Blog

15 Oct
0

திருச்சபை கூடிவருதலை தடை செய்த தேவன்

ஆசிரியர் : போதகர் G. மார்க்

உலக நாடுகள் அனைத்திலும் மரண ஓலங்களும் பயங்களும் சூழ்ந்த இக்கட்டான நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லா மனித இனத்தினுடைய பாவத்திற்கு எதிரான தனது கோபத்தையும், நீதியையும் இந்த கொரோனா நோயின் மூலம் முழு உலகத்திற்கும் காண்பித்து வந்தாலும், மறுபுறம் தேவன் இதன் மூலம் தனது திருச்சபையும் கற்க வேண்டிய சில அடிப்படை படிப்பினைகளையும் வெளிபடுத்தி இருக்கிறார் என்பதை ஒருபோதும் நாம் மறுக்க முடியாது. இந்த கொரோனா நிகழ்வு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு தரும் எச்சரிப்பும், காரியமும் என்ன என்பதை வேத அடிப்படையில் சுருக்கமாக பார்க்க உங்களை அழைக்கிறேன். 

சங்கீதம் – 42 : 1 – 4

வ- 1 – 3 – சபை கூடிவருதலை தடை செய்யும் தனிப்பட்ட பாவ வாழ்க்கை

சங்கீதம் 3, 42, 63 – இந்த 3 சங்கீதங்களும் ஒரே பின்னணியில் எழுதப்பட்டவை. இந்த சங்கீதத்தின் பின்னணி- தாவீது தனது முதிர்வயதில் தனது குமாரானாகிய அப்சலோமிற்கு தப்பி வனாந்திரதிற்கு கடந்து போகும்போது பாடிய சங்கீதம் (2சாமுவேல்-15,16). இங்கே தாவீது மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறார். தனது சொந்த மகனே ராஜ்ஜியபாரத்திற்காக தன்னை அழிப்பதற்கு துடிக்கின்ற நிலை, இவ்வளவு காலம் தான் ஆட்சிசெய்து பராமரித்து வந்த சுய ஜனங்களே தனக்கு எதிராக திரும்பிய நிலை, தன்கூட இருந்த தனது நம்பிக்கைக்குரிய நண்பர்களே  தனக்கு துரோகம்செய்து வஞ்சித்த நிலை, ஆக மொத்தம் எல்லாபக்கத்திலும் சுற்றிலும் நெருக்கபட்டு, தானும் தன்கூட இருக்கின்ற மனிதர்களும் முற்றிலும் சங்கரிக்கபடவுள்ள சூழ்நிலையில் தாவீது இந்த சங்கீதத்தை இயற்றுகிறார்.

மரணத்திற்கு ஏதுவான அழிவில் நின்றுகொண்டு தாவீது இப்படியாக கூறுகிறார் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோலதேவனேஎன் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.” 

வனாந்திரத்திலே இருக்கிற தாவீது பல்வேறு வனவிலங்குகளை பார்க்ககூடிய சூழ்நிலையில் இருக்கிறார். அங்கே தண்ணீர் தடங்களை தேடி ஓடுகிற மானை பார்க்கிறார். பொதுவாக மான்கள் சிங்கத்தின் பிடியில் சிக்கும்போழுது கதறுவதை காட்டிலும், தண்ணீர் உள்ள இடத்தை தேடி வெகுதூரம் கதறி ஓடும். அப்படிப்பட்ட ஒரு  மானின் கதறுதலை தாவீது கவனிக்கிறார். அந்த மானை பார்க்கும்பொழுது தனது நிலையும் அந்த மானைப்போல இருப்பதாக உணருகிறார். இங்கே தாவீது தேவனுக்குள்ளான தனது ஆவிக்குரிய நிலையை ஆராய்ந்து பார்க்கிறார். கடவுளுடைய சமூகத்தை உணர முடியாமல், கடவுளுடைய உறவிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டவராக தாவீது தன்னை உணருகிறார். மான் தண்ணீருக்காக கதறுவது போல இங்கே தாவீது தேவனுடைய உறவுக்காக அவருடைய பிரசன்னதிற்காக கதறுகிறார். தேவன் தன்னோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கையற்ற நிலையில் ஆவிக்குரிய நிலையில் வெறுமையாய் இருப்பதை போல உணருகிறார். 

இரண்டாவது வசனத்தில் நாம் பார்க்கும் போது என் “ஆத்துமா தேவன்மேல்ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது” ஆவிக்குரிய வெறுமையில் உள்ள தாவீது இங்கே தனது ஆவிக்குரிய தாகத்தை வெளிப்படுத்துகிறார். தனது ஆத்துமா நிம்மதியற்று பலவீனப்பட்டு இருக்கிறது என்கிறார். தனது வாழ்வில் கடவுளுடைய வழிநடத்துதலை உணர முடியவில்லை. தேவனை விட்டு தான் வெகுதூரம் பிரிக்கப்பட்டதாக தாவீது உணர்கிறார். 

ஏன் தேவனுடைய உறவில் வெறுமையையும், நிம்மதியற்ற நிலையையும் இவ்வாறு உணர்கிறார்? 2 வது வசனத்தின் பின்பகுதியில் தாவீது சொல்கிறார் “நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” 

தாவீது தேவனுடைய பிரசன்னத்தை உணராததற்கும், உள்ளான வாழ்வின் வெறுமைக்கும், நிம்மதியற்ற நிலைக்கும் காராணம் தான் தேவனுடைய சந்நிதியிலிருந்து விலக்கப்பட்டிருகிறேன் என்றும் தான் தேவனுடைய வாசஸ்தலத்திலிருந்து துரத்தபட்டிருக்கிறேன் என்று உணர்ந்ததினால்தான். தாவீதை சுற்றி பல்வேறு ஆபத்து நிறைந்த பிரச்சனைகள் இருந்தாலும், தாவீது தான் தேவ சந்நிதியிலிருந்து விலக்கப்பட்டதற்காகவும் தேவனுடைய ஆராதனையிலிருந்து புறம்பாக்கப் பட்டதற்காகவும் துக்கமும் மன வேதனையும்  அடைகிறதை இங்கு பார்க்கிறோம். தாவீது இங்கு ஏன் தேவனுடைய சந்நிதியிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்? ஏன் ஆவிக்குரிய வெறுமையில் உள்ளார்? ஏன் அவருக்கு தேவனுடைய உறவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது? வசனம் மூன்றிலே அதற்ககான காரணத்தை கூறுகிறார்.

வ-3- உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால்இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.  

தாவீது அப்சலோமுக்கு பயந்து வனாந்தரத்தில் நடந்து வரும்போது அங்கே சிமேயி என்னும் ஒருவன் தாவீதை தூஷிக்கிறதை நாம் பார்க்கிறோம் (2சாமுவேல்- 16). இஸ்ரவேலின் தேவன் உன்னை கைவிட்டு விட்டார் என்று தாவீதைப் பார்த்து சிமேயி கூறுகிறான். நீ சிந்தின இரத்த பழிகளுக்கு தக்கதாக தேவன் உனக்கு நீதி செய்தார். தேவன் உன்னை விட்டு விலகினார். உன் அக்கிரமத்தை உன்மேல் தேவன் திரும்ப பண்ணினார், உன் வாழ்க்கையில் தேவன் இல்லையென்று என்று கூறுகிறான். தாவீது சிமேயின் வார்த்தைகளை மறுத்து பேசவில்லை. அவனை எதிர்க்கவில்லை. மாறாக அங்கு அமைதி காக்கிறார். தாவீதின் சேவகன் அபிசாய் சிமேயின் வார்த்தைகளினால் அவனை கொல்ல எத்தனித்திருந்தும் தாவீது அபிசாயை தடை செய்கிறார். தேவன் தன்னை சிமேயி தூஷிக்கும்படியாக கட்டளையிட்டுருக்கிறார் என்று தாவீது கூறுவதைப் பார்க்கிறோம். 

தாவீது இங்கு தனது பாவ நிலையை ஆராய்ந்து பார்க்கிறார். தேவனுக்கு விரோதமாக வாழ்ந்த பாவ வாழ்க்கையை குறித்து துக்கப்படுகிறார். இங்கு தேவனுடைய வாசஸ்தலத்திலிருந்தும், அவரை ஆராதிப்பதிலிருந்தும் துரத்தப்பட்டதற்கு தனது தனிப்பட்ட பாவ வாழ்க்கையே காரணம் என்று உணருகிறார். பத்சேபாளினிடத்தில் துணிகரமான விபச்சாரம், உரியாவை வஞ்சகமாக கொலை செய்தல், தனது பிள்ளைகளை தேவ பயத்தில் வழிநடத்தாமை இப்படிப்பட்ட தனது பல்வேறு பாவ வாழ்க்கையின் நிமித்தம் தேவ சமுகத்திலிருந்து தான் துரத்தப்பட்டிருக்கிறேன் என்று உணருகிறார். எனது தனிப்பட்ட பாவமே மக்கள் மத்தியில் தேவனுடைய நாமம் தூஷிக்கும் படியாக இருக்கிறது என்று அறிக்கையிடுகிறார். தனது தேசமும், தனது சொந்த மகனும் தன்னை அழிக்க தேடுகிற நிலையில், தான் முதலாவது தேவ சந்நிதியிலிருந்து, அவருடைய வாசஸ்தலத்திலிருந்து பிரிக்கப்பட்டதை தாங்க முடியாததாக வலியாக உணருகிறார். தனது தனிபட்ட பாவ வாழ்க்கையே தன்னை தேவனுடைய உறவிலிருந்தும், அவருடைய ஆராதனையிருந்தும், பிரித்திரிக்கிறது என்று அறிக்கையிடுகிறார். 

இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ சூழ்நிலையும் இவ்வாறு தான் உள்ளது. உலகம் முழுவது தேவன் திருச்சபை ஆராதனையை நிறுத்தி வைத்திருக்கிறார். விசுவாசிகளாகிய நீங்களும் நானும் திருச்சபை கூடி வருதலை விட்டு விட்டோம். தேவன் நம்மை அவரை ஆராதிக்க வராதபடி தடை செய்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? கொரோனா வைரஸ் என்று நீங்கள் சொல்லலாம். ஒரு வகையில் இந்த கொரோனா என்னும் கொள்ளை நோய், தேவனை அறியாத, விசுவாசிக்காத ஜனங்களுக்கு அவருடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்துகிறதாய் இருந்தாலும் பாவத்தை தண்டிக்கிற தேவன் ஒருவர் உண்டு என்று கூறினாலும் மறுபுறம் திருச்சபை மக்களின்  மீதான தேவனது கோபத்தையும் இது காட்டுகிறது. 

ஆறு நாளும் தனது இஷ்டத்திற்கு வாழ்ந்துவிட்டு எல்லா அக்கிரமங்களையும், அநியாயங்களையும் செய்துவிட்டு ஏழாவது நாள் பக்திமான் மாதிரி ஆலயத்திற்கு வந்து தேவன் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கனும்னு எவ்வளவுபேர் வருகிறீர்கள்? பல வருடங்களா பல மாதங்களா கடவுளுடைய வார்த்தையை கேட்டும் தொடர்ச்சியாக உங்கள் இருதயத்தை கடினபடுத்தி அவருடைய வார்த்தையை அசட்டை செய்கிற உங்கள ஏன் அவர் இன்னும் தமது திருச்சபையில் அனுமதிக்கனும்? திருச்சபை கூடிவருதல் தடைபட்டு போனதற்கு உங்களுடைய தனிபட்ட பாவ வாழ்க்கைதான் முதல் காரணம். தேவனுடைய பிள்ளையென்று சொல்லிக்கொண்டு துன்மார்க்கனைபோல இந்த உலகத்துக்கு ஒத்து வாழக்கூடிய உன்னை ஏன் தேவன் தனது திருச்சபையில் வைத்து இருக்கனும்? தேவன் மறுபடியும் திருச்சபைகளை திறக்க வேண்டுமென்றால் முதலாவதாக தேவனுக்கு எதிரான உங்கள் தனிப்பட்ட பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி தாவீதைப்போல அவரிடம் இரக்கத்திற்காக மன்றாடுங்கள்.

வ- 4 – சபை கூடிவருதலை தடை செய்யும் திருச்சபையின் பாவ வாழ்க்கை

முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்துகூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனேஇவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது

தனது பாவத்தின் நிமித்தமாக தேவனது சமுகத்திலிருந்தும், அவரது ஆசரிப்புக்கூடார ஆராதனையிலிருந்தும் துரத்தப்பட்ட தாவீது அதற்காக துக்கப்பட்டு தனது பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புகிறான்.  இங்கே 4 வது வசனத்தில், தாவீது தான் கடந்தகால சபையாகக்கூடி ஆராதித்த ஆராதனையின் ஆசீர்வாதங்களையும், தேவ ஜனங்களாக சபைகூடி அனுசரித்த பண்டிகைகளையும் நினைவுகூறுகிறார்.

தேவாலயத்திற்குப் போய்வருவேனே– பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரம் என்பது தேவ மக்கள் தேவனுக்காக ஆராதனையையும் பண்டிகையையும்  ஆசரிக்கிற இடம். அங்கே பரிசுத்த தேவன் வாசம்செய்து தனது மகிமையை வெளிப்படுத்தி வந்தார். ஆசாரிப்பு கூடாரம் தேவனுடைய வார்த்தையான அவரது நியாயப்பிரமாணம் மகிமையாய் உயர்த்தபடுகிற இடம். மேலும் பலிகளும், சடங்குகளும் தேவனது மன்னிப்பையும் இரக்கத்தையும் பெறுகிற இடம் மற்றும் தேவனுகுள்ளான மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அவருடைய ஜனங்களோடு கூடி பெறக்கூடிய இடம் இந்த ஆசரிப்புக்கூடாரம். தேவன் கிருபையாய் தந்த இவையெல்லாவற்றையும் இப்போது தாவீது நினைத்து பார்த்து எவ்வளவு உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்து விட்டேன் என்று துக்கப்படுகிறார். 

 இன்று நமது கிறிஸ்தவ திருச்சபைகளின் நிலை இதுதான். சர்வ வல்லமையுள்ள தேவனே உலகம் முழுவதும் திருச்சபை கூடிவருதலையும், ஆராதனையையும் தடை செய்திருக்கிறார். சபைகூடிவருதல் இல்லாமல் நாம் எத்தகைய நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் இழந்திருக்கிறோம்.   

புதிய ஏற்பாட்டில் பார்க்கும்பொழுது கிறிஸ்துவின் மகிமை நிறைந்த மற்றும்  கிறிஸ்து மகிமைப்படுகிற இடம் திருச்சபை மட்டுமே (எபே.3:21). தேவனுடைய வார்த்தை வல்லமையோடும், அதிகாரத்தோடும் பிரசங்கிக்கபடுகிற இடம் திருச்சபை மட்டுமே (1தீமோ.3:15). இயேசுகிறிஸ்துவின் பாவ மன்னிப்பும், கிருபையும் உயர்த்தபடுகின்ற இடம் திருச்சபை மட்டுமே. கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்த்தெலுதலையும் உன்னதமாக நினைவு கூறி திருவிருந்தில் அவரோடு இணைத்து நம்மை அடையாளபடுத்துகிற இடம் திருச்சபை மட்டுமே. மொத்தத்தில் திரியேக தேவனின் மகிமையை காண்கிற இடம் திருச்சபை மட்டுமே. இவையெல்லாவற்றையும் தேவன் இப்பொழுது தடை செய்திருக்கிறார். நிறுத்தி வைத்திருக்கிறார். ஏன்? எதினால்?

உலகளாவிய திருச்சபைகளின் பின்மாற்றத்தை இவை வெளிப்படுதவில்லையா? கிறிஸ்துவின் சபையானது அவருக்கு பாத்திரமாக செயல்படவில்லை என்பதே இதின் மிக அடிப்படையான காரணம். தனது திருச்சபையின் மனந்திரும்புதலுக்கான பெரிய எச்சரிப்பையும் தேவன் இதின் மூலம் தந்திருக்கிறார். வேதத்தில் இதற்கான எச்சரிப்புகளை பல்வேறு இடங்களில் பார்க்கிறோம். ஏசாயா 1:14, 13- “உங்கள் மாதப்பிறப்புகளையும்உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறதுஅவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறதுஅவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறதுநீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும்ஓய்வுநாளையும்சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.”  புலம்பல் 2: 6, 7 – “தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்கர்த்தர்சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணிதமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார். ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்;

தேவனது மக்கள் தொடர்ந்து அவரை அசட்டைபண்ணி அவரது ஆலயத்தை பரிசுத்த குளைச்சலாக்கும்போது பரிசுத்த தேவன் அவர்களை வெறுத்து தமது சமூகத்தினின்று துரத்தி விடுகிறார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தனது வாழ்வில் ஆலய ஆராதனையை எவ்வளவு கனத்தோடு கடைபிடித்தார் என்பதை சுவிசேஷங்களில் பார்க்கிறோம் (லூக்கா- 4:16, 21:37). அவர் தேவனாக இருந்தும் பாவியான மனிதன் நடத்திய ஆராதனையில் அவர் பங்குபெற்றார். அப்போஸ்தலர்களுடைய வாழ்வில் சபை கூடிவருதலும் ஆராதனையும் மிக முக்கியமான இடத்தில் இருந்தது (அப்.- 2,4,5). அவர்கள் திருச்சபையாக கூடி ஆராதிக்கும் போதே திருச்சபையில் அசாதாரண செயல்களை தேவன் நடபித்தார். அப்.பவுலின் ஊழியங்கள் முழுவதும் ஜெப ஆலயத்தை சார்ந்தும், சபைகூடுதலை சார்திருந்ததை பார்க்கிறோம். நிருபங்கள் முழுவதும் திருச்சபை கூடிவருதலின் மேன்மைகளை பார்க்கிறோம். 

எபி.- 10:25-ல் திருச்சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்ற மாபெரும் எச்சரிப்பை பார்க்கிறோம். 

கடந்தகால திருச்சபை வரலாற்றை நாம் கவனித்து பார்க்கும்போது இப்படிபட்ட உலகம் முழுவதுமாக கூடிவருதலும் ஆராதனையும் தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வை நாம் எங்கும் பார்க்க முடியாது. ஆதி திருச்சபையின் நாட்களிலிருந்து வரலாறு முழுவதுமாக உற்று பார்க்கும்போது ஏதோ ஒரு சில நாடுகளில் திருச்சபையானது உபத்திரவத்திற்குள்ளாக தள்ளப்படும் போது அங்கே ஆராதிப்பதற்கான தடைகளை நாம் பார்க்கிறோம். ஒரு சில பகுதிகளில் திருச்சபைகள் மூடப்பட்டாலும் மறுபுறம் திருச்சபை ஆராதனையும், சபை கூடிவருதலும் தொடர்ந்து நடந்து வந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆனால் நாம் பார்க்ககூடிய இன்றைய சூழ்நிலை உலகம் முழுவதும் ஆராதனைகளும், சபை கூடிவருதலும் நிறுத்தப்படிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனே அதை செய்திருக்கிறார். தேவனே திருச்சபையை பூட்டி வைத்திருக்கிறார். ஏன்? 

அவரை ஆராதிக்க வருகின்ற உங்களுடைய என்னுடைய பாவ வாழ்க்கையின் நிமித்தமாகத்தான் என்பதாக இல்லையா? இன்றைக்கு நம் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஆராதனை என்கிற பெயரில் நடக்கின்ற அட்டுழியங்களை எவ்வளவு நாள் தேவன் பொறுத்துக்கொண்டு இருப்பார்? வெறும் சத்தமும், ஆட்டம், பாட்டம், கும்மாளமும் தானே இன்றைய ஆலய ஆராதனைகளில் மலிந்து காணப்படுகிறது. கடவுளுடைய பெயரை சொல்லிக்கொண்டு தான் மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும்  மக்களை எவ்வளவு காலத்துக்கு தேவன் சகித்துக்கொண்டிருப்பார்? தேவனுடைய சபையாக அவரை கூடி ஆராதிப்பதற்கு தடையாக இருப்பது அவருடைய திருச்சபை மக்களின் பாவ வாழ்க்கையும் மிக முக்கிய காரணம். 

உங்களது திருச்சபை கடவுளுடைய ஆராதனைக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும், மரியாதையையும் எவ்வளவு தூரம் கொடுக்கிறது? சபைகூடிவருதலையும், ஆராதனையையும் எவ்வளவு அலட்சியமாக நீங்கள் எண்ணுனீர்கள்? சபைகூடிவருதலையும், ஆராதனையையும் ஒரு பொருட்டாவே நீங்கள் எண்ணவில்லையே. உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் நினைச்சா ஆலயத்திற்கு போறது இல்லைனா போகாம இருந்து கொள்வதென்று நீங்கள் நடந்து கொள்ளவில்லையா? 10 மணிக்கு ஆராதனை என்றால் நாம நெனைச்ச நேரத்திற்கு போகிறதில்லையா? ஆலயஆராதனையில் உட்கார்ந்து கொண்டு தேவ பயமில்லாமல் மனம்போன போக்கில் எதையாவது சிந்தித்துகொண்டு இருக்கவில்லையா? தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கபடுகிற வேளையில் எவ்வளவு கனவீனமாக தூங்கிக்கொண்டிருந்தீர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தீர்கள்? திருச்சபை ஜெபகூட்டத்தை எந்த அளவுக்கு புறம் தள்ளுனீர்கள்? 

இப்படி எல்லாவழியிலும் தேவனுடைய வீட்டை அசுத்தபடுத்திய உங்களை எதற்கு தேவன் தமது திருச்சபையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்? தேவனை ஆராதிக்க முடியவில்லையே என்கிற துக்கமும், வருத்தமும் உங்களுக்கு வருகிறதா? எவ்வளவுபேர் சபைகூடிவருதலும், ஆராதனையும் நடைபெறாததை குறித்து தாவீதைப்போல கண்ணீரோடு தேவ சமூகத்தில் ஜெபித்து இருக்கிறீர்கள்? அதைக்குறித்த பாரமும், துக்கமும் உங்களுக்கு இருக்கிறதா? திருச்சபையாக தேவனுக்கு எதிராக செய்த பாவங்களை விட்டு மனந்திரும்பி தேவ சமூகத்தில் இரக்கத்திற்காக அவரிடம் கெஞ்சுங்கள். முதலாவது உங்களது தனிப்பட்ட, குடும்பமாக நீங்கள் செய்த பாவங்களை தேவ சமூகத்தில் இருதய சுத்தத்தோடு அறிக்கையிட்டு தேவனிடம் மனந்திரும்புங்கள்!. அடுத்ததாக திருச்சபையாக எவ்வளவு துரம் தேவனை உதாசீனப்படுத்தி அவருடைய கடிந்து கொள்ளுதலை அசட்டைசெய்து, அவருடைய நாமத்திற்கு அவகீர்த்தி உண்டுபண்ணும்படி வாழ்ந்தீர்கள் என்று உணர்ந்து உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு முன்பாக சீர்படுத்துங்கள்!!. கிருபையுள்ள தேவன் தாமே தயவாய்  நம்மை மன்னித்து, அவருடைய திருச்சபையை திறந்து மறுபடியும் ஆராதனையும் சபைகூடிவருதலும் நடக்கும்படி அநுக்கிரகம் செய்வாவாராக. ஆமென்!.

Read More
15 Aug
0

மாற்கு 3: 1 – 6

ஆசிரியர் : போதகர் மார்க்

ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் கிறிஸ்து செல்கிறார் அங்கு ஒரு மனிதன் – சூம்பின கையையுடையவன் (வலது கை)  – அவனுக்கு சரீரத்தில் மிக முக்கியமான  உறுப்பு செயல்படாமல் இருக்கிறது. பெரும்பாலும் பிறக்கும்போதே இப்படிபட்ட மனிதனாக இவன் பிறந்திருப்பான். இயல்பாக ஒரு மனிதன் செய்யகூடிய எந்தவொரு வேலையையும் சரியாக, சீக்கிரமாக  இவனால் செய்ய முடியாது. சாதாரமாக ஒரு மனிதன்  ஒரு வேலையை செய்வதற்கு 10 நிமிடம் ஆகுமென்றால் இந்த மனிதனால் அதை செய்ய ½ மணி நேரம் ஆகும். காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லுவரை அவன் செய்கிற ஒவ்வொரு காரியமும் அவனுக்கு கடினமானதும், பாரமானதும், அலுப்புள்ளதுமாக இருக்கும்.  இன்றைக்கு இருப்பதுபோல் கல்வியறிவோ, வேலைவாய்ப்புகளோ  இல்லாத காலத்தில் அவன் இருக்கிறான். நிச்சயம் அவனுக்கு சரியான வேலை யாரும் குடுத்து இருக்க மாட்டார்கள் அப்படி குடுத்தாலும் அவனுக்கு போதுமான வருமானம் இருந்திருக்காது. அவன் இன்னொரு மனிதனை சார்ந்துதான் வாழவேண்டிய நிலை. மிகவும் சஞ்சலம் நிறைந்த, சந்தோஷம் இல்லாத, வெறுமையும் , நிர்பந்தமான வாழ்க்கை.  எதிர்காலத்தை குறித்த பயத்தோடு தினந்தோறும் வேதனையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன்.

இப்படிப்பட்ட மனிதனாக அவன் இருந்தும் அவன் தேவனை தேடுகிறவனாக அவரை ஆராதிக்கிறவனாக இருக்கிறான். அவன் ஜெப ஆலயத்திற்கு தொடர்ந்து வருகிறவனாக,  தேவனிடத்தில் தொடர்ந்து விடுதலையை எதிர்பார்த்தவனாக இருக்கிறான்.

சரீரத்தில் ஊணமுள்ளவன் மாத்திரமல்ல, ஆத்துமாவில் ஊணமுள்ளவனின் நிலையும் இப்படிதான்.  பாவத்தில் பிறந்த பாவத்தோடு வாழ்கிற மனிதனும் இதே வேதனையிலும் இக்கட்டிலும் இருக்கிறான்.

இதிலிருந்து அவனுக்கு என்ன விடுதலை? அவன் எப்படி இதிலிருந்து மீட்கப்படுவது?

ஒரே ஒரு வழிதான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.

இப்படிப்பட்ட மனிதனை தேடி, அவனை மீட்பதற்காகவே அவர் அந்த ஜெப ஆலயத்தில் அங்கு செல்கிறார். இயேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை தேடி அவன் வரவில்லை, கிறிஸ்து அவனைத்தேடி அவனை கண்டு கொள்ளும்படி வருகிறார்.  வ-3- அவர் அவனை எழுந்து நடுவே நில் என்று சொல்கிறார் – அவர் அவனை அழைக்கிறார். அவனை அழைத்து நடுவே நில் என்கிறார். அவன் ஆலயத்தில் ஒரு ஓரத்தில் இருக்கிறான். அவர் அவனை முன்னே அழைத்து எல்லோரும் பார்க்கும்படியாக நடுவே நில் என்கிறார். ஏன்? அவர் அவனை சுகபடுத்தினால் அவரை குற்றம் சாட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருகிறார்கள். அவன் சுகமடைவதை, அவன் விடுதலை பெறுவதை அங்கு யாரும் விரும்பவில்லை. அவர் அவனை நிறுத்தி அவனின் நிலையை எல்லோரும் அறியும்படி செய்கிறார். இங்கு கிறிஸ்து அவனின் வலியையும், வேதனையையும் உணர்ந்தவராக அவனை முற்றும் அறிந்தவராக கிறிஸ்து மாத்திரமே அங்கு இருக்கிறார்.

அவர் உடனே சுகபடுதவில்லை அவனது மீட்பை விரும்பாத அவர்களிடம் கேள்வி கேட்கிறார். ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோதீமைசெய்வதோஜீவனைக்காப்பதோ அழிப்பதோஎது நியாயம் என்கிறார்.- அவன் சார்பாக அவனுக்காக அவர்களிடம் பரிந்துபேசிக் கொண்டிருக்கிறார். அவனை மன்னிப்பதற்கோ, அவனிடத்தில் இரக்கம் காட்டுவதற்கோ, அவனிடத்தில் அன்பு செலுத்தி அவனை மீட்பதற்கோ அவரைத்தவிர அங்கு வேறுயாரும் அவனுக்கு இல்லை. அவன் சார்பாக கிறிஸ்து மட்டுமே அங்கு இருக்கிறார்.

வ-5,6 – ஜெப ஆலயத்தினுடைய ஒட்டுமொத்த கூட்டமும் அவனுக்கு எதிராகவும் கிறிஸ்துவை பகைத்தும் நின்று கொண்டிருக்கிறது. அவரும் அவனை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஜெப ஆலய கூட்டத்தையும் எதிர்த்து அவனை மீட்க ஆயத்தமாகிறார். அவனை சுகபடுத்தினால் அடுத்து அவர் அந்த ஜெப ஆலயத்திற்கு வர முடியாது, அவரை முற்றிலும் பகைத்து கொலை செய்ய முற்படுவார்கள். நடக்கபோகிற எல்லாவறையும் அவர் அறிந்தே அவனை மீட்பதினால் வரகூடிய எவ்வளவு பெரிய ஆபத்தையும், முழு உலகமும் அவரை எதிர்த்து நின்றாலும், அவர்கள் அவரை கொன்னே போட்டாலும் அவனை மீட்காமல் தான் அங்கிருந்து செல்வதில்லை என்பதிலே அவர் உறுதியாக இருக்கிறார்.

அவர் அந்த மனுஷனை நோக்கிஉன் கையை நீட்டு என்றார்அவன் நீட்டினான்அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. – எல்லாவற்றையும் தாண்டி, எல்லாவற்றையும் எதிர்த்து, அவனை தமது மிகுந்த கிருபையினாலே மீட்டு அவனை விடுதலை ஆக்கபட்டவனாக, புதிய ஜீவனுள்ள வாழ்வை பெற்றவனாக அனுப்பி அவர் சிலுவையை நோக்கி, மரணத்தை நோக்கி பயணிக்கிறார். 

நாமும் நமது ஆவிக்குரிய நிலையிலே மரித்து, நமது பாவ சுபாவத்தால் இக்கட்டிலும் அழிவிலும் இருந்தோம், இருக்கிறோம். மகிமையின் தேவனாகிய கிறிஸ்து நம்மை தேடி வந்தார், நம்மை பெயர்சொல்லி அழைத்தார், நமது பாடுகளை சுமந்தார், நமக்காக பரிகாரபலியனார், நம்மை மீட்கும்படி தம்மை அவர் சாக கொடுத்தார். நமக்காக தமது ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். அவரது சரீரம் பிட்கப்பட்டு, நமக்காக அவரது இரத்தம் சிந்தபட்டது. இவ்வளவு மகத்துவமான இந்த கிரிஸ்துவின் அன்பையும், மன்னிப்பையும் மெய்யாக உணர்ந்து பாவத்தைவிட்டு மனந்திரும்பி அவரை விசுவாசியுங்கள், அவரால் மட்டுமே உங்களுக்கு மெய்யான விடுதலையும். சமாதானமும் கிடைக்கும்.

Read More
15 Jul
0

பிலிப்பியர் – விளக்கவுரை

பகுதி – 1    அறிமுகம்

முன்னுரை:

பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய வார்த்தை. வேதாகமம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த வார்த்தையாக இருக்கிறது. இந்த வேதம் அதிகாரமுடையது, போதுமானது மற்றும் தவறில்லாததுமாயும் இருக்கிறது. வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளை கொண்டது. பழைய ஏற்பாட்டின் தன்மை மேசியாவை எதிர்நோக்கி இருக்கிறது. வரபோகிற மேசியாவை கிறிஸ்துவை மட்டுமே மையமாக கொண்ட தன்மையுடன் பழைய ஏற்பாடு காணப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் தன்மை, பழைய ஏற்பாடில் எதிர்நோக்கியிருந்த மேசியாவை வெளிப்படுத்துகிறது. புதிய ஏற்பாடு மேசியாவாகிய கிறிஸ்துவை சரித்திர பூர்வமாக வெளிப்படுத்துகிறது. புதிய ஏற்பாடும் கிறிஸ்துவை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாடு எழுதப்பட்டதற்கு நான்கு காரணங்கள் உண்டு. 

  1. புதிய ஏற்பாடு எழுதவது கடவுளுடைய சித்தம்.
  2. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதப்பட்டதால் இயேசுவின் ஊழியம், போதனைகள், சத்தியத்தை காக்க எழுதப்பட்டது. 
  3. மத்தேயு 28:18-20ன் படி சுவிஷேசம் விருத்தியடைவதற்காக எழுதப்பட்டது.
  4. நேரடியான சாட்சிகள் மரித்து கொண்டிருந்ததால் எழுத்து வடிவில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. 

புதிய ஏற்பாட்டில், சுவிசேஷங்கள் சரித்திரம் நிருபங்கள் மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. சுவிஷேசம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, ஊழியம், போதனைகள், பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதலை மையமாக கொண்டு எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் 21 புத்தகங்கள் நிருபங்களாக இருக்கிறது. நிருபம் என்றால் கடிதம். அந்த நிருபம் ஒரு அப்போஸ்தலன் மூலமாகவோ, அல்லது அப்போஸ்தலர்களை சார்ந்தவர்கள் மூலமாகவோ ஒரு தனிப்பட்ட திருச்சபைக்கு, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வாகவும், ஆலோசனையாகவும் இருக்கும்படியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நிருபங்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, போதனை, சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதல் ஆகியவற்றின் வியாக்கியானம் கொடுக்கப்படிருக்கிறது. நிருபங்களில் சபைக்கும், சபை போதகர்களுக்கும், முப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் தங்கள் தங்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும், கள்ள போதனையில் இருந்து சபையை காத்துக்கொள்ளவும், விசுவாசிகளை உற்சாகப்படுத்தவும் நிருபங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட புதிய ஏற்பாட்டில், தேவன் பவுலின் முலமாக 13 நிருபங்களை கொடுத்திருக்கிறார். இந்த தொகுப்பில் நாம் வரிசையாக பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தின் விளக்கவுரையை நாம் படிக்கயிருக்கிறோம். பிலிப்பியருக்கு எழுதின நிருபம் பவுலினால் எழுதப்பட்டது. 

பிலிப்பியர் நிருபத்தை நாம் தியானித்து படிப்பது ஏன் அவசியமானது? 

நாம் இந்த நிருபத்தை இன்றைக்கு ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. அதற்கான பதில், இன்றைக்கு அநேகர் சமாதானத்தையும், அமைதியையும் தேடி அதை கண்டுபிடிக்க கூடாமல் இருக்கும் நிலையில் உள்ளனர். நேர்மறை சிந்தனை (Positive thinking), யோகா, தியானங்கள், சிரிப்புகூடங்கள் மற்றும் travelling போன்ற அநேக வழிமுறைகளில் சமாதானத்தையும், சந்தோசத்தையும் தேடுகிறார்கள். இவைகள் எல்லாம் வீண். 

இந்த நிருபம் முதலாவது, மெய்யான சந்தோஷத்தின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டாவது, இந்த இரகசியத்தை கற்றுக்கொண்ட மனிதனைப் பற்றி வெளிப்படுத்துகிறது . மூன்றாவது, இந்த இரகசியத்தை கற்றுக்கொடுத்த கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” (பிலிப்பியர் 4:4) என்ற வசனம் இந்த நிருபத்தின் மைய வசனமாக இருக்கிறது. 

வரலாற்று பின்னணி

முதலாவது இந்த சபை பவுலினால் நிறுவப்பட்ட சபை. புறஜாதியார்களால் நிறைந்த சபை.

பிலிப்பி பட்டணத்தின் சபையைப் பற்றிய வரலாற்று பின்னணியை புரிந்துக்கொள்வது, இந்த நிருபத்தை விளங்கிக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த நிருபத்தை வாசிப்பதற்கு முன் அப்போஸ்தலர் 16ம்  அதிகாரத்தை வாசிப்பது அவிசியமானது. பிலிப்பி பட்டணம் அலெக்ஸ்சாண்டர் (Alexandar the Great) என்பவரின் தந்தை பெயர் பிலிப்பு இப்பெயரே பட்டணத்திற்கு பிலிப்பி பெயரானது. 356BCல் கிரேக்கர்களால் கட்டப்பட்ட பட்டணம். கிரேக்கம் மொழி பேசும் பட்டணம். 42BCக்கு பின்பு இந்த பட்டணம் ரோமர்களின் ஆளுகைக்கு கீழாக கொண்டுவரப்பட்டது. 

அப்போஸ்தலர்16:12 “அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்துஅந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.” 

49ADல் பவுல் தனது இரண்டாம் மிஷினரி பயணத்தில் பரிசுத்த ஆவியானவாரால் வழிநடத்தப்பட்டு பிலிப்பி பட்டணத்திற்கு வந்தார். பிலிப்பி பட்டணத்தில் உள்ளவர்கள் தாங்கள் ரோம குடியுறிமை பெற்றிருந்தார்கள். அந்த பட்டணத்தில் யூதர்கள் மிகுதியாய் இல்லை. அதனால் தான் அங்கே ஜெப ஆலயம் இல்லை. அவர்கள் ஆற்றின் அருகே கூடினார்கள் என்று  

அப்போஸ்தலர் 16:13ல் “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்துஅங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.” என்று வாசிக்கிறோம்.

 ஓய்வுநாளில் அந்த பட்டணத்தார் ஆற்றின் அருகே கூடினார்கள். 

பிலிப்பி பட்டணத்தில் இருந்த சில விசுவாசிகள்

  1.   லீதியாள்: அப்போஸ்தலர்16:14ல் இந்த பெண்ணைப் பற்றி வேதம் கூறுகிறது. 

“அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” 

லீதியாள் என்னும் ஸ்திரி ஒரு புறஜாதியான பெண். அவள் தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாய் இருந்தாள். கர்த்தர் பவுலின் வார்த்தைகளைக் கொண்டு இந்த பெண்ணின் இருதயத்தில் செயல்ப்பட்டார். இந்த லீதியாள் தன் வீட்டை சபை கூடி வருதலுக்கு திறந்துக்கொடுத்தால். அப் 16:40 “அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய்சகோதரரைக் கண்டுஅவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

ஒரு புறஜாதி பெண், அவளுடைய வாழ்வில் தேவன் செயல்பட்டவுடன், அவள் தேவனுடைய ஊழியத்தில் ஈடுப்பட்டு, பிலிப்பி பட்டணத்தில் ஒரு சபை நிறுவப்பட ஏதுவாயிருந்தால்.  

  1. குறிசொல்லும் ஆவியை கொண்டிருந்த பெண்: 

அப்போஸ்தலர் 16:16-21 “நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.  17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். 18. இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. 19. அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

20. அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, 21. ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.”

குறிசொல்லும் ஆவியை கொண்டிருந்த ஒரு பெண் குணப்பட்டு, சுவிசேஷத்தைக் கேட்டு  இரட்சிக்கப்படுகிறாள். இதன் விளைவாக பவுலும், சீலாவும்  சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

  1. சிறைச்சாலைக்கார்கள்:

அப்போஸ்தலர் 16:25-33ஐ வாசிக்கும் போது, சிறையில் வைக்கப்பட்ட பவுல் மற்றும் சீலாவின் உண்மையான சிறையில் நடத்தை அங்குயிருந்த சிறைசாலை காவலர்களின் வாழ்வை மாற்றியது. அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் இரட்சிக்கப்பட்டார்கள். அதன் விளைவு சபையில் சேர்க்கப்பட்டார்கள். 

பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்ட காலம் 

பிலிப்பியர் நிருபம் 61-62ADகளில் எழுதப்பட்டது. அந்த காலங்களில் பவுல் சிறையில் இருந்தார். இந்த நிருபம் சிறையிலிருந்து எழுதப்பட்ட நிருபம். ஆங்கிலத்தில் இந்த நிருபத்தை (PRISION EPISTLE) என்று அழைப்பார்கள். 

பிலிப்பிய சபையின் ஒரு முக்கிய குணாதிசயம், ஊழியத்திற்கு அதிகமாக உதவிய சபை. அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத் தேவைகளை சந்தித்த சபை. அவர்கள் தாராளமாய் கொடுத்தார்கள். 

பிலிப்பிய சபையில் இருந்த குழப்பங்கள் என்ன?

பிலிப்பிய சபையில் இருந்த முதல் மிக முக்கியமான பிரச்சனை ஒற்றுமையின்மை. இரண்டாவதாக சபைக்கு வெளியிருந்து அரசாங்கத்தால் உபத்திரவம். ரோம அரசனை மட்டுமே கடவுளாக வணங்க வேண்டும். மூன்றாவதாக, சுவிசேஷ எதிரிகள். இவைகள் தான் பிலிப்பிய சபையின் அடிப்படை குழப்பமும் பிரச்சனையுமாக இருக்கிறது. சபை எப்பொழுதுமே பிரச்சனைகளோடு தான் காணப்படும். இந்த உலகத்தில் எந்த சபையும் பூரண பரிசுத்த சபை இல்லை. விசுவாசிகள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். 

பிலிப்பிய நிருபத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள போகிற பாடங்கள் என்ன?

  • பிலிப்பிய நிருபத்தில் இருந்து பவுல் என்கிற மனிதனின் விசுவாசத்தையும், சுவிசேஷத்தின் மீதுள்ள வைராக்கியத்தையும் பற்றி படிக்கயிருக்கிறோம். 
  • இந்த நிருபத்தில் இரண்டு காரியத்தை மையப்படுத்தி எழுதியிருக்கிறார். அதில் முதலாவது, கிறிஸ்துவின் சுவிசேஷம், இரண்டாவது, கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகள்.

முடிவுரை 

கிறிஸ்துவின் சுவிசேஷமும், கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகளும் இணைந்தால் மட்டுமே கிறிஸ்துவுக்குள் சந்தோஷமான வாழ்வு வாழ முடியும். உண்மையான சுவிசேஷத்தினால் மட்டுமே மனிதர்களுடைய வாழ்வில் உண்மையான சந்தோஷம் வெளிப்படும். உண்மையான சந்தோஷம் வெளிப்படும் போது மட்டுமே உண்மையான ஆராதனைக்கு வழிவகுக்கும். நாம் தொடர்ச்சியாக பிலிப்பியர் நிருபத்தில் இருந்து எப்படி கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாய் வாழ என்றும், உண்மையான சுவிசேஷம் எப்படி சபையில் பிரசனைகளை சரி செய்கிறது என்றும், தனிப்பட்ட வாழ்வில் நாம் எப்படி உண்மையாய் தேவனை ஆராதிப்பது என்றும் இனி வரும் கட்டுரைகளில் பாப்போம். 

Read More
10 Jun
0

உபத்திரவத்தில் தேவ மனிதன் (யோசேப்பு)

ஆசிரியர் : போதகர் G. மார்க்

மத்தேயு 1: 19 – 25

  1. உபத்திரவத்தை சந்திக்கும் தேவ மனிதனின் வாழ்வு (வ-19)

v- 19- “அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்துஅவளை அவமானப்படுத்த மனதில்லாமல்இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்

இங்கே மரியாளின் புருஷனாகிய யோசேப்பு தேவனுடைய மனிதன், வேதம் தெரிந்தவன், நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகளை கொண்டவன். இப்பொழுது அவனுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு  அவனது இல்லற வாழ்வின்  மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் எதிர்பார்த்து இருக்கிறான். ஆனால் இங்கே சுழ்நிலை தலைகீழ் ஆகிறது. அவனுக்கு நியமிக்கப்பட்ட மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்ற அதிர்ச்சியான செய்தி வருகிறது. அவனின் திட்டங்களும் ஆசைகளும் நொறுக்கபடுகிறது. தேவன் நேசிக்கும் மக்களின் வாழ்வில் இப்படிபட்ட எதிர்பாராத குழப்பங்களும் உபத்திரவங்களும் நிச்சயம் வரும். அவர்களின் வாழ்வில் இப்படிப்பட்ட உபத்திரவங்களை தேவன் தனது மகிமைக்காகவே அனுமதிக்கிறார்.

இந்த சுழ்நிலையில் யோசேப்பு உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை, அவன் தேவனிடம் முறுமுறுக்கவில்லை. மரியாளிடத்தில் நீதி செலுத்த முற்படவில்லை, மாறாக பொறுமை காக்கிறான். நிதானமான முடிவுகளை எடுக்கிறான். ஒரு விசுவாசியாக உபத்திரவத்தின் மத்தியில் நாம் எப்படி இருக்க வேண்டுமென்று யோசேப்பின் வாழ்க்கை நமக்கு  கற்றுகொடுக்கிறது. இதே நிலையை ப.ஏ. யோசேப்பின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், தாவீது, தானியேல், என்னும் எவ்வளவோ தேவ மனிதர்களும் தேவனிடத்தில் காரியங்களை ஒப்புவித்து அவரின் வழிநடத்துதல்களுக்காக காத்திருப்பதை பார்க்கிறோம்.

அவன் நீதிமானாயிருந்து – வேதம் என்ன இங்கே அர்த்தபடுத்துகிறது. நீதிமான் என்று சொல்லும்போது அவன் பாவத்திற்கு விலகினவன் கிடையாது. பாவம் செய்யாதவன் என்று அர்த்தபடுத்தவில்லை. அவன் தேவ நீதியை சார்ந்தவன் என்று வேதம் கூறுகிறது. தேவனிடத்தில் இரக்கத்தையும், கிருபையையும் பெற்றவன். தேவனால் தனது பாவங்களிலிருந்து மன்னிப்பை பெற்றவன். தேவ தண்டனையிலிருந்து காக்கபட்டவன்.  தேவனுக்கு பயந்தவன். ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது, பேதுரு, பவுல் எல்லோரும் அப்படியே நீதிமான்களாக என்னபட்டார்கள் . யோசேப்பு தனது பாவ நிலையை உணர்ந்து தான் எவ்வாறு தேவனால் மன்னிக்கபட்டிருக்கிறேன், தேவ தன்டனையிலிருந்து எப்படி காக்கபட்டிருகிறேன் என்பதை உணர்ந்தவனாக செயல்படுகிறதை பார்க்கிறோம்.

அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் – நீதியான தண்டனையை மரியளாடத்தில் செலுத்த பிரியப்படாமல், அவள் செய்த துரோகத்திற்கு தக்கதாக, பழிக்குபழி வாங்காமல் அவளை மன்னிப்பதற்கு தயாராக இருக்கிறான். நீதிமானுடைய குணாதிசயம் இதுதான். (யோசேப்பு, தாவீது,)

இரகசியமாய் அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான் – அவளுடைய பாவத்தை மூடுவதற்கு, அதை சகித்துக்கொள்ள தயாராயிருந்தான். தனது பிரச்சனையில் தேவனது சித்தத்திற்கு தன்னை ஒப்புகொடுத்து தேவனின் வழிநடத்துதலுக்கு காத்திருக்கிற நிலையை இங்கு பார்க்கிறோம் ( நீதிமானின்  மற்றுமொரு குணாதிசயம்).

அவன் தீமையை நன்மையினால் வெல்வதற்கு தயாராயிருக்கிறான். இந்த ஒரு உன்னதமான குணாதிசயம் இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் பூரணமாய் காணப்பட்டதை பார்க்கிறோம். அவரின் பிறப்பிலிருந்து மரணம் வரை உபத்திரவங்கள், வேதனைகள் சூழ்ந்து காணப்பட்ட போதிலும் தேவ சித்ததிற்காக தொடர்ந்து காத்திருந்து தன்னை சுற்றியுள்ள எல்லா பாவிகளுக்கும், துரோகிகளுக்கும் மரணம்வரை பாவ மன்னிப்பையும் தனது மேலான அன்பையும் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த நிலையிலும் வெளிபடுத்தினார்.

நமது வாழ்கையில் தேவன் உபத்திரவங்களை அனுமதிக்கும்போது நாம் எவ்வாறு செயல்படுகிறோம்? பாவத்தை சகித்து தேவனுக்கு காத்திருக்கிற நிலையை கொண்டிருகிறோமா? பிறரை மன்னிக்கும் இருதயத்தை கொண்டிருக்கிறோமா? அல்லது மனித முயற்சிகளை, ஞானத்தை சார்ந்து சுய வழிகளை பின்பற்றுகிறோமா?

  • உபத்திரவத்தின் மத்தியில் தேவனின் செயல்பாடு (வ-2௦-21)

வ- 2௦ – அவன் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில் – தனது பிரச்சனையின் விடுதலைக்காக ஏங்கிகொண்டிருக்கையில்,

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: – தேவன் அவனது வாழ்கையில் இடைபடுகிறார்.தேவன் தனது மக்களை உபத்திரவத்திலே விட்டுவிடுபவர் அல்ல.அவர் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். உபத்திரவப்படுகிற தேவ ஜனத்திற்கு நிச்சயம் விடுதலை உண்டு. தேவன் தனது செய்தியை அவனுக்கு அனுப்புகிறார்.

தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, – இங்கே தேவ தூதன் வெறுமனே யோசேப்பே என்று அழைக்கவில்லை, தாவீதின் குமாரானாகிய யோசேப்பே என்று அழைப்பதற்கான காரணம் என்ன? தேவனுக்கும் அவனுக்குமான உறவு இங்கு கூறப்படுகிறது. அவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் புத்திரன், அவனின் முற்பிதா தேவனது நேசத்திற்குரிய தாவீது ராஜா. ஒருவேளை அது அவனுக்கு தெரிந்திருந்தாலும் இங்கே மறுபடியும் தேவன் அவனது முற்பிதாக்களின் வாழ்வில் தான் எப்படிபட்ட தேவனாக இருந்தார் என்று அவனுக்கு நினைவுபடுத்துகிறார். அவனின் தேவன் யார், கடந்த காலங்களில் இந்த தேவன் எப்படி செயல்பட்டார் என்று அவனுக்கு சொல்லபடுகிறது. உபத்திரவத்தின் மத்தியில் விசுவாசி தேவனுக்குள்ளான தனது நிலை என்ன, கடந்த காலங்களில் இந்த தேவன் தன்னிடத்திலே எவ்வாறு செயல்பட்டார் என்று நோக்கிபார்க்க அழைக்கபடுகிறான்.

உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; – இங்கே தேவன் யோசேப்பின் விருப்பங்களையும், வழிகளையும் நிர்மூலமாக்குகிறார். அவன் அவளை தள்ளிவிட முடிவெடுத்து தேவனது சித்தத்திற்கு காத்திருக்கிறான், தேவன் அவனது சித்தப்படி காரியங்களை செயல்படுத்தி தன்னை இந்த உபத்திரவத்திலிருந்து காப்பாறுவார் என்று எண்ணிகொண்டிருக்கிறான். அவன் எடுத்த முடிவு சரி என்று அதையே தேவனும் செய்வார் என்றுகூட அவன் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இங்கு தேவன் உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல, உங்களது வழிகள் என் வழிகள் அல்ல என்ற வார்த்தைக்கேற்ப தேவன் அவன் விரும்பியதற்கு மாறாக செயல்படுகிறார். அவன் எதை விரும்பவில்லையோ தேவன் இங்கு அவனை அதை செய்ய வைத்து தனது திட்டத்தை நிறைவேற்றுகிறார். அவனுக்கு அது கடினனமானதாக, அவனது  விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் அவன் அதற்கு கீழ்படிவதையே தேவன் விரும்புகிறார். பிரச்சனையின் போது நமது விருப்பதை, நமது வழிகளில் தேவன் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்காமல் தேவன் எதை விரும்புகிறாரோ, அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், எப்படிப்பட்ட விளைவுகளை கொண்டு வந்தாலும் அதற்கு கீழ்படிந்து வாழ்ந்தால் மாத்திரமே நமக்கு விடுதலை, இல்லையென்றால் நமது சுய வழிகள் தேவனின் கோபத்துக்கும் அவரது ஆக்கினைக்கு நேராகவே மட்டுமே நம்மை இட்டு செல்லும்.

அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது –

மரியாளின் கர்ப்பத்திற்கு காரணம் அவள் விபசாரம் செய்து, துன்மார்க்கமாய் வாழ்ந்ததினால் அல்ல. அவள் தேவனது உன்னதமான திட்டத்திற்காக தெரிந்துகொள்ளபட்டவளாயிருக்கிறாள் என்று அவனுக்கு கூறப்படுகிறது. மரியாள் தேவனால் பயன்படுத்தபடுகிற பாத்திரமாய் இருக்கிறாள் என்று அறிவிக்கபடுகிறது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாகஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். – அவனுடைய உபத்திரவத்தின் மூலம் தேவன் அவனுக்காக வைத்திருக்கும் மேலான ஆசீர்வாதத்தை வெளிபடுத்துகிறார். ஒரு யூதனாக மேசியாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவனது வாழ்வில் அவனது மனைவியினிடத்திலிருந்து அந்த உன்னதமான மேசியா வரப்போகிறார் என்கிற மகிமையான சத்தியம் அறிவிக்கபடுகிறது. நீதிமானாக பாவத்தோடு போராடுகிற யோசேப்புக்கு அந்த பாவத்திலிருந்து விடுதலை தரக்கூடிய தேவ குமாரன் அவனது குடும்பத்தில் பிறக்க போகிறார் என்ற மீட்பின் சுவிஷேசம் அவனுக்கு அறிவிக்கபடுகிறது. தேவனுடைய மேன்மையான இரட்சிப்பின் திட்டத்தில் மேலான பாத்திரமாக நீ பயன்படுத்தப்பட போகிறாய் என்கிற உன்னத அழைப்பு யோசேப்புக்கு  கொடுக்கபடுகிறது. பரிசுத்தமான தேவ குமாரனுக்கு பெயர் வைக்கும்படியான மாபெரும் சிலாக்கியத்தை நீ பெறுகிறாய் என்று கூறபடுகிறது. திரளான ஜனங்கள் வரப்போகிற கிறிஸ்து மூலமாக பாவத்திலிருந்து மீட்கப்பட நீயும் ஒரு கருவியாக பயன்படுத்தபட போகிறாய் என்கிற உன்னத ஆசீர்வாதம் கொடுக்கபடுகிறது.

வேதத்தில் உபத்திரவங்களை சந்தித்த ஒவ்வொரு தேவ மனிதர்களுக்கு பின்பாக இப்படிப்பட்ட மேலான தேவ திட்டமும், நோக்கமும் இருந்ததை பார்க்கலாம் ( ஆபிரகாம், யோசேப்பு, தாவீது, தானியேல், மோசே).

நமது ஆண்டராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்விலும் தனது ஒவ்வொரு இக்கட்டான நிலைகளில் பிதாவாகிய தேவனுக்குள்ளான தனது உறவில் தன்னை திடப்படுத்திகொண்டு தேவன் தனக்குமுன் வைத்திருந்த உன்னதமான இரட்சிப்பின் திட்டத்திற்கு தன்னை ஒப்புகொடுத்தார்.

தேவ ஜனங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு உபத்திரவங்களுக்கும், இக்கட்டான நிலைகளுக்கும் மத்தியில் தேவன் தனது இரட்சிப்பின் மேன்மையான திட்டங்களையும், செயல்பாடுகளையும் வைத்து இருக்கிறார். ஒரு விசுவாசியாக நீ இப்பொழுது உன் வாழ்கையில் கடினமான, பயம் நிறைந்த சூழ்நிலையில் காணப்படுவாயானால் அதின் மூலம் தேவன் உனக்கு அநேக ஆவிக்குரிய பாடங்களை கற்பிக்க இருக்கிறார் என்பதை மறவாதே. கிறிஸ்துவிற்குள்ளான உனது நிலையை அறிந்து அவர் ஒருவருக்கே உன்னை அர்ப்பணித்து வாழ்.  நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லதுஅதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங். 119:71)

3. உபத்திரவத்தின் மத்தியில் தேவ மனிதனின் கீழ்படிதல் (வ- 24-25)

வ. 24-   யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்துகர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

தேவன் யோசேப்புக்கு தனது வார்த்தையை அனுப்பி அவனது பிரச்சனைக்கான தீர்வை கூறி, அவரது சித்தத்தையும் நோக்கத்தையும், தனது மேலான ஆசீர்வாதத்தையும் அறிவிக்கிறார். தேவ வார்த்தைக்கு கீழ்படியும்படியான மாபெரும் கட்டளையும் அவனுக்கு தரப்படுகிறது. யோசேப்பு இப்பொழுது எதை செய்ய வேண்டும்? அவனது சுய சித்தம் மரியாளை தள்ளிவிட சொல்கிறது. தேவனுடைய வார்த்தை அவளை சேர்த்துக்கொண்டு வாழ சொல்கிறது. மரியாளை சேர்த்துக்கொண்டு வாழ்வது என்பது யோசேப்புக்கு அவ்வளவு சுலபமான காரியமா? ஒருபோதும் இல்லை. யோசேப்புக்கு மரியாளை சேர்த்து கொண்டு வாழ்வது என்பது எவ்வளவு அவமானமான காரியமாக இருந்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். அவன் தனது பெற்றோர்களிடத்தில், தனது நண்பர்களிடத்தில், உறவினர்களிடத்தில் இதை கூறும்போது எப்படி செயல்பட்டிருப்பார்கள். எவ்வளவு எதிர்ப்புகளை அவன் சந்தித்து இருக்க வேண்டும். எவ்வளவுபேர் அவனை ஏளனம் செய்திருப்பார்கள், எவ்வளவுபேர் அவனை தூஷித்திருப்பார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டு அவனது உணர்வுகள் எவ்வளவு பாதிக்கபட்டாலும் தேவனது வார்த்தைக்கு கீழ்படிகிறான். அவனது முழு சமுதாயாமும் அவனை எதிர்த்தாலும் தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்க யோசேப்பு துணிகிறதை பார்க்கிறோம்.

“பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.” அப்.4:19

வ-25 “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்துஅவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”

இங்கே யோசேப்பின் கீழ்படிதல் பாரபட்சமாக, அரைகுறை மனதோடு அல்ல. தன்னை முற்றிலும் தேவ வார்த்தைக்கு எவ்வாறு ஒப்புக்கொடுத்தான் என்று இப்பகுதி விவரிக்கிறது. அவன் மரியாளை மனைவியாக சேர்த்துகொண்டது மாத்திரமல்ல, தனது திருமண உறவின் எல்லாவிதமான மகிழ்ச்சிகளையும், ஆசைகளையும் தேவ வார்த்தையின் நிறைவேறுதலுக்காக முழு இருதயத்தோடு தன்னை அர்பணித்தான் என்று பார்க்கிறோம். தனக்கான எந்தவொரு சுய விருப்பங்களையும் வழிகளையும் செயல்படுத்த பிரயாசப்படாமல் தனது எல்லாவித உணர்வுகளையும் கட்டுபடுத்தி, கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படும்வரை அனுதினமும் தனது சரீர சோதனைகளை தேவனது வார்த்தையினால் மேற்கொண்டான் என்று பார்க்கிறோம். வரப்போகிற கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தின் மேன்மைக்காக, அநேக ஜனங்களின் பாவ விடுதலைக்காக இங்கே யோசேப்பு தன்னை முற்றிலும் ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புகொடுத்தான். சுயத்தை முற்றிலும் அழிப்பதே தேவ வார்த்தைக்கு கீழ்படிவதற்கான அஸ்திபாரம். “அப்படியிருக்கசகோதரரேநீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்றுதேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” ரோமர். 12:1

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் பிதா தனக்கு நியமித்த இரட்சிப்பின் பணியை செயல்படுத்துவதற்கு முழு உலகமும் அவரை எதிர்த்த நிலையிலும் பிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற தனது சுயத்தை முற்றிலும் அழித்து, தனது பரலோக மேன்மையை இழந்து அடிமையாக தன்னை பிதாவின் சமூகத்திற்கு ஒப்புகொடுத்தார். (பிலி. 2: 6-8)

நமது விசுவாச வாழ்வு எப்படி? உபத்திரவங்கள், எதிர்ப்புகள் மத்தியில் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிவதற்கு நம்மை முழுமையாக அர்பணிக்கிறோமா? அல்லது நமது சித்தபடி வாழ்கிறோமா? ஒரு விசுவாசியினுடைய வாழ்வில் அவன் விரும்பாத நிலையிலும் தேவன் தனது சித்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அழைக்கிற தேவன் தான் அழைக்கிற மனிதனின் வாழ்வில் அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்றாமல் ஒருபோதும் போவதில்லை. அவரின் வார்த்தை ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை, தேவன் செய்ய நினைப்பது ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் தவறாது, அவர் தனது சித்தப்படி தனது ராஜ்ஜியத்தை கட்டுகிறார். எல்லா மனிதனும் அதற்கு கீழ்படிந்து தன்னை அர்பணிப்பதே அவசியமானதும், நன்மையானதும் கூட. உங்களை தமது பரம் இராஜ்ஜியதிற்கு அழைத்த தேவனின் வார்த்தைக்கு முற்றிலும் உங்களை அர்பணிக்காமல், உங்கள் சுயத்தை இழக்காமல் ஒருபோதும் தேவனின் மகிமையை உங்கள் வாழ்வில் காண முடியாது. மனந்திரும்பி உபத்திரவங்கள் மத்தியில் பொறுமையோடு காத்திருந்து தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து முற்றிலும் உங்களை அர்ப்பணியுங்கள் அப்பொழுது தேவன் யோசேப்பின் வாழ்க்கையைபோல உங்கள் வாழ்கையிலும் மகிமைப்படுவார். ஆமென்!.

Read More