Blog

15 Jul
0

பிலிப்பியர் – விளக்கவுரை

பகுதி – 1    அறிமுகம்

முன்னுரை:

பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய வார்த்தை. வேதாகமம் கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த வார்த்தையாக இருக்கிறது. இந்த வேதம் அதிகாரமுடையது, போதுமானது மற்றும் தவறில்லாததுமாயும் இருக்கிறது. வேதம் பழைய, புதிய ஏற்பாடுகளை கொண்டது. பழைய ஏற்பாட்டின் தன்மை மேசியாவை எதிர்நோக்கி இருக்கிறது. வரபோகிற மேசியாவை கிறிஸ்துவை மட்டுமே மையமாக கொண்ட தன்மையுடன் பழைய ஏற்பாடு காணப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் தன்மை, பழைய ஏற்பாடில் எதிர்நோக்கியிருந்த மேசியாவை வெளிப்படுத்துகிறது. புதிய ஏற்பாடு மேசியாவாகிய கிறிஸ்துவை சரித்திர பூர்வமாக வெளிப்படுத்துகிறது. புதிய ஏற்பாடும் கிறிஸ்துவை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாடு எழுதப்பட்டதற்கு நான்கு காரணங்கள் உண்டு. 

  1. புதிய ஏற்பாடு எழுதவது கடவுளுடைய சித்தம்.
  2. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதப்பட்டதால் இயேசுவின் ஊழியம், போதனைகள், சத்தியத்தை காக்க எழுதப்பட்டது. 
  3. மத்தேயு 28:18-20ன் படி சுவிஷேசம் விருத்தியடைவதற்காக எழுதப்பட்டது.
  4. நேரடியான சாட்சிகள் மரித்து கொண்டிருந்ததால் எழுத்து வடிவில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. 

புதிய ஏற்பாட்டில், சுவிசேஷங்கள் சரித்திரம் நிருபங்கள் மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. சுவிஷேசம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, ஊழியம், போதனைகள், பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதலை மையமாக கொண்டு எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் 21 புத்தகங்கள் நிருபங்களாக இருக்கிறது. நிருபம் என்றால் கடிதம். அந்த நிருபம் ஒரு அப்போஸ்தலன் மூலமாகவோ, அல்லது அப்போஸ்தலர்களை சார்ந்தவர்கள் மூலமாகவோ ஒரு தனிப்பட்ட திருச்சபைக்கு, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வாகவும், ஆலோசனையாகவும் இருக்கும்படியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நிருபங்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, போதனை, சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதல் ஆகியவற்றின் வியாக்கியானம் கொடுக்கப்படிருக்கிறது. நிருபங்களில் சபைக்கும், சபை போதகர்களுக்கும், முப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் தங்கள் தங்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும், கள்ள போதனையில் இருந்து சபையை காத்துக்கொள்ளவும், விசுவாசிகளை உற்சாகப்படுத்தவும் நிருபங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட புதிய ஏற்பாட்டில், தேவன் பவுலின் முலமாக 13 நிருபங்களை கொடுத்திருக்கிறார். இந்த தொகுப்பில் நாம் வரிசையாக பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தின் விளக்கவுரையை நாம் படிக்கயிருக்கிறோம். பிலிப்பியருக்கு எழுதின நிருபம் பவுலினால் எழுதப்பட்டது. 

பிலிப்பியர் நிருபத்தை நாம் தியானித்து படிப்பது ஏன் அவசியமானது? 

நாம் இந்த நிருபத்தை இன்றைக்கு ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. அதற்கான பதில், இன்றைக்கு அநேகர் சமாதானத்தையும், அமைதியையும் தேடி அதை கண்டுபிடிக்க கூடாமல் இருக்கும் நிலையில் உள்ளனர். நேர்மறை சிந்தனை (Positive thinking), யோகா, தியானங்கள், சிரிப்புகூடங்கள் மற்றும் travelling போன்ற அநேக வழிமுறைகளில் சமாதானத்தையும், சந்தோசத்தையும் தேடுகிறார்கள். இவைகள் எல்லாம் வீண். 

இந்த நிருபம் முதலாவது, மெய்யான சந்தோஷத்தின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டாவது, இந்த இரகசியத்தை கற்றுக்கொண்ட மனிதனைப் பற்றி வெளிப்படுத்துகிறது . மூன்றாவது, இந்த இரகசியத்தை கற்றுக்கொடுத்த கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” (பிலிப்பியர் 4:4) என்ற வசனம் இந்த நிருபத்தின் மைய வசனமாக இருக்கிறது. 

வரலாற்று பின்னணி

முதலாவது இந்த சபை பவுலினால் நிறுவப்பட்ட சபை. புறஜாதியார்களால் நிறைந்த சபை.

பிலிப்பி பட்டணத்தின் சபையைப் பற்றிய வரலாற்று பின்னணியை புரிந்துக்கொள்வது, இந்த நிருபத்தை விளங்கிக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த நிருபத்தை வாசிப்பதற்கு முன் அப்போஸ்தலர் 16ம்  அதிகாரத்தை வாசிப்பது அவிசியமானது. பிலிப்பி பட்டணம் அலெக்ஸ்சாண்டர் (Alexandar the Great) என்பவரின் தந்தை பெயர் பிலிப்பு இப்பெயரே பட்டணத்திற்கு பிலிப்பி பெயரானது. 356BCல் கிரேக்கர்களால் கட்டப்பட்ட பட்டணம். கிரேக்கம் மொழி பேசும் பட்டணம். 42BCக்கு பின்பு இந்த பட்டணம் ரோமர்களின் ஆளுகைக்கு கீழாக கொண்டுவரப்பட்டது. 

அப்போஸ்தலர்16:12 “அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்துஅந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.” 

49ADல் பவுல் தனது இரண்டாம் மிஷினரி பயணத்தில் பரிசுத்த ஆவியானவாரால் வழிநடத்தப்பட்டு பிலிப்பி பட்டணத்திற்கு வந்தார். பிலிப்பி பட்டணத்தில் உள்ளவர்கள் தாங்கள் ரோம குடியுறிமை பெற்றிருந்தார்கள். அந்த பட்டணத்தில் யூதர்கள் மிகுதியாய் இல்லை. அதனால் தான் அங்கே ஜெப ஆலயம் இல்லை. அவர்கள் ஆற்றின் அருகே கூடினார்கள் என்று  

அப்போஸ்தலர் 16:13ல் “ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்துஅங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.” என்று வாசிக்கிறோம்.

 ஓய்வுநாளில் அந்த பட்டணத்தார் ஆற்றின் அருகே கூடினார்கள். 

பிலிப்பி பட்டணத்தில் இருந்த சில விசுவாசிகள்

  1.   லீதியாள்: அப்போஸ்தலர்16:14ல் இந்த பெண்ணைப் பற்றி வேதம் கூறுகிறது. 

“அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” 

லீதியாள் என்னும் ஸ்திரி ஒரு புறஜாதியான பெண். அவள் தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாய் இருந்தாள். கர்த்தர் பவுலின் வார்த்தைகளைக் கொண்டு இந்த பெண்ணின் இருதயத்தில் செயல்ப்பட்டார். இந்த லீதியாள் தன் வீட்டை சபை கூடி வருதலுக்கு திறந்துக்கொடுத்தால். அப் 16:40 “அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய்சகோதரரைக் கண்டுஅவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

ஒரு புறஜாதி பெண், அவளுடைய வாழ்வில் தேவன் செயல்பட்டவுடன், அவள் தேவனுடைய ஊழியத்தில் ஈடுப்பட்டு, பிலிப்பி பட்டணத்தில் ஒரு சபை நிறுவப்பட ஏதுவாயிருந்தால்.  

  1. குறிசொல்லும் ஆவியை கொண்டிருந்த பெண்: 

அப்போஸ்தலர் 16:16-21 “நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.  17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். 18. இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. 19. அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

20. அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, 21. ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.”

குறிசொல்லும் ஆவியை கொண்டிருந்த ஒரு பெண் குணப்பட்டு, சுவிசேஷத்தைக் கேட்டு  இரட்சிக்கப்படுகிறாள். இதன் விளைவாக பவுலும், சீலாவும்  சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

  1. சிறைச்சாலைக்கார்கள்:

அப்போஸ்தலர் 16:25-33ஐ வாசிக்கும் போது, சிறையில் வைக்கப்பட்ட பவுல் மற்றும் சீலாவின் உண்மையான சிறையில் நடத்தை அங்குயிருந்த சிறைசாலை காவலர்களின் வாழ்வை மாற்றியது. அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் இரட்சிக்கப்பட்டார்கள். அதன் விளைவு சபையில் சேர்க்கப்பட்டார்கள். 

பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்ட காலம் 

பிலிப்பியர் நிருபம் 61-62ADகளில் எழுதப்பட்டது. அந்த காலங்களில் பவுல் சிறையில் இருந்தார். இந்த நிருபம் சிறையிலிருந்து எழுதப்பட்ட நிருபம். ஆங்கிலத்தில் இந்த நிருபத்தை (PRISION EPISTLE) என்று அழைப்பார்கள். 

பிலிப்பிய சபையின் ஒரு முக்கிய குணாதிசயம், ஊழியத்திற்கு அதிகமாக உதவிய சபை. அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத் தேவைகளை சந்தித்த சபை. அவர்கள் தாராளமாய் கொடுத்தார்கள். 

பிலிப்பிய சபையில் இருந்த குழப்பங்கள் என்ன?

பிலிப்பிய சபையில் இருந்த முதல் மிக முக்கியமான பிரச்சனை ஒற்றுமையின்மை. இரண்டாவதாக சபைக்கு வெளியிருந்து அரசாங்கத்தால் உபத்திரவம். ரோம அரசனை மட்டுமே கடவுளாக வணங்க வேண்டும். மூன்றாவதாக, சுவிசேஷ எதிரிகள். இவைகள் தான் பிலிப்பிய சபையின் அடிப்படை குழப்பமும் பிரச்சனையுமாக இருக்கிறது. சபை எப்பொழுதுமே பிரச்சனைகளோடு தான் காணப்படும். இந்த உலகத்தில் எந்த சபையும் பூரண பரிசுத்த சபை இல்லை. விசுவாசிகள் இதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். 

பிலிப்பிய நிருபத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள போகிற பாடங்கள் என்ன?

  • பிலிப்பிய நிருபத்தில் இருந்து பவுல் என்கிற மனிதனின் விசுவாசத்தையும், சுவிசேஷத்தின் மீதுள்ள வைராக்கியத்தையும் பற்றி படிக்கயிருக்கிறோம். 
  • இந்த நிருபத்தில் இரண்டு காரியத்தை மையப்படுத்தி எழுதியிருக்கிறார். அதில் முதலாவது, கிறிஸ்துவின் சுவிசேஷம், இரண்டாவது, கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகள்.

முடிவுரை 

கிறிஸ்துவின் சுவிசேஷமும், கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகளும் இணைந்தால் மட்டுமே கிறிஸ்துவுக்குள் சந்தோஷமான வாழ்வு வாழ முடியும். உண்மையான சுவிசேஷத்தினால் மட்டுமே மனிதர்களுடைய வாழ்வில் உண்மையான சந்தோஷம் வெளிப்படும். உண்மையான சந்தோஷம் வெளிப்படும் போது மட்டுமே உண்மையான ஆராதனைக்கு வழிவகுக்கும். நாம் தொடர்ச்சியாக பிலிப்பியர் நிருபத்தில் இருந்து எப்படி கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாய் வாழ என்றும், உண்மையான சுவிசேஷம் எப்படி சபையில் பிரசனைகளை சரி செய்கிறது என்றும், தனிப்பட்ட வாழ்வில் நாம் எப்படி உண்மையாய் தேவனை ஆராதிப்பது என்றும் இனி வரும் கட்டுரைகளில் பாப்போம். 

Read More
10 Jun
0

உபத்திரவத்தில் தேவ மனிதன் (யோசேப்பு)

ஆசிரியர் : போதகர் G. மார்க்

மத்தேயு 1: 19 – 25

  1. உபத்திரவத்தை சந்திக்கும் தேவ மனிதனின் வாழ்வு (வ-19)

v- 19- “அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்துஅவளை அவமானப்படுத்த மனதில்லாமல்இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்

இங்கே மரியாளின் புருஷனாகிய யோசேப்பு தேவனுடைய மனிதன், வேதம் தெரிந்தவன், நல்ல ஆவிக்குரிய சூழ்நிலைகளை கொண்டவன். இப்பொழுது அவனுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு  அவனது இல்லற வாழ்வின்  மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் எதிர்பார்த்து இருக்கிறான். ஆனால் இங்கே சுழ்நிலை தலைகீழ் ஆகிறது. அவனுக்கு நியமிக்கப்பட்ட மரியாள் கர்ப்பவதியாய் இருக்கிறாள் என்ற அதிர்ச்சியான செய்தி வருகிறது. அவனின் திட்டங்களும் ஆசைகளும் நொறுக்கபடுகிறது. தேவன் நேசிக்கும் மக்களின் வாழ்வில் இப்படிபட்ட எதிர்பாராத குழப்பங்களும் உபத்திரவங்களும் நிச்சயம் வரும். அவர்களின் வாழ்வில் இப்படிப்பட்ட உபத்திரவங்களை தேவன் தனது மகிமைக்காகவே அனுமதிக்கிறார்.

இந்த சுழ்நிலையில் யோசேப்பு உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை, அவன் தேவனிடம் முறுமுறுக்கவில்லை. மரியாளிடத்தில் நீதி செலுத்த முற்படவில்லை, மாறாக பொறுமை காக்கிறான். நிதானமான முடிவுகளை எடுக்கிறான். ஒரு விசுவாசியாக உபத்திரவத்தின் மத்தியில் நாம் எப்படி இருக்க வேண்டுமென்று யோசேப்பின் வாழ்க்கை நமக்கு  கற்றுகொடுக்கிறது. இதே நிலையை ப.ஏ. யோசேப்பின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், தாவீது, தானியேல், என்னும் எவ்வளவோ தேவ மனிதர்களும் தேவனிடத்தில் காரியங்களை ஒப்புவித்து அவரின் வழிநடத்துதல்களுக்காக காத்திருப்பதை பார்க்கிறோம்.

அவன் நீதிமானாயிருந்து – வேதம் என்ன இங்கே அர்த்தபடுத்துகிறது. நீதிமான் என்று சொல்லும்போது அவன் பாவத்திற்கு விலகினவன் கிடையாது. பாவம் செய்யாதவன் என்று அர்த்தபடுத்தவில்லை. அவன் தேவ நீதியை சார்ந்தவன் என்று வேதம் கூறுகிறது. தேவனிடத்தில் இரக்கத்தையும், கிருபையையும் பெற்றவன். தேவனால் தனது பாவங்களிலிருந்து மன்னிப்பை பெற்றவன். தேவ தண்டனையிலிருந்து காக்கபட்டவன்.  தேவனுக்கு பயந்தவன். ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது, பேதுரு, பவுல் எல்லோரும் அப்படியே நீதிமான்களாக என்னபட்டார்கள் . யோசேப்பு தனது பாவ நிலையை உணர்ந்து தான் எவ்வாறு தேவனால் மன்னிக்கபட்டிருக்கிறேன், தேவ தன்டனையிலிருந்து எப்படி காக்கபட்டிருகிறேன் என்பதை உணர்ந்தவனாக செயல்படுகிறதை பார்க்கிறோம்.

அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் – நீதியான தண்டனையை மரியளாடத்தில் செலுத்த பிரியப்படாமல், அவள் செய்த துரோகத்திற்கு தக்கதாக, பழிக்குபழி வாங்காமல் அவளை மன்னிப்பதற்கு தயாராக இருக்கிறான். நீதிமானுடைய குணாதிசயம் இதுதான். (யோசேப்பு, தாவீது,)

இரகசியமாய் அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான் – அவளுடைய பாவத்தை மூடுவதற்கு, அதை சகித்துக்கொள்ள தயாராயிருந்தான். தனது பிரச்சனையில் தேவனது சித்தத்திற்கு தன்னை ஒப்புகொடுத்து தேவனின் வழிநடத்துதலுக்கு காத்திருக்கிற நிலையை இங்கு பார்க்கிறோம் ( நீதிமானின்  மற்றுமொரு குணாதிசயம்).

அவன் தீமையை நன்மையினால் வெல்வதற்கு தயாராயிருக்கிறான். இந்த ஒரு உன்னதமான குணாதிசயம் இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் பூரணமாய் காணப்பட்டதை பார்க்கிறோம். அவரின் பிறப்பிலிருந்து மரணம் வரை உபத்திரவங்கள், வேதனைகள் சூழ்ந்து காணப்பட்ட போதிலும் தேவ சித்ததிற்காக தொடர்ந்து காத்திருந்து தன்னை சுற்றியுள்ள எல்லா பாவிகளுக்கும், துரோகிகளுக்கும் மரணம்வரை பாவ மன்னிப்பையும் தனது மேலான அன்பையும் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த நிலையிலும் வெளிபடுத்தினார்.

நமது வாழ்கையில் தேவன் உபத்திரவங்களை அனுமதிக்கும்போது நாம் எவ்வாறு செயல்படுகிறோம்? பாவத்தை சகித்து தேவனுக்கு காத்திருக்கிற நிலையை கொண்டிருகிறோமா? பிறரை மன்னிக்கும் இருதயத்தை கொண்டிருக்கிறோமா? அல்லது மனித முயற்சிகளை, ஞானத்தை சார்ந்து சுய வழிகளை பின்பற்றுகிறோமா?

  • உபத்திரவத்தின் மத்தியில் தேவனின் செயல்பாடு (வ-2௦-21)

வ- 2௦ – அவன் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில் – தனது பிரச்சனையின் விடுதலைக்காக ஏங்கிகொண்டிருக்கையில்,

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: – தேவன் அவனது வாழ்கையில் இடைபடுகிறார்.தேவன் தனது மக்களை உபத்திரவத்திலே விட்டுவிடுபவர் அல்ல.அவர் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். உபத்திரவப்படுகிற தேவ ஜனத்திற்கு நிச்சயம் விடுதலை உண்டு. தேவன் தனது செய்தியை அவனுக்கு அனுப்புகிறார்.

தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, – இங்கே தேவ தூதன் வெறுமனே யோசேப்பே என்று அழைக்கவில்லை, தாவீதின் குமாரானாகிய யோசேப்பே என்று அழைப்பதற்கான காரணம் என்ன? தேவனுக்கும் அவனுக்குமான உறவு இங்கு கூறப்படுகிறது. அவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் புத்திரன், அவனின் முற்பிதா தேவனது நேசத்திற்குரிய தாவீது ராஜா. ஒருவேளை அது அவனுக்கு தெரிந்திருந்தாலும் இங்கே மறுபடியும் தேவன் அவனது முற்பிதாக்களின் வாழ்வில் தான் எப்படிபட்ட தேவனாக இருந்தார் என்று அவனுக்கு நினைவுபடுத்துகிறார். அவனின் தேவன் யார், கடந்த காலங்களில் இந்த தேவன் எப்படி செயல்பட்டார் என்று அவனுக்கு சொல்லபடுகிறது. உபத்திரவத்தின் மத்தியில் விசுவாசி தேவனுக்குள்ளான தனது நிலை என்ன, கடந்த காலங்களில் இந்த தேவன் தன்னிடத்திலே எவ்வாறு செயல்பட்டார் என்று நோக்கிபார்க்க அழைக்கபடுகிறான்.

உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; – இங்கே தேவன் யோசேப்பின் விருப்பங்களையும், வழிகளையும் நிர்மூலமாக்குகிறார். அவன் அவளை தள்ளிவிட முடிவெடுத்து தேவனது சித்தத்திற்கு காத்திருக்கிறான், தேவன் அவனது சித்தப்படி காரியங்களை செயல்படுத்தி தன்னை இந்த உபத்திரவத்திலிருந்து காப்பாறுவார் என்று எண்ணிகொண்டிருக்கிறான். அவன் எடுத்த முடிவு சரி என்று அதையே தேவனும் செய்வார் என்றுகூட அவன் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இங்கு தேவன் உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல, உங்களது வழிகள் என் வழிகள் அல்ல என்ற வார்த்தைக்கேற்ப தேவன் அவன் விரும்பியதற்கு மாறாக செயல்படுகிறார். அவன் எதை விரும்பவில்லையோ தேவன் இங்கு அவனை அதை செய்ய வைத்து தனது திட்டத்தை நிறைவேற்றுகிறார். அவனுக்கு அது கடினனமானதாக, அவனது  விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் அவன் அதற்கு கீழ்படிவதையே தேவன் விரும்புகிறார். பிரச்சனையின் போது நமது விருப்பதை, நமது வழிகளில் தேவன் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்காமல் தேவன் எதை விரும்புகிறாரோ, அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், எப்படிப்பட்ட விளைவுகளை கொண்டு வந்தாலும் அதற்கு கீழ்படிந்து வாழ்ந்தால் மாத்திரமே நமக்கு விடுதலை, இல்லையென்றால் நமது சுய வழிகள் தேவனின் கோபத்துக்கும் அவரது ஆக்கினைக்கு நேராகவே மட்டுமே நம்மை இட்டு செல்லும்.

அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது –

மரியாளின் கர்ப்பத்திற்கு காரணம் அவள் விபசாரம் செய்து, துன்மார்க்கமாய் வாழ்ந்ததினால் அல்ல. அவள் தேவனது உன்னதமான திட்டத்திற்காக தெரிந்துகொள்ளபட்டவளாயிருக்கிறாள் என்று அவனுக்கு கூறப்படுகிறது. மரியாள் தேவனால் பயன்படுத்தபடுகிற பாத்திரமாய் இருக்கிறாள் என்று அறிவிக்கபடுகிறது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாகஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். – அவனுடைய உபத்திரவத்தின் மூலம் தேவன் அவனுக்காக வைத்திருக்கும் மேலான ஆசீர்வாதத்தை வெளிபடுத்துகிறார். ஒரு யூதனாக மேசியாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவனது வாழ்வில் அவனது மனைவியினிடத்திலிருந்து அந்த உன்னதமான மேசியா வரப்போகிறார் என்கிற மகிமையான சத்தியம் அறிவிக்கபடுகிறது. நீதிமானாக பாவத்தோடு போராடுகிற யோசேப்புக்கு அந்த பாவத்திலிருந்து விடுதலை தரக்கூடிய தேவ குமாரன் அவனது குடும்பத்தில் பிறக்க போகிறார் என்ற மீட்பின் சுவிஷேசம் அவனுக்கு அறிவிக்கபடுகிறது. தேவனுடைய மேன்மையான இரட்சிப்பின் திட்டத்தில் மேலான பாத்திரமாக நீ பயன்படுத்தப்பட போகிறாய் என்கிற உன்னத அழைப்பு யோசேப்புக்கு  கொடுக்கபடுகிறது. பரிசுத்தமான தேவ குமாரனுக்கு பெயர் வைக்கும்படியான மாபெரும் சிலாக்கியத்தை நீ பெறுகிறாய் என்று கூறபடுகிறது. திரளான ஜனங்கள் வரப்போகிற கிறிஸ்து மூலமாக பாவத்திலிருந்து மீட்கப்பட நீயும் ஒரு கருவியாக பயன்படுத்தபட போகிறாய் என்கிற உன்னத ஆசீர்வாதம் கொடுக்கபடுகிறது.

வேதத்தில் உபத்திரவங்களை சந்தித்த ஒவ்வொரு தேவ மனிதர்களுக்கு பின்பாக இப்படிப்பட்ட மேலான தேவ திட்டமும், நோக்கமும் இருந்ததை பார்க்கலாம் ( ஆபிரகாம், யோசேப்பு, தாவீது, தானியேல், மோசே).

நமது ஆண்டராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்விலும் தனது ஒவ்வொரு இக்கட்டான நிலைகளில் பிதாவாகிய தேவனுக்குள்ளான தனது உறவில் தன்னை திடப்படுத்திகொண்டு தேவன் தனக்குமுன் வைத்திருந்த உன்னதமான இரட்சிப்பின் திட்டத்திற்கு தன்னை ஒப்புகொடுத்தார்.

தேவ ஜனங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு உபத்திரவங்களுக்கும், இக்கட்டான நிலைகளுக்கும் மத்தியில் தேவன் தனது இரட்சிப்பின் மேன்மையான திட்டங்களையும், செயல்பாடுகளையும் வைத்து இருக்கிறார். ஒரு விசுவாசியாக நீ இப்பொழுது உன் வாழ்கையில் கடினமான, பயம் நிறைந்த சூழ்நிலையில் காணப்படுவாயானால் அதின் மூலம் தேவன் உனக்கு அநேக ஆவிக்குரிய பாடங்களை கற்பிக்க இருக்கிறார் என்பதை மறவாதே. கிறிஸ்துவிற்குள்ளான உனது நிலையை அறிந்து அவர் ஒருவருக்கே உன்னை அர்ப்பணித்து வாழ்.  நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லதுஅதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங். 119:71)

3. உபத்திரவத்தின் மத்தியில் தேவ மனிதனின் கீழ்படிதல் (வ- 24-25)

வ. 24-   யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்துகர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

தேவன் யோசேப்புக்கு தனது வார்த்தையை அனுப்பி அவனது பிரச்சனைக்கான தீர்வை கூறி, அவரது சித்தத்தையும் நோக்கத்தையும், தனது மேலான ஆசீர்வாதத்தையும் அறிவிக்கிறார். தேவ வார்த்தைக்கு கீழ்படியும்படியான மாபெரும் கட்டளையும் அவனுக்கு தரப்படுகிறது. யோசேப்பு இப்பொழுது எதை செய்ய வேண்டும்? அவனது சுய சித்தம் மரியாளை தள்ளிவிட சொல்கிறது. தேவனுடைய வார்த்தை அவளை சேர்த்துக்கொண்டு வாழ சொல்கிறது. மரியாளை சேர்த்துக்கொண்டு வாழ்வது என்பது யோசேப்புக்கு அவ்வளவு சுலபமான காரியமா? ஒருபோதும் இல்லை. யோசேப்புக்கு மரியாளை சேர்த்து கொண்டு வாழ்வது என்பது எவ்வளவு அவமானமான காரியமாக இருந்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். அவன் தனது பெற்றோர்களிடத்தில், தனது நண்பர்களிடத்தில், உறவினர்களிடத்தில் இதை கூறும்போது எப்படி செயல்பட்டிருப்பார்கள். எவ்வளவு எதிர்ப்புகளை அவன் சந்தித்து இருக்க வேண்டும். எவ்வளவுபேர் அவனை ஏளனம் செய்திருப்பார்கள், எவ்வளவுபேர் அவனை தூஷித்திருப்பார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டு அவனது உணர்வுகள் எவ்வளவு பாதிக்கபட்டாலும் தேவனது வார்த்தைக்கு கீழ்படிகிறான். அவனது முழு சமுதாயாமும் அவனை எதிர்த்தாலும் தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்க யோசேப்பு துணிகிறதை பார்க்கிறோம்.

“பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.” அப்.4:19

வ-25 “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்துஅவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”

இங்கே யோசேப்பின் கீழ்படிதல் பாரபட்சமாக, அரைகுறை மனதோடு அல்ல. தன்னை முற்றிலும் தேவ வார்த்தைக்கு எவ்வாறு ஒப்புக்கொடுத்தான் என்று இப்பகுதி விவரிக்கிறது. அவன் மரியாளை மனைவியாக சேர்த்துகொண்டது மாத்திரமல்ல, தனது திருமண உறவின் எல்லாவிதமான மகிழ்ச்சிகளையும், ஆசைகளையும் தேவ வார்த்தையின் நிறைவேறுதலுக்காக முழு இருதயத்தோடு தன்னை அர்பணித்தான் என்று பார்க்கிறோம். தனக்கான எந்தவொரு சுய விருப்பங்களையும் வழிகளையும் செயல்படுத்த பிரயாசப்படாமல் தனது எல்லாவித உணர்வுகளையும் கட்டுபடுத்தி, கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படும்வரை அனுதினமும் தனது சரீர சோதனைகளை தேவனது வார்த்தையினால் மேற்கொண்டான் என்று பார்க்கிறோம். வரப்போகிற கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தின் மேன்மைக்காக, அநேக ஜனங்களின் பாவ விடுதலைக்காக இங்கே யோசேப்பு தன்னை முற்றிலும் ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புகொடுத்தான். சுயத்தை முற்றிலும் அழிப்பதே தேவ வார்த்தைக்கு கீழ்படிவதற்கான அஸ்திபாரம். “அப்படியிருக்கசகோதரரேநீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்றுதேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” ரோமர். 12:1

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் பிதா தனக்கு நியமித்த இரட்சிப்பின் பணியை செயல்படுத்துவதற்கு முழு உலகமும் அவரை எதிர்த்த நிலையிலும் பிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற தனது சுயத்தை முற்றிலும் அழித்து, தனது பரலோக மேன்மையை இழந்து அடிமையாக தன்னை பிதாவின் சமூகத்திற்கு ஒப்புகொடுத்தார். (பிலி. 2: 6-8)

நமது விசுவாச வாழ்வு எப்படி? உபத்திரவங்கள், எதிர்ப்புகள் மத்தியில் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிவதற்கு நம்மை முழுமையாக அர்பணிக்கிறோமா? அல்லது நமது சித்தபடி வாழ்கிறோமா? ஒரு விசுவாசியினுடைய வாழ்வில் அவன் விரும்பாத நிலையிலும் தேவன் தனது சித்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அழைக்கிற தேவன் தான் அழைக்கிற மனிதனின் வாழ்வில் அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்றாமல் ஒருபோதும் போவதில்லை. அவரின் வார்த்தை ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை, தேவன் செய்ய நினைப்பது ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் தவறாது, அவர் தனது சித்தப்படி தனது ராஜ்ஜியத்தை கட்டுகிறார். எல்லா மனிதனும் அதற்கு கீழ்படிந்து தன்னை அர்பணிப்பதே அவசியமானதும், நன்மையானதும் கூட. உங்களை தமது பரம் இராஜ்ஜியதிற்கு அழைத்த தேவனின் வார்த்தைக்கு முற்றிலும் உங்களை அர்பணிக்காமல், உங்கள் சுயத்தை இழக்காமல் ஒருபோதும் தேவனின் மகிமையை உங்கள் வாழ்வில் காண முடியாது. மனந்திரும்பி உபத்திரவங்கள் மத்தியில் பொறுமையோடு காத்திருந்து தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து முற்றிலும் உங்களை அர்ப்பணியுங்கள் அப்பொழுது தேவன் யோசேப்பின் வாழ்க்கையைபோல உங்கள் வாழ்கையிலும் மகிமைப்படுவார். ஆமென்!.

Read More
08 Jun
0

மெய்யான சீஷனின் குணாதிசயம்

ஆசிரியர் : போதகர் G. மார்க்

இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீஷனாக வாழ்வது என்றால் என்ன? ஒரு சீஷனுடைய குணாதிசயம் எப்படி இருக்க வேண்டும்? நான் உண்மையாகவே கிறிஸ்துவின் சீஷனாக வாழ்கிறேனா? என்கிற கேள்விகள் ஒரு  மெய்யான கிறிஸ்தவன் தன்னைக் குறித்து கேட்கவேண்டிய அதி முக்கியமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கான பதில் வேதத்திலே இயேசுகிறிஸ்து தன்னுடைய சீஷர்களின் வாழ்க்கை மூலமாக தெளிவுபடுத்துகிறார். இந்த உலகில் கிறிஸ்துவைக் குறித்தும், கிறிஸ்தவ சீஷத்துவ வாழ்க்கையை குறித்தும், திருச்சபை செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும்  இயேசு கிறிஸ்து  அவருடைய  12 அப்போஸ்தலர்களை முன்மாதிரியாக அவருடைய  திருச்சபைக்கு கொடுத்திருக்கிறார். அவர்களில் ஒருவரான அப்போஸ்தலரான   அந்திரேயாவின் வாழ்க்கை  மூலமாக சீஷத்துவ குணாதிசயத்தை பற்றி சிறு சுருக்கமாக பார்க்கலாம்.அந்திரேயாAndrew

இவர் வாழ்ந்த இடம் கப்பர்நகூம். இவர் ஒரு மீனவர், யோவான்ஸ்நானகனை பின்பற்றியவர். பேதுருவோடு இணைந்து மீன்பிடி தொழில் செய்து வந்தவர். இவரைப் பற்றி வேதம் அதிகம் பேசவில்லை என்றாலும், இவரைப் பற்றி கூறுகின்ற ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை. இவருடைய வாழ்க்கை சூழல் பற்றி அறிவது அவசியம். அதிக வரிச்சுமை கொண்ட ரோம அரசாங்கம்  கீழ் வாழ்ந்து வந்தார். மாய்மாலங்களும், சடங்குகளும் நிறைந்த மதகுருமார்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார். இவர் கலிலேயனானதினால் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்தார். நீதியற்ற, சர்வாதிகார, ஊழல் நிறைந்த ஆட்சியினாலும், பொய்களாலும், வேஷங்களாலும் நிறைந்த ஆராதனை முறைமைகளாலும் சந்தோஷமற்ற, நிம்மதியற்ற நிலையில் இருந்தார். தன்னை சூழ்ந்திருக்கின்ற அனைத்து பிரச்சினைகலிருந்தும் எப்பொழுது விடுதலை  என்று ஏங்கி காத்துகொண்டிருந்தவராக இருந்தார். தேவனுடைய ஆலயத்திலும், ஜெப ஆலயத்திலும் சென்று ஆராதிக்க முடியாத, மெய்யான தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கும் அரிதான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் யோர்தான் நதியருகில் பிரசங்கித்து கொண்டிருக்கிற யோவான்ஸ்நானகனை குறித்து கேள்விபடுகிறார். கப்பர்நகூமிலிருந்து நீண்ட தூரம் பயணித்து யோவான்ஸ்நானகனின் பிரசங்கத்தை கேட்க வருகிறார். இங்கே அவருக்கு சொல்லப்படுகிற செய்தி ‘மனந்திரும்புங்கள்! பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’.  அந்திரேயா தன்னைசுற்றி வெளியில் உள்ள பிரச்சனைகளுக்கு விடுதலை தேடி வருகிறார். இங்கே அவருடைய உள்ளான அடிப்படை பிரச்சனையான பாவத்திலிருந்து மனந்திரும்புதலைக்குறித்து எச்சரிக்க படுகிறார். அந்த பாவ விடுதலை வர இருகின்ற மேசியாவாகிய இயேசுகிறிஸ்து  மூலமாக மட்டுமே என்று அறிந்து விசுவாசித்து  அவர் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து யோவான்ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்று கடந்து போகையில் அவன் ‘’இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’’ (யோவான் 1:38-41) என்றுகூறும்போது அந்திரேயா  யோவான்ஸ்நானகனை விட்டு கிறிஸ்துவின் பின் சென்று அவரை பற்றி அறிய விரும்புகிறார். கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று அவரோடு தங்கி ஐக்கியப்படுகிறார். அந்த ஐக்கியத்தின் விளைவாக இயேசுகிறிஸ்துவின் தெய்வீகம் மற்றும் அவரது மேசியா  தன்மைகள், செயல்பாடுகள் பற்றியும் அறிந்து அவரே தேவனால் பாவ பரிகார பலியாக அனுப்பப்பட்ட தேவ குமாரன் என்று விசுவாசிக்கிறார். அவரின் பாடு, மரணம் மாத்திரமே பாவத்தின் அடிமைதனத்திலிருந்து  தனக்கு   விடுதலையளிக்கும் என்று பெருமகிழ்ச்சி அடைகிறார்.கிறிஸ்துவுடனான தனிப்பட்ட ஐக்கியம் , அவர் மூலமாக தான் பெற்ற மெய்யான சந்தோஷத்தினால் அவரைப் பற்றி சொல்ல அந்திரேயாவின்  இருதயம் துடித்தது. கிறிஸ்து தனக்கு அளித்த அந்த தேவ அன்பையும் தயவையும் பிறர்மீது காண்பிக்க  அவரின் இருதயம் பேராவல் கொண்டது. உடனே அந்திரேயா தன் வீட்டிற்கு சென்று  முதலாவது அந்த அன்பையும் சந்தோஷத்தையும்  தன் வீட்டிலுள்ள அவர் சகோதரனாகிய பேதுருவிடம் வந்து வெளிப்படுத்துகிறார். அந்திரேயா சீமோன் பேதுருவை பார்த்து  சொல்கிறார் ‘’மேசியாவை கண்டோம்’’ என்று. அதற்கான அர்த்தம் இவ்வளவு காலம் நாம்  எதிர்பார்த்து காத்திருந்த அந்த மெய்யான சந்தோஷத்தையும், விடுதலையையும் தர இருக்கிற தேவ குமாரனாகிய கிறிஸ்து வந்து விட்டார். அவரே நமக்கு பாவ விடுதலையான ஆத்ம இரட்சிப்பை தருகிறவர். அவர் நாசரேத்தூரானாகிய இயேசுகிறிஸ்துவே!. அவருடைய அன்பையும் கிருபையையும் நான் பெற்று இருக்கிறேன் என்பதாகும். அந்திரேயா வெறும் செய்தியை மாத்திரம் சொல்லிவிட்டு போகாமல் பேதுருவை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வருகிறார் (v-42).  பேதுருவை மாத்திரமல்ல இன்னும் ஒருசிலரை அவர் கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறார். யோவான் சுவிசேஷத்தில் ஒவ்வொரு முறையும் யாராயாவது ஒருவரை கிறிஸ்துவிடம் இவர் அழைத்து வருவதை நாம் பார்க்கலாம் (1:38-41–பேதுரு, 6:8-9-சிறுபையன், 12:20-22-கிரேக்கர்கள்). சக மனிதனுக்கு கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து  அவர்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருவதில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிற சீஷன் தான் அந்திரேயா. இதுதான் ஒரு மெய்யான  சீஷனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணாதிசயம். அவன் தான் கிறிஸ்துவின் மூலமாக பெற்ற பாவ மன்னிப்பையும், அவருடைய கிருபையையும் தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. தான் பெற்ற அந்த சுவிசேஷ நற்செய்தியை தான்  சந்திக்கிற அனேகரிடம் பகிர்ந்துகொள்ள பிரயாசப்படுவான். சுவிசேஷ  இருதயம்

இதிலிருந்து நாம் கற்பது என்னவென்றால் மெய்யான ஆவிக்குரிய சீஷனுடைய  வாழ்வின் ஒரு முக்கிய அடையாளம் சுவிசேஷ இருதயத்தை கொண்டிருப்பதாகும். உங்களுக்கு  அப்படிபட்ட இருதயம் இருக்கிறதா?  உண்மையாகவே நீங்கள் இயேசுகிறிஸ்து மூலமாக ஆத்ம இரட்சிப்பை பெற்றிருப்பீர்களானால், அவர் ஒருவர் மாத்திரமே உங்கள் வாழ்வின் சந்தோஷமாக இருப்பாரானால் அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை உங்களால் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படி பகிர்ந்து கொள்ளக்கூடிய விருப்பமும் வாஞ்சையும் உங்கள் இருதயத்தில் இல்லாமலிருந்தால் நீங்கள் மெய்யாகவே இயேசுகிறிஸ்து மூலமாக  பாவ விடுதலையையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் பெறவில்ல என்பதே  உண்மை. வஞ்சிக்கபடாதிருங்கள் சகோதரர்களே! கிறிஸ்து உங்களுக்கு தந்த இரட்சிப்பு என்பது உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவோடு தொடர்புடையது மாத்திரமல்ல, அது உங்களுக்கும் உங்களை சார்ந்திருக்கிற சக மனிதர்களோடும்  தொடர்புடையது. உங்கள் குடும்பம், சமுதாயம், பணிபுரியும் இடம் ஆகியவற்றிலுள்ள சக மனிதனிடம் கிறிஸ்துவின் அன்பை உங்களால் காண்பிக்க முடியவில்லையென்றால் உங்களில் கிறிஸ்து இல்லை என்பதே உண்மை. இன்றே உங்கள் பாவ நிலையை உணர்ந்து மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள். அவரே உங்களுக்கு பாவ மன்னிப்பு என்கின்ற ஆத்ம மீட்பையும், அந்த மீட்பின் கனிகளில் ஒன்றான சுவிசேஷ இருதயத்தையும் தர வல்லவர். அப்பொழுதுதான் அப்பொழுதுதான் நீங்கள் மெய்யாகவே கிறிஸ்துவிற்கு  சீஷனாக இருந்து வாழ முடியும்.

அந்திரேயாவின் வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய இன்னொரு பாடம் கிறிஸ்துவின் அன்பை  முதலாவது வீட்டில் உள்ளவர்களுக்கு காண்பிக்க வேண்டும். குடும்பத்தில் கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து சீஷனாக இல்லாதவன் திருச்சபையிலும், சமுதாயத்திலும் ஒருபோதும் இருக்க முடியாது. மெய்யான சீஷன் என்பவன் தான் காண்கிற ஒவ்வொரு தனி நபர் மீதும் கிறிஸ்துவின் ஆத்ம இரட்சிப்பையும், அன்பையும் பகிர்ந்துகொள்ள பிரயாசப்படுபவன். இப்படிப்பட்ட நபர்களால் மாத்திரமே திருச்சபை வளர்வதை நாம் பார்க்க முடியும். ஒவ்வொரு திருச்சபையின்  வளர்ச்சிக்கும்  இப்படிப்பட்ட நபர்களையே தேவன் மிக சிறந்த கருவியாக வைத்து செயல்படுத்துகிறார்.அர்பணிப்புள்ள  இருதயம்

அந்திரேயாவைப்பற்றி இன்னொரு நிகழ்வை நாம்  யோவான்- 6:5-9 வசனங்களில் காணலாம். இந்த பகுதி ஆண்டாவராகிய இயேசுகிறிஸ்து 5-அப்பங்கள் 2-மீன்களை கொண்டு 5000 புருஷர்களுக்கு போஷித்ததை பற்றி பேசுகிறது. இங்கே

கிறிஸ்துவின் சீஷர்கள் ஜனங்கள் பசியாயிருப்பதை அறிந்து அவர்களை அனுப்பிவிடும்படி ஆண்டவரிடம் கூறுகிறார்கள். ஆண்டவர் அவர்களிடம் நீங்களே இவர்களுக்கு போஜனம் கொடுங்கள் என்கிறார். அதற்கு அவர்கள் நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். அப்பொழுது அவர் உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அப்பொழுது அந்திரேயா ‘’இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் 5 வாற்கோதுமை அப்பங்களும்  2 மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்’’ -யோவான்- 6:9. இந்த வார்த்தைகளை யோவான் சுவிசேஷத்தில் மாத்திரமே நாம் காண முடியும்.

இந்த வார்த்தைகளை நாம் படிக்கும்போது இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு நோக்கத்தொடு இந்த வார்த்தைகளை தனது வேதத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடத்தில் நீங்களே இந்த ஜனங்களுக்கு போஜனங்கொடுங்கள் என்று கூறும்போது அவர்கள் எல்லோரும் தங்கள் சுய ஞானத்தாலும் பெலத்தாலும் யோசித்து தங்களால் அது முடியாத காரியம் என்கின்றனர். அவர் ‘’உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார்’’(மாற்கு 6:38). இது கிறிஸ்து அவர்களுக்கு  கொடுத்த கட்டளை. இந்த கட்டளைக்கு அவர்களில்  எத்தனை சீஷர்கள் கீழ்படிந்தார்கள் என்று வேதம் வெளிப்படையாக சொல்லவில்லை, ஆனால் யார் இதற்கு உடனே கீழ்படிந்து அதற்கான பலனை கிறிஸ்துவிடம் கொண்டு வந்தது என்று பார்க்கும்போது அப்போஸ்தலனாகிய யோவான் அது அந்திரேயா என்று பதிவு செய்திருக்கிறார். எல்லோரும் தங்கள் இயலாமையையும், பலவீனங்களையும் பார்த்துக்கொண்டு முடியாது என்று சிந்தித்து கொண்டிருக்கின்ற வேளையில் இங்கே அந்திரேயா கிறிஸ்துவின் வார்தையில் விசுவாசம் கொண்டவராக, அதை செயல்படுத்துகிறவராக அவ்வளவு திரளான ஜனகூட்டத்தில் அப்பங்கள் எங்கே இருக்கிறது, யாரிடம் இருக்கிறது என்று தேடி முயற்சிக்கிற நபராக நாம் அவரை பார்க்கிறோம். சூழ்நிலை சாதகமாக இல்லாத நிலையில் தனக்கு கிறிஸ்து கொடுத்த அந்த சிறிய வார்த்தையின் மீது அக்கறையுள்ளவராக அர்பணிப்புள்ள இருதயத்தோடு அந்த சிறிய வெளிச்சத்தில் பயணிக்கிறவராக அவர் இருக்கிறார். அநேக மக்கள் கூட்டதிற்குள்ளாக சென்று தேடி அங்கே ஒரு சிறுவனிடத்தில் 5 அப்பங்கள் இருப்பதைக்கண்டு அவனை இயேசுகிறிஸ்துவிடம் அந்திரேயா கொண்டு வருகிறார். இந்த 5 அப்பங்களும் 2 மீன்களும் அந்த திரளான ஜனங்களின் தேவையை சந்திக்க இயலாது என்று அவருக்கு தெரியும்.  ஏனென்றால் அவரே சொல்கிறார் ‘’ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்’’ அந்த 5 அப்பங்கள், 2 மீன்களிலே அந்திரேயாவின் நம்பிக்கையும் விசுவாசமும் இல்லை மாறாக அதை பெற்றுக்கொள்கிற

கிறிஸ்துவிடம் இருந்தது. அந்த 5 அப்பங்களும் 2 மீன்களும் இல்லாமலும் கிறிஸ்துவினால் அந்த ஜனங்களை போஷிக்க முடியும் என்று அந்திரேயா அறிந்திருந்தார். ஆனாலும் அவருடைய வார்த்தையின் மீது விசுவாசம் வைத்து அவருக்காக செய்கிற எந்த சிறிய அர்பணிப்பும், முயற்சியும் வீணல்ல என்று அவர் நன்கறிந்திருந்தார். தேவனுடைய பார்வையில் எந்த ஒரு சின்ன பொருளும், காரியமும் முக்கியமற்றதாக இராது என்பதை அந்திரேயா  அறிந்திருந்தார்.  இங்கே இயேசுகிறிஸ்து அந்த அந்திரேயாவின் விசுவாத்தையும், அர்பணிப்பையும் அங்கிகரித்தவராக அந்த 5 அப்பங்களையும் 2 மீன்களையும் வாங்கி இந்த பெரிய அற்புதத்தை செய்கிறார். அந்த 5 அப்பங்களும் 2 மீன்களும் இல்லாமலும் கிறிஸ்துவினால் அந்த ஜனங்களை போஷிக்க முடியும் ஆனால் அந்த சிறிய அப்பத்தையும், மீனையும் வைத்தே ஆண்டவர் பெரிய அற்புதத்தை நடத்தினார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது மெய்யான சீஷனின் மற்றொரு அடையாளம் தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு அர்பணிப்புள்ள இருதயத்தை கொண்டிருப்பதாகும். அவன் தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து தேவனுக்காக எப்பொழுதும் தன்னை இழப்பதற்கு தயாராயிருப்பவன். அவன் சூழ்நிலையையும், சுற்றியிருப்பவர்களையும் பார்க்காமல் கிறிஸ்துவிற்காக ஒவ்வொரு நொடியும் தன்னை அர்பணிக்க தயாராயிருப்பவன். உங்களுடைய வாழ்வு இப்படியிருக்கிறதா? உங்களுடைய இருதயம் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ளதாக இருக்கின்றதா? அப்படியில்லையென்றால் இன்றே கிறிஸ்துவிடம் மனந்திரும்பி சுய ஆசையையும், சுய இச்சையையும் மாத்திரம் விரும்புகிற உங்கள் பொல்லாத இருதயத்தை மாற்றி கிறிஸ்துவிற்காக உங்கள் வாழ்க்கை முழுவதையும் இழக்கதக்கதான அர்பணிப்புள்ள இருதயத்தை தேவன் உங்களுக்கு தரும்படி அவரிடம் மன்றாடுங்கள். நமக்கு எப்படிப்பட்ட  வரம் கொடுக்கபட்டிருக்கிறது என்பது முக்கியமில்லை, அதில் நாம் எவ்வளவு உண்மையும், அர்பணிப்பும் உள்ளவர்களாயிருக்கிறோம் என்பதே முக்கியம்.

.

இந்த அந்திரேயா ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பாக பிரசங்கம் பண்ணியதாகவோ, திருச்சபை நாட்டியதாகவோ, நிருபங்கள் எழுதியதாகவோ நாம் வேதத்தில் பார்க்க முடியாது. பெந்தகொஸ்தே நாளுக்குப்பிறகு இவரைப்பற்றி வேதம் எந்த காரியத்தையும் சொல்லவில்லை. பேதுருவும் அந்திரேயாவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருடைய தலைமைத்துவ செயல்பாடு வித்தியாசம் நிறைந்தது. பேதுரு தன்னுடைய அழைப்பிற்கு எவ்வளவு பொருத்தமானவரோ  அதே போல் அந்திரேயாவும் அவருடையஅழைப்பிற்கு பொருத்தமானவர். பேதுரு, யாக்கோபு, யோவானைப்போல தூண்களாக இல்லாமலிருந்தாலும் அந்த தூண்களுக்கு பின்பலமாக இருந்து

தாங்கக்கூடிய தாழ்மையின் கல்லாக அந்திரேயா இருக்கிறார்.  திருச்சபைகளில் இப்படி பின்பலமாக இருந்து செயல்படுகிற நபர்களின் அர்பணிப்பு மகத்துவமான ஒன்று. தேவன் தாமே இப்படிப்பட்ட குணாதிசயத்தை நமக்கு தந்து அவருக்கு உகந்த சீஷனாக வாழ நம்மை மாற்றுவாராக!.

அந்திரேயாவின் இறுதி வாழ்வு

ஆதித்திருச்சபை வரலாற்று ஆசிரியர்களில்  ஒருவரான எசுபியஸ் கூறுகிறார் – அந்திரேயா எருசலேம் திருச்சபையில் சிறிதுகாலம் ஊழியம் செய்துவிட்டு பின்பு ஸ்க்ய்தியா (scythiya-ரஷ்யா)   சென்று ஊழியம் செய்தார். அங்கு சில திருச்சபைகளை நிறுவியபின் அங்கிருந்து ஸ்காட்லாந்து நாட்டிற்கு சென்று ஊழியம் செய்தார். இறுதியாக கிரீஸ் தேசத்தில் விசுவாசத்தின் விளைவாக உபத்திரவபடுத்தப்பட்டு X வடிவ சிலுவையில் மரிக்கிறார்.  அவர் ஆணியால் அறையப்படாமல் கயிறுகளால் கட்டப்பட்டு அடிக்கப்பட்டு 2 நாட்கள் உயிருடன் இருந்து மரிக்கிறார். அந்த 2 நாட்களிலும் தன்னை கடந்து போகிற மக்களுக்கு சுவிசேஷம் சொல்லிக்கொண்டே மரிக்கிறார். அதினால் தான் அந்திரேயா புனித இரட்சகர் (patron saint) என்று ரஷ்யா, ஸ்காட்லாந்து மற்றும் கிரீஸ் தேசங்களில் அறியப்படுகிறார்.

Read More