அறிக்கை அளிக்கிறது. நாம் காளான்கள் போல இன்று முளைத்து நாளை அழியப்போகிறவர்கள் அல்ல. நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது, என்ற ஒரு நம்பிக்கையையும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு புத்துணர்ச்சியையும் விசுவாச அறிக்கை அளிக்கிறது. நமது சீர்திருத்தத் தந்தையரும், பியூரிட்டன் பெரியவர்களும் வேதம் வெளிப்படுத்தும் இச்சத்தியங்களையே நம்பிப்போதித்து சபையை வளர்த்துள்ளார்கள், வளர்ச்சியும் கண்டார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஊக்கத்தோடு ஊழியம் செய்ய விசுவாச அறிக்கை உதவும். நமது சந்ததியினருக்கு நமது பிதாக்களின் விசுவாசத்தை விட்டுச் செல்லும் பாக்கியத்தை இது நமக்கு அளிக்கிறது.

முடிவுரை

இன்றைக்கு உலகத்தில் எல்லா காரியங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றம் நிறைந்த உலகத்திற்கு மாறாத சத்தியம் அவசியம், அந்த மாறாத சத்தியத்தை பிடித்துக் கொண்டு விசுவாசத்தில் வாழ தேவன் கிருபை செய்வாராக. ஆமென்!

Read More
25 Mar
0

ஏன் விசுவாச அறிக்கை திருச்சபைகளுக்கு தேவை?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். சத்திய வழி என்கிற இந்த காலாண்டு இதழில் நாம் தொடர்ச்சியாக விசுவாச அறிக்கையை குறித்து படித்துவருகிறோம். கடந்த இதழில் நாம் விசுவாச அறிக்கை என்றால் என்ன? மற்றும் நாம் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான நான்கு அடிப்படை காரணங்களை பார்த்தோம். விசுவாச அறிக்கை என்பது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இறையியல் புத்தகம். இறையியல் மிக அவசியமானது. ஏனென்றால், வேதாகமம் அடிப்படையில் ஒரு இறையியல் புத்தகம், இறையியல் மூலமாகத்தான் தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தில் வளருகிறார்கள் (அப்போஸ்தலர் 2:42, 1பேதுரு 2:2). விசுவாச அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களில் 1. வேதம் மட்டுமே தெய்வீக அதிகாரத்தை பெற்றிருக்கிறது. 2. வேதமே விசுவாச அறிக்கையின்மேல் அதிகாரம் கொண்டுள்ளது. 3. விசுவாச அறிக்கை ஒரு காலமும் வேதத்தின் போதுமானத் தன்மையை குறைத்து மதிப்பிடவில்லை 4. எல்லா விசுவாச அறிக்கையையும் நிராகரிப்பது சுய முரண்பாடாய் காணப்படுகிறது என்று படித்தோம்.

இந்த இதழிலும் கூட நாம், ஏன் விசுவாச அறிக்கை திருச்சபைகளுக்கு தேவை? என்பதைக் குறித்துப் பார்க்கயிருக்கிறோம். மிகக் குறிப்பாக, விசுவாச அறிக்கை ஏன் அவசியத் தேவை என்பதை தெரிந்தால் தான் அதை பயன்படுத்த முடியும். தேவையே இல்லாத ஒன்றை ஒருபோதும் பயன்படுத்த இயலாது. ஒரு குறிப்பிட்ட பொருளின் தேவையை அறியும்போது தான் அதை சரியாக பயன்படுத்த முடியும்.

விசுவாச அறிக்கையின் தேவையை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு முன்பாக வேதத்தின் சில அடிப்படை சாராம்சங்களை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். வேதம் இரண்டு விதமான காரியங்களை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது, தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது. இரண்டாவதாக, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்கிற நெறிமுறைகளையும் கொண்டுள்ளது.

 

  1. வேதாகமம் தொடர் வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளது:

மனிதனுடைய ஆத்தும இரட்சிப்பிற்கு வேதத்தின் தொடர் வரலாற்று நிகழ்வுகளை அறிவது அவசியமானது. வேதத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வும் மனிதனுடைய இரட்சிப்பு நிறைவேறுவதற்காக நிகழ்ந்த நிகழ்வாக இருக்கிறது. தேவன் இந்ந உலகத்தை செம்மையானவையாக படைத்து, ஆணும் பெண்ணுமாக மனிதர்களை படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அவர்கள் கைக்கொள்ளும்படியாக கட்டளைகளை விதித்தார். அவர்களோ அவைகளை கைக்கொள்ளாமல் தேவனோடு உள்ள உறவை இழந்து, பாவம் செய்து, தேவனுக்கு முன்பாக குற்றவாளியானார்கள். இப்படி தேவனுடைய கோபத்தை சுமக்கிற மனிதனுக்கு விடுதலையை தேவனே ஏற்படுத்தி இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்திற்குப்பின் வேதாகமத்தில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வர வழிவகுக்கிறது. இதற்காக தேவன் ஒரு சந்ததியை தேர்வு செய்து, அவர்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி அந்த சந்ததி எப்படியாக செழிக்கிறது, தேவனோடு எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்பதைத்தான் நாம் பழைய ஏற்பாடு முழுவதுமாக வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த அன்று எம்மாவு ஊருக்கு போகிற இரண்டு சீஷர்களிடம் என்ன சொன்னார்? பழைய ஏற்பாட்டின் அனைத்து நிகழ்வுகளும் இயேசு கிறிஸ்துவை குறித்து பேசுகிறது என்று விளக்கப்படுத்தினார். இயேசுவே தன்னைப் பற்றி கூறியுள்ள வாக்குத்தத்தங்கள், தீர்க்கதரிசனங்கள், பலிகள் எப்படி இயேசு கிறிஸ்துவில் அடங்கியிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார். அதேபோல இயேசுவின் பாடு, மரணம், உயிர்தெழுதலும் பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவையே பழைய ஏற்பாடு முழுவதும் மையமாக வைத்து எழுதப்பட்டது என்று விளக்கப்படுத்தினார்.

பழைய ஏற்பாடு காலவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாசிக்கும் போது தேவன் எப்படி ஒவ்வொரு காலங்களிலும் செயல்பட்டிருக்கிறார். அவருடைய நோக்கம் எப்படிப்பட்டதாயிருந்தது என்று வாசிக்கிறோம். வரலாற்று பகுதியை வாசிக்கும் போது தேவன் வரலாற்றின் நிகழ்வுகளிலும் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். இன்று அநேக நவீன வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றில் தேவனுடைய செயலை நிராகரிக்கிறார்கள். புதிய ஏற்பாட்டை வாசிக்கும்போது, நாம் இயேசு கிறிஸ்து நமக்காக கடந்த காலத்தில் மீட்பின் பணியை எப்படி செய்து முடித்தார் என்பதை திரும்பி பார்த்து, அவருடைய இரண்டாம் வருகைக்காக காத்திருக்கிறோம் என்கிற கால நிகழ்வுகளை புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படியாக வேதத்தின் காலவரிசையின் அடிப்படையில் படிக்கும்போது. வேதம் முழுவதும் இயேசு கிறிஸ்து எப்படி மையமாக இருக்கிறார் என்பதை உணர முடியும்.

 

  1. வேதம்: மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும் கூறுகிறது:

வேதாகமம் தேவனுடைய பரிசுத்த நீதியை வெளிப்படுத்தி, பாவியான மனிதன் எவ்வாறு தன்னை படைத்த தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்று கூறுகிறது. வேதாகமம் தேவனுடைய பரிசுத்தத்தால் நிறைந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். தேவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே வேதத்தின் அடிப்படையான தாற்பரியமாக இருக்கிறது. வேதம், மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று போதிக்கிறது என்றால், மனிதன் முதலாவது சரியான விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். சரியான விசுவாசம் மட்டுமே மனிதனை தேவனுடைய வழியில் வாழ வழிவகுக்கும். ஒரு செயலை செய்கிறோம் என்றால், அந்த செயலைப்பற்றியதான அறிவு அவசியம். வேதத்தில் சொல்லப்பட்ட வழிகளில் வாழவேண்டும் என்றால், வேத கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால் வேதத்தைப் பற்றியதான சரியான அறிவு அவசியம். ஏனென்றால் வேதம் மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று போதிக்கிறது. நாம் விசுவாசிக்கிறதை அறியாமல் செயலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் அது ஆபத்துகளை விளைவிக்கும்.

உதாரணமாக, 1 சாமுவேல் 17ம் அதிகாரத்தில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக பாளயமிறங்கினார்கள். கோலியாத்தின் நிமித்தம் சூழல் கொடியதாய் மாறுகிறது. சூழ்நிலையை கண்டு சவுல் ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் கோலியாத்தைக் கொன்றால் வெகுமதி என்று அறிவிக்கிறான். இது விசுவாசத்தையும், போதனையையும் அறியாமல் செயல்படும் காரியம். இப்பொழுது தாவீதை பார்ப்போம். தாவீது வேதத்தையும், அதன் போதனையையும் அறிந்து விசுவாசத்தினால் தேவன் மீது விசுவாசத்தைக் கொண்டு வெற்றி சிறந்தான். இப்படி நாம் வேதத்தின் மீதும், அதன் போதனைகள் மீதும் விசுவாசமும், அறிவும் இல்லாமல் இருந்தால் சரியான முறையில் வேதம் எதிர்பார்க்கும் வழிகளில் வாழ முடியாது.

வேதத்தின் போதனைகளை அறிவதின் நன்மைகள் பின்வருமாறு:

  1. தேவன் யார் என்று போதிக்கிறது: தேவன் யார் என்று தெரியாமல், அவரை ஆலயத்தில் ஆராதிப்பது விக்கிரக வழிபாட்டிற்கு சமமானது. சரியான முறையில் தேவனை அறியாமல், வேதபூர்வமாக தேவனை ஆராதிக்க முடியாது. தேவனை ஆராதிக்க வரும்போது, தேவனைப்பற்றி வேதம் என்ன போதித்திருக்கிறது என்பதை அறியாமலும், தேவனைப்பற்றி வேதம் கூறாத எண்ணத்தைக் கொண்டிருந்தாலும் நாம் தேவனை ஆராதிக்கவில்லை என்றாகிவிடும். இன்று அநேகர் வேதம் கூறும் வகையில் தேவனை விசுவாசிக்கிறதில்லை. அநேகர் பழைய ஏற்பாட்டில் தேவன் பிதாவாக இருக்கிறார், சுவிசேஷத்தில் தேவன் குமாரனாயிருக்கிறார், இன்று தேவன் பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறார் என்று எண்ணி திரித்துவத்தை நிராகரிக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் தேவன் இல்லை என்று சொல்லுகிற அநேகர் உண்டு. வேதம், தேவன் திரித்துவராயிருக்கிறார், அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று போதிக்கிறது. இதை அறிந்து நாம் விசுவாசிக்க வேண்டும்.
  2. மனிதனுடைய நிலையை வெளிப்படுத்துகிறது: மனிதன் பாவியாக இருக்கிறான். பாவம் என்பது தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதாகும் 1 யோவான் 3:4. பாவத்தினால் மனிதன் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாக இருக்கிறான். தேவனுடைய சுட்டளைகளை மீறினவனாய், தேவனுடைய நித்திய கோபாக்கினைக்கு பாத்திரவானாய் இருக்கிறான். இப்படிபட்ட நிலையில் இருக்கிற மனிதனுக்கு தேவன் நித்திய ஜீவனை எப்படி கொடுக்கிறார் என்பதை வேதம் போதிக்கிறது.
  3. இரட்சிப்பின் அவசியத்தை போதிக்கிறது: மனிதன் பாவம் செய்து தேவனோடு உள்ள உறவை இழந்தான், மனிதனுக்கு இந்த உறவை சரி செய்ய வேண்டுமென்ற எண்ணமேயில்லை. அப்படிப்பட்ட நிலையில் தேவன், மனிதன் மறுபடியும் தன்னோடு உறவுக்கொள்ள வேண்டுமென்பதற்காக தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பாவிகளுக்காக மரிக்கச் செய்து, சிலுவையில் மரித்து உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் தேவனுடைய நித்திய கோபத்தில் இருந்தும். பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலையையும், நித்திய ஜீவனையும் இலவசமாய் கொடுக்கிறார். இந்த போதனைகள் தெரிந்தால் தான் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பது புரியும்.

இவைகள் எல்லாம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையானது. இவைகளை தான் பவுல் விசுவாசம் என்றும் உபதேச சட்டம் என்றும் ரோமருக்கு எழுதின நிருபத்தில் கூறுகிறார். இவைகள் தான் விசுவாச அறிக்கையில் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. விசுவாச அறிக்கையில் வேதத்தினுடைய அடிப்படையான போதனைகள் எளிமையான முறையில், வேதம் ஏன் அவசியம், சுடவுள் எப்படிப்பட்டவர், அவருடைய செயல்களும் கிரியைகளும் எப்படிப்பட்டது, மனிதன் யார், அவனுடைய நிலை என்ன, தேவன் மனிதனோடு எப்படி தொடர்புகொள்கிறார் போன்ற அநேக சத்தியங்களை வேத ஆதாரத்துடன் சுருக்கமாக ஒவ்வொரு தலைப்பின் கீழாக தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

விசுவாச அறிக்கை வேதத்தில் இருந்து எடுத்த போதனைகளின் உள்ளடக்கமாக இருக்கிறது. நாம் வேதத்தை, கடவுளை, இரட்சிப்பின் கோட்பாடுகளை வேதத்தின் அடிப்படையில் எப்படியாக நம்புகிறோம் என்பதை படிப்பதற்கும், சத்தியத்தை பாதுகாப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். விசுவாச அறிக்கை விசுவாச அறிவை வளர்க்க உதவுகிறது. விசுவாசிகளையும் அவிசுவாசிகளையும் வரையறுக்க உதவுகிறது.

விசுவாச அறிக்கை என்று சொல்லும்போது மற்றொரு கேள்வி மனதில் எழும்புகிறது. விசுவாச அறிக்கை வேதத்தில் உள்ளதா?

நாம் பழைய ஏற்பாட்டில் உபாகமம் 6:1-16 வசனங்களை வாசிக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களின் விசுவாசத்தையும் அந்த விசுவாசத்தை தங்கள் தலைமுறைகளுக்கு அவர்கள் போதிக்க வேண்டும் என்பதையும் உபாகமம் 6:10-15 வசனங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அந்த விசுவாசம் இஸ்ரவேல் தேசத்தை பாதுகாக்கும் என்றும் கர்த்தர் கூறுகிறார்.

அந்த விசுவாசம் உபாகமம் 6:4. 5-ல் காணலாம்:

இஸ்ரவேலே, கேள் : நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் அன்பு கூருவாயாக.

ஒவ்வொரு யூதனும் நாளுக்கு இரண்டு முறை இந்த வசனத்தை சத்தம்போட்டு சொல்ல வேண்டும். குறிப்பாக இஸ்ரவேல் ஜனங்களின் சிறையிருப்புக்கு பின்னர் யூதர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்விலும், ஜெப ஆலயங்களிலும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்த விசுவாச அறிக்கை தேவனுடைய தன்மையையும் மனிதனுடைய பொறுப்பையும் அனுதினமும் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தது. இதை நாம் புதிய ஏற்பாட்டில் தேவன் ஒருவரே என்ற விசுவாச அறிக்கையை பயன்படுத்தியிருந்தார்கள் என்று காணலாம்.

 

மாற்கு 10:18 – அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.

மாற்கு 12:29-இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்; இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

ரோமர் 3:30- விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

1கொரிந்தியர் 8:6 – பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது. அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

எபேசியர் 4:6 – எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

தீமோத்தேயு 2:5 – தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

தேவன் ஒருவரே என்ற அடிப்படையான விசுவாசம் தொடர்சியாக வேதாகமத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் தேவன் ஒருவரே என்கிற விசுவாச அறிக்கை சற்று விரிவடைகிறதை காணலாம்.

ரோமர் 10: 8,9 – இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது. இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

இது அடிப்படையான விசுவாசம். இதை அறிக்கை செய்ய வேண்டும் என்கிற கட்டளையை கொண்டுள்ளது. அறிக்கையிடுதல் என்பது பொதுவாக எல்லாருக்கும் முன்பாக கிறிஸ்துவோடு உள்ள உறவை தெரிவிப்பதாகும்.

தீமோத்தேயு 6: 11,12 – நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

 

யோவான் 9:22 – அவனுடைய தாய் தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்கு முன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.

 

1 யோவான் 4: 15;42 – இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்; மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

 

மத்தேயு 10:32 – மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.

இன்னும் அதிகமாக புதிய ஏற்பாட்டில் விசுவாச அறிக்கையானது எல்லா அடிப்படை கொள்கைகளையும் ஒன்றாக இணைத்து அறிக்கையாக கொடுத்திருக்கிறது.

 

ரோமர் 10:8-9 – இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது. இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வாரத்தையே. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

1 கொரிந்தியர் 12:3 – ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியனாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

 

1 கொரிந்தியர் 8:5,6 – வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு. இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

1 தீமோத்தேயு 2:5 – தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

1 கொரிந்தியர் 15:3-8-  நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.

பிலிப்பியர் 2:5-11-  கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷசாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழுங்கால்யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

ஆகவே நாம் பழைய புதிய ஏற்பாடுகளில் விசுவாச அறிக்கை உள்ளது என்று சான்றளிக்கிறோம்.

முடிவுரை:

விசுவாச அறிக்கை விசுவாச அறிவை வளர்க்கிறது. விசுவாசத்தின் ஒற்றுமையை தருகிறது, சபையை கள்ள போதனைகளில் இருந்து காப்பாற்றுகிறது. அடுத்த தலைமுறைக்கு விசுவாசத்தை எடுத்து செல்லுகிறது. வரலாற்றில் உள்ள தேவ மனிதர்களோடு நம்மை இணைக்கிறது, தேவனுடைய தன்மையையும், மனித பொறுப்புகளையும் தொடர்ச்சியாக ஞாபகப்படுத்துகிறது. ஆகவே விசுவாச அறிக்கை இன்றைக்கு சபைக்கு மிகவும் அவசியமானதாய் இருக்கிறது, ஆமென்!

Read More
02 Sep
0

மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள்

I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள் 

அதிகாரம் 1

  1. ஒளியில் நடப்பவன்  [Iயோவான் 1:6]
  2. ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன்  [Iயோவான் 1:7]
  3. அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன்  [Iயோவான் 1:8]
  4. அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10]

 

அதிகாரம் 2

  1. தொடர்ச்சியாக கட்டளைகளை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:3, 3:24]
  2. தொடர்ச்சியாக வசனத்தை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:5]
  3. அவர் நடந்ததுபோல தானும் நடப்பவன்  [Iயோவான் 2:6]
  4. சகோதரனை பகைக்காதவன்  [Iயோவான் 2:9]
  5. சகோதரனிடத்தில் அன்பு கூறுபவன் [Iயோவான் 2:10, 3:10]
  6. உலகத்தில் அன்பு கூறாதவன் [ Iயோவான் 2:15]
  7. உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாதவன்  [Iயோவான் 2:15]
  8. அவன் தேவனின் சித்தத்தின்படி செய்பவன் [Iயோவான் 2:17 ]
  9. அவன் கிறிஸ்தவன் சரீரத்தில் நிலைத்திருப்பவன்  [Iயோவான் 2:19]
  10. சுவிசேஷத்தின் சத்தியத்தை அறிந்ததினால் அபிஷேகம்பெற்றவன் [Iயோவான் 2:20, 21]
  11. அவன் இயேசுவை மேசியா என்று அறிந்தவன் [Iயோவான் 2:22, 5:1]   
  12. கிறிஸ்துவில் நிலைத்திருப்பவன் (செடியும் – கொடியுமாக யோவான் 15)   [Iயோவான் 2:27-28]
  13. அவன் தொடர்ச்சியாக நீதியை பயிற்சிப்பவன் [Iயோவான் 2:29; 3:10]

 

அதிகாரம் 3

  1. அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல் தன்னையும் சுத்திகரித்துக்கொள்பவன்  [Iயோவான் 3:3.]
  2. தொடர்ச்சியாக பாவம் செய்யாதவன் [Iயோவான் 3:6; 5:18.]
  3. அவர் நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல தானும் நீதியுள்ளவராய் இருக்கிறான் [Iயோவான் 3:7.]
  4. அவன் தேவனால் பிறந்தபடியால் பாவம் செய்யான். ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் இருக்கிறது [Iயோவான் 3:9.]
  5. சகோதரனிடம் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:14.]
  6. வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:18-19.]
  7. பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருப்பதினால் இரட்சிப்பின் நிச்சயத்தை கொண்டவன் [Iயோவான் 3:24, 4:2]  

 

 அதிகாரம் 4

  1. அவன் மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கைபண்ணுகிறவன் [Iயோவான் 4:2]
  2. அவன் அந்திகிறிஸ்துவின் ஆவியை அறிந்தவன் [Iயோவான் 4:3-4]
  3. அவன் அப்போஸ்தல உபதேசத்தை கேட்டு பெற்றுக்கொண்டவன் [Iயோவான் 4:6]
  4. தேவ அன்புள்ளவன் [Iயோவான் 4:7-8]
  5. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுபவன் [Iயோவான் 4:15]
  6. தேவ அன்பில் நிலைத்திருப்பவன் [Iயோவான் 4:16]
  7. அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அன்பு கூறுகிறோம் [ Iயோவான் 4:19]

அதிகாரம் 5

  1. அவன் தேவனால் பிறந்தவன் [Iயோவான் 5:1]    
  2. உலகத்தை ஜெயித்தவன் [Iயோவான் 5:4]
  3. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பவன் [Iயோவான் 5:5 ]

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இதை வாசித்த உங்கள் வாழ்வில் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் காணப்படுகிறதா?

இல்லையென்றால் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

 

Read More
29 Aug
0

நீதிமானின் வழியும், துன்மார்க்கனின் வழியும்

சங்கீதம் 1:6
“கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கனுடைய வழியோ அழியும்.”

 

அ. கர்த்தர் நீதிமான்களின் வழியை துள்ளியமாக அறிந்திருக்கிறார்:

 

பரலோகத்திலிருக்கும் அன்பின் தேவன் நீதிமான்களின் வழியை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சமாதானம் உண்டு. அவர்களை அவர் பாதுகாத்து பராமரிக்கிறார். எபிரேய மொழியில் இன்னும் தெளிவாக, “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்துகொண்டிருக்கிறார்” என்று இருக்கிறது. “அவர் தொடர்ந்து அவர்களுடைய வழியை காண்கிறவராக இருக்கிறார். ஒருவேளை சில நேரங்களில் அந்த வழி மூடு பனியாலும் இருளாலும் நிறைந்திருந்தாலும், ஆண்டவர் அதை அறிந்திருக்கிறார்” (ஸ்பர்ஜன்). அறிந்திருக்கிறார் என்றால் உன்பேரில் அவர் மிக நெருக்கமாகவும், அன்பாகவும், இருக்கிறார் என்று பொருள். உனக்கும் ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு சரியான இருக்கிறது என்று பொருள். நீதிமான்களின் வழி என்பது தெய்வபக்தியான மனிதனுடைய வழி. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிறவனுடைய வாழ்க்கைதான் ஆசீர்வாதமாக இருக்கும். அவன்தான் பாக்கியவான். (வசனங்கள் 1-2)

 

ஆ. துன்மார்க்கனுடைய வழியோ அழியும்:

 

தெய்வபக்தியற்ற ஒரு துன்மார்க்கனுடைய வழி எப்படி இருக்குமென்றால் அக்கிரமம் நிறைந்ததாகவும், அழிவுக்கே நேரே அணிவகுத்துச் செல்லுகிறதாகவும் இருக்கும். அக்கிரமக்காரனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால், அவன் தேவனுடைய கட்டளைகளை தள்ளுகிறவனாகவும், மீறுகிறவனாகவும் இருக்கிறான். அவனுடைய அந்த விசாலமான வழி, அந்த வழி அவனுக்கு கொடுக்கும்  அவன் தற்காலிகமாக சௌகரியமாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் கடைசியில் துன்மார்க்கர்களுடைய முடிவு அழிவு. அதைத்தான் மத்தேயு 7:23இல் வாசிக்கிறோம், அங்கே இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிறம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.”

நீதிமான் என்பவன் மன்னிக்கட்ட மனுஷன்.

 

சங்கீதம் 32:1-2 சொல்லுகிறது,
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,
எவனுடைய பாவம் மூடப்பட்டதோ,
அவன் பாக்கியவான்.
எவனுடைய அக்கிரமத்தைக்
கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ,
எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ,
அவன் பாக்கியவான்.”

Read More