Blog

30 Nov
0

நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார்

நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார்


போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல்

 

கிறிஸ்மஸ் என்றவுடன் இன்று பெரும்பாலானோரின் மனதில் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக், நட்சத்திரம்,  பாடல்கள்,  அலங்காரங்கள்  என்ற சிந்தனைதான் ஆழமாகப்  பதிந்துவிட்டது. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை தவறவிடுவதே ஆகும்.  எனவே, மேற்சொல்லப்பட்ட தலைப்போடு கிறிஸ்து பிறப்பை  சிந்திக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.

முதலில், கிறிஸ்து  தொடர்பான   சில யதார்த்தங்களை கவனிப்பது நல்லது. கி.மு மற்றும் கி.பி அதாவது, கிறிஸ்துவுக்கு முன் – கிறிஸ்துவுக்கு பின் என்று மனிதசரித்திரம் இருபெரும் கூறாக பிரிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, கிறிஸ்து என்பவர் சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பதை மனுக்குலம் ஏற்றுக்கொண்டிருப்பது கண்கூடு. அவர் சரித்திர மனிதர் என்ற அடிப்படையிலேயே, மகாபுருஷர் என்றும்,  ஒரு மதத்தை ஸ்தாபிக்க வந்தவர் என்றும், ஏழைகளின்  பிரதிநிதி என்றும், புரட்சிகரமான கருத்துக்களை பரப்பியவர் என்றும் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு ஏற்றபடி அவரது பிறப்பை மட்டுமல்ல, அவரை நல்லவராகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த கருத்தாக்கம் பாதிக்கிணறு தாண்டுவது எவ்வளவு ஆபத்தானதோ அதுபோலத்தான் என்பதை நாம் உணர வேண்டும். இதன் பின்னணியில், கிறிஸ்து பிறப்பின் சத்தியத்தை விளங்கிக் கொள்வோமாக. 

 

பொதுவாகவே, ஒரு குழந்தையின் பிறப்பானது பெற்றோருக்கும், சார்ந்த குடும்பத்துக்கும் நிச்சயமாகவே மகிழ்ச்சியான அனுபவமாகும். மற்றவர்களுக்கோ அது ஒரு செய்தியாக மட்டும் அப்போது இருந்துவிடும். குழந்தை தன்னுடைய மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வளருவதால், அதன் தாக்கம் நாளடைவில் பெற்றோர் உட்பட  அநேகருக்கு சலிப்பாகவும், வருத்தமாகவும்  உருமாற வாய்ப்புகள் உண்டு என்பது சமுதாய உண்மை.  ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கி,மு 700ல் ஏசாயா தீர்க்கதரிசியால்  அடிமைகளாய் நம்பிக்கையை தொலைத்த  இஸ்ரவேல் ஜனங்களுக்கும், தொடர்ந்து உலகம் முழுவதிற்கும் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டதே இந்த வார்த்தைகள். இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்ற தேடுதலுக்கு விடையே  இப்பிரதியின் செய்தியாகும்.  

எனவே,கிறிஸ்து குறிப்பிட்ட நாளில்  பிறந்தார் என்பதைவிட கிறிஸ்து ஏற்ற காலத்தில் வெளிப்பட்டார் என்பதே பொருத்தமாக இருக்கும்.   

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் 

அவர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் பிறந்தார் என்பது தான் யதார்த்தத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் நமக்காக பிறந்தார் என்று எழுதப்பட்டது கவனிக்கப்படல் அவசியம். இதன் அர்த்தம் என்ன? பாவம் மனிதனை கடவுளை விட்டு நிரந்தரமாகப் பிரித்து விட்டது. முற்றிலும் பரிசுத்தரான கடவுள் பாவத்தை மேலோட்டமாகப் பார்க்க முடியாது. அதேசமயம், பாவத்திற்குரிய தண்டனையையும் மனிதன் தாங்கிக் கொள்ள முடியாதே. சரீர மரணத்தைப் பற்றியே மனுக்குலம் அதிகமாகச் சிந்தித்து தங்களது வாழ்நாட்களின் பெரும்பகுதியை வீணடிக்கிறார்கள். ஐந்தறிவுள்ள உயிரினங்களும் சரீரதேவைக்காகவே சாப்பிடுகின்றன; சரீர தற்பாதுகாப்பிற்காகவே எதிர்வினை ஆற்றுகின்றன. ஆனால், கடவுளின் சாயலான ஒழுக்கநெறி மற்றும் அறிவுநெறியோடு ஜீவாத்துமாவாக படைக்கப்பட்ட பகுத்தறிவுள்ள மனுக்குலம் அப்படியல்லவே! எனவே, மனித வீழ்ச்சியானது நித்திய தன்மையுடையது என்பதுதான் சரியாக இருக்கும்.

உதாரணமாக, பொய் ஒரு பாவம்; ஆனால், அதை யாரிடம் சொல்கிறோமோ, அதற்கேற்றபடி பரிகாரம் எப்படி மாறுபடுகிறது என்ற அதிர்ச்சி கலந்த உண்மையை இப்படிப் பார்க்கலாம்.

யாரிடம் ?      பரிகாரம்?
நம்மைவிட வயது/அந்தஸ்து குறைந்தவர்கள்     அதிகாரம் – என்னையே எதிர்த்துக் கேள்வியா? 
நமக்கு ஒத்த வயது அல்லது அந்தஸ்துடையவர்கள்இணைசெயல் – நேற்று நீங்கள்  இன்று நான்
நமது வயதில்/அந்தஸ்த்தில் மேலானவர்கள் நிர்ப்பந்தம் – பணிவு அல்லது  சிறிய தண்டனை
நித்திய தன்மையுள்ள தேவன்   நித்திய தண்டனை

எனவே, நித்திய கடவுளுக்கு விரோதமான பாவத்தை நித்திய தன்மையுடைய ஒருவரே நிவிர்த்தி செய்ய முடியும்.மனிதனால் விளைந்த பயங்கரத்தை மனிதனே நிவிர்த்தி செய்ய வேண்டும். ஆனால், பாவ அடிமைத்தனத்திலுள்ள மனிதன் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முடியாதே. மேற்கண்ட உதாரணம் சொன்னதுபோல், தொடர்ந்து நாம் பாவமும் செய்கிறோம்; அதேபோல்,நாம் தேடும் பரிகாரமும் தற்காலிகமானதே. குற்றமனசாட்சி எல்லோரையும் ஆளுகிறபடியால் மரணபயம் எனும் அடிமைத்தனத்திலேயே மனிதர் காலம் செலவிடுகிறார்கள். இருளைக் கண்டு மனுக்குலம் ஏன் பயப்படுகிறது? மரணபயம் இருப்பதாலேயே! இந்நிலையில், கடவுள் ஒரு வழியை உண்டு பண்ணாவிட்டால் மனுக்குலத்திற்கு நம்பிக்கையே கிடையாது.எனவே, நித்திய கடவுளுக்கு விரோதமான பாவத்தை நித்திய தன்மையுடைய ஒருவரே நிவிர்த்தி செய்ய முடியும். கடவுளின் பரிபூரண நீதி பாவத்திற்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும்; அதேசமயம், அவரது மிகுந்த அன்பு பாவத்திற்கு பரிகாரம் செலுத்தியுள்ளது. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமால் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. (யோ.3:16).

கிறிஸ்து மனிதனாகப் பிறப்பது அவசியமெனினும், ஏன் பாலகனாகப் பிறக்க வேண்டும்? என்ற கேள்வி தொடருகிறதே என யோசிக்கலாம்.

பாலகன் என்பது கீழ்ப்படிதலையும், தாழ்மையையும் அடையாளப்படுத்துகிறது. அவர் பிறந்தபொழுது “ இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.இன்று கர்த்தராகிய கிறிஸ்து எனும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்”.என்று அறிவிக்கப்பட்டதே இதன் சாராம்சம். ரோமர் காலத்தில்  அரசரிடத்திலிருந்து வரும்  பெரும்பாலான செய்திகள்  நல்ல செய்திகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட கட்டாயப்படுத்தப்பட்டாலும்,,  பேரரசருக்கு மகன் பிறக்கும் செய்திதான் “நற்செய்தி” என்று ஜனங்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட்டது. பேரரசனுக்கு பிறக்கும் வாரீசு மூலம் இந்த சாம்ராஜ்யம் நிலைபெற்று ஜனங்கள் சுபிட்சமாக தொடர்ந்து வாழ முடியும் என்ற அடிப்படையிலேயே இது நற்செய்தி என்று அறிவிக்கப்பட்டது.  கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்த வரலாறே சுவிசேஷங்களில் நற்செய்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாய், ஜீவகாலம் முழுவதும் மரண பயத்தினாலே அடிமைப்பட்டுள்ளபடியால் அவர்களை  விடுதலை செய்யும்படி,  அவரும் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபி.2:14). நான் எதற்கும், யாருக்கும், எந்தக் காலத்திலும் பயப்பட்டதில்லை என்பேனாகில் நிச்சயமாக பொய் சொல்கிறவனாவேன். சமீபத்தில், கொரோனா தாக்கத்தால் என்ன நடக்குமோ என்று உலகமே திகிலில் இருந்ததே! குழந்தைகள் உட்பட கோடிக்கணக்கானோர் சடுதியில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டதையும், அழுவதற்கு யாரும் இல்லாமல் பிணங்கள் தெருக்களில் வீசப்பட்டதையும் நம் வீடுகளில் இருந்தே பார்க்க நேரிட்டதே?   இப்படி, மரணபயமே மனிதனின் எல்லா பயத்திற்கும் அஸ்திபாரமாக இருக்கிறது. பயமானது ஒரு  அடிமைத்தனம் என்றே வேதம் சித்தரிக்கிறது. இருளைக் கண்டு மனிதன் எதற்கு பயப்படவேண்டும்?  மரணபயம் இருப்பதாலேயே! பயத்தைப் பற்றிய நமது எதிர்வினை வேண்டுமானால் குழந்தை பருவத்தில் இருந்ததைவிடவும் தற்போது மாறுபட்டதாக இருக்குமேயன்றி, பயமே எனது வாழ்வில் இல்லை என்று எந்த மனுஷனும்/மனுஷியும் சொல்ல முடியாது.

நன்மை/தீமையை வகையறுக்கும் அதிகாரமுடைய கடவுளால் படைக்கப்பட்ட மனுக்குலம் அவரைச் சார்ந்து, பிறப்பு முதல் முழுமையாகக் கீழ்ப்படிவதின் மூலமே வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டடைய முடியும். “என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” என்ற அனுபவமுள்ள மனுக்குலம் இந்தக் கீழ்ப்படிதலைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில், கிறிஸ்து முற்றும்முடிய தமது பிறப்பு முதல் சிலுவை மரணம் வரை இந்தக் கீழ்ப்படிதலை நிறைவேற்றினார். சிறுபிராய முதல் அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமறியாத பரிசுத்தராக வாழ்ந்தார் என்பது அவர் நமக்காகப் பிறந்தார் என்பதின் அடையாளமாகும். இப்படி, அவர் நூற்றுக்கு நூறு மனிதன் என்பதை பாலகனாகப் பிறந்த அவரது தாழ்மையும், அவரது கீழ்ப்படிதலும் நமக்கு  மெய்ப்பித்தது எனலாம்.“இவர் என்னுடைய நேசகுமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று பரத்திலிருந்து வந்த சத்தம் அவரது சிறுபிராய வாழ்விற்கான முழு அங்கீகாரமாகும். இயேசு பாலகனாகப் பிறந்ததின் மூலம் பாவத்தினால் விளைந்த மனித ஆழத்தின்நம்பிகையற்ற நிலையை தெளிவாக எடுத்துக் காண்பித்துள்ளார். அவர் தமது ஜனங்களின் பாவத்தை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதாலே அவருக்கு இயேசு என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்

குமாரன் என்பது தந்தையின் அதிகாரத்தையும், ஞானத்தையும் உடையவர் என்பது பொருளாகும். தேவகோபாக்கினையின் கீழுள்ள மனிதன் இந்த சிலாக்கியங்களை அனுபவிக்க முடியாது. சிருஷ்டிப்பில் கடவுள் அருளிய இந்த அதிகாரத்தையும், ஞானத்தையும் மனிதன் தனது பெருமையாலும், கீழ்ப்படியாமையாலும் சிதைத்து விட்டான்.  நன்மை-தீமையை வகையறுக்கும் அதிகாரத்தை மனிதன் கையிலெடுத்து சுயநலத்தோடு அதை பிரயோகிக்கிறான். மனிதன் கடவுளைப் பற்றி அறிய முடியுமேயன்றி கடவுளை அறியவே முடியாது.  இந்நிலையில் சூழ்நிலை, கலாச்சாரம், காலசீதோஷ்ணநிலை, பொருளாதாரத்திற்கேற்றபடி அவ்வப்போது சுயபரிகாரமும் தேடிக் கொள்கிறான். இப்படி, பாவத்திற்கு பயப்படுவதைவிடவும், பாவத்தின் விளைவிற்கு பயப்படுவதே மனித இயல்பாக மாறிவிட்டது. இதில் விளையும் ஏமாற்றத்தை புரிந்து கொள்ளக்கூடிய ஞானமும் மனுக்குலத்திற்கு கிடையாது.உலக வல்லமை பெலவீனமாகவும், உலக ஞானம் பைத்தியமாகவும் உள்ளதென தமது கல்வாரி மரணத்தின் மூலம் குமாரனாகிய கிறிஸ்து வெளிக்காட்டியுள்ளார். இதைத்தான்  இருளில் பிறந்த மனிதன் இருளில் வாழ்கிறான் என்று அறியலாம். மனுக்குலம் இழந்த வல்லமையையும், ஞானத்தையும் மனந்திரும்பி தமது குமாரனை  விசுவாசிப்பவர்களுக்கு கடவுள் வாக்கு பண்ணியுள்ளார்.  “இவர் என்னுடைய நேசகுமாரன்; இவருக்கு செவிகொடுங்கள்” என்று பரத்திலிருந்த வந்த சத்தம் இதை தீர்க்கமாகச் சொல்லுகிறது. இப்படி குமாரனை உடையவன் ஜீவனை உடையவனாகிறான். (1 யோ.3:12).  எனவேதான், இயேசு கிறிஸ்து: “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார்.  மட்டுமல்ல, குமாரனாகிய இயேசு கிறிஸ்து தமது இரண்டாம் வருகையில் மனிதனின் அந்தரங்கங்களைக் குறித்து நியாயந்தீர்க்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார் என்பதை குமாரனாக அனுப்பப்பட்டார் என்பதிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க முடியாது.  

இயேசு கிறிஸ்து பாலனாகப் பிறந்தது மனிதனின் ஆழத்தை வெளிப்படுத்தின நிலையில், அவர் குமாரனாகக் கொடுக்கப்பட்டது பிதாவின் உயரம் இன்னதென்பதை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. அவர் பாலகனாய்ப் பிறந்து தாம் நூற்றுக்கு நூறு மனிதன் என்பதையும், அவர் குமாரனாகக் கொடுக்கப்பட்டு  தாம்  நூற்றுக்கு நூறு கடவுள் என்பதையும் நிருபித்தார். இப்படி, இயேசு கிறிஸ்து மட்டுமே பரிபூரண பரிசுத்தமான கடவுளுக்கும், பரிபூரண வீழ்ச்சியடைந்த மனுக்குலத்திற்குமிடையே ஒரே மத்தியஸ்தர் என்பது கிறிஸ்துமஸின் ஆணித்தரமான நற்செய்தியாகும். அவரது இரண்டாம் வருகை அதிக சமீபமாகத் தெரிகிற  இந்தக் காலத்தில் மனந்திரும்பி, அவரை விசுவாசித்து அவர் மூலமாக மட்டுமே வரும் நித்திய இரட்சிப்பை பெற்றுக் கொள்வதே உண்மையான  கிறிஸ்து பிறப்பினால் ஏற்படும் நித்திய அனுபவமாகும். இதை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து இலவசமான நித்திய இரட்சிப்பைப் பெற அழைக்கப்படுகிறீர்கள். 


இந்த செய்தி போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல் அவர்கள் எழுதியது. 

Read More
30 Nov
0

சங்கீதம் 27

பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை

சங்கீதம் 27

இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன அழுத்தம் நிறைந்த நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் என்று கூறுகிறார். உன் வாழ்வில் பிரச்சனை மோதியடிக்கும்போது நீ எங்கே போவாய்? இக்கட்டான நேரங்களில் எப்படி ஜெபிப்பது என்பதை தாவீது இந்த சங்கீதத்தின் முலம் நமக்கு கற்றுத்தருகிறார். இக்கட்டான சூழ்நிலையில், யாவராலும் கைவிடப்பட்ட நிலையில்  இருப்பாயானால் நீ இந்த சங்கீதத்தை வாசிக்கலாம்.

 

இந்த சங்கீதம் தாவீது தேவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆரம்பிக்கிறது. வசனம் 1 “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” இந்த வசனத்தில் தாவீது தேவனை “என் வெளிச்சம்”, “என் இரட்சிப்பு”, “என் ஜீவனின் பெலனானவர்” என்ற மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்துகிறார்.

வெளிச்சம்- இருள் சூழ்ந்த நிலையிலிருந்து தாவீதை மீட்டது. நம்மை இருளின் அந்தகாரத்திலிருந்து விடுதலையாக்குகிறது. வெளிச்சம் நம்மை சரியான பாதையில் நடத்துகிறது. சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

இரட்சிப்பு- தேவன் தாவீதை சவுலின் கையிலிருந்து காப்பாற்றினார். அவர் நம்மை மரணத்தைவிட்டு நீக்கி ஜீவனுக்கு உட்படுத்தியிருக்கிறார். யோவான் 5:24 “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

என் ஜீவனின் பெலனானவர்– தேவன் தாவீதை தோல்வியிலிருந்து விடுவித்தார். தேவ பெலன் நமக்கு வெற்றியை வசதிசெய்கிறார். தேவனுடைய பெலத்தால் முற்றிலும் ஜெயம் கொள்கிறோம். ரோமர் 8:37 “ இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

தேவனின் இந்த மூன்று குணாதிசயங்களை நம் வாழ்வின் பிரச்சனையில் நம்பிக்கையை கொடுக்கிறதாயிருக்கிறது. நாம் ஆராதிக்கிற ஆண்டவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய குணாதிசயங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் எப்பேர்பட்ட எதிரிகளுக்கும் பயப்பட அவசியமில்லை.  எரேமியா 17:5 “மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு,  கர்த்தரை  விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர்  சொல்லுகிறார்”. எரேமியா 17:7 “கர்த்தர்மேல்  நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்”.

நீ யாரை சார்ந்திருக்கிறாய்? தாவீது தன் இக்கட்டில் தேவனை சார்ந்திருக்கிறான்.

வசனம் 2-3 “என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்”. 

வசனம் 2-3-ல் தாவீது தேவன் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுகிறான். தாவீது, தேவன் தன் வாழ்வில் கடந்த காலத்தில் செய்த நன்மையையும், வெற்றியையும் நினைத்து நான் இப்பொழுது தோற்பதில்லை என்கிறான்.  தாவீது தன் வாழ்வில் தேவன் செய்த கிரியைகளை நினைத்து தேவன் மாறாதவர் என்று அறிந்திருந்தான். அவர் எப்பொழுதும் அதே வல்லமையுள்ளவர், உண்மையுள்ளவர் என்பதை உணர்ந்தான். தேவன் உன் வாழ்வில் கடந்த காலத்தில் செய்த அனைத்து காரியங்களையும் நினைத்து அவர் இன்றும் இருக்கிறார் என்று நினைக்கும்போது அவர் நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.

தேவன் நமக்கு ஏற்படுத்தி கொடுத்த நம்பிக்கையில் ஈடுபாடு- வசனம்- 4 கர்த்தரிடத்தில்  ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்”.  தாவீது தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுகிறான்.

சங்கீதம் 84: 1-4 “1. சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 2. என் ஆத்துமா கர்த்தருடைய  ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 3. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 4. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள்.”

தாவீது இதய துடிப்பு தேவனை ஆராதிப்பது. இன்று நீ தேவ பிரசன்னம் இருக்கும் இடத்தில் காணப்பட வேண்டும். எபி.10:25. தாவீதின் இலக்கு தேவனை நேசிப்பது, தேவனின் சமுகத்தை தேடுவது. இது தான் ஒவ்வொரு விசுவாசியின் இலக்காக இருக்க வேண்டும்.தாவீது தேவனையே சார்ந்திருக்க ஒப்புக்கொடுத்தான். அவன் வாழ்வில் அனைத்து தேவைகளுக்கு தேவனை சார்ந்து கொண்டான்.  நாம் அதிகமாக நேரம் ஜெபத்துள் சார்ந்துகொள்ள வேண்டும். நாம் ஜெபிக்க அலைக்கபடுகிறோம். தேவன் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார். எரேமியா 33:3, பிலி. 4:6-7, மத். 7:7. நாம் தேவனை சார்ந்திருக்கும் போது போராட்டங்கள், கவலைகள் மீது வெற்றியுண்டு. 

நாம் தேவனிடத்தில் நம்பிக்கை வைப்பது நமக்கு ஆறுதலை கொடுக்கிறது வசனம் 5-6 கற்றுக்கொடுக்கிறது. தேவன் தாவீதை கூடார மறைவில் வைத்து காப்பாற்றினார். அவர் அவனை எதிரியின் மத்தியிலிருந்து காத்தார். உனக்கு ஏற்படுகிற பிரச்சனை போராட்டங்களில் பத்திரமாக காப்பார். உதாரணமாக, தானியேலின் வாழ்வை சிந்தித்து பாருங்கள். தேவன் நமக்காக ஓர் சிறப்பான இடத்தை வைத்துள்ளார். அவருடைய கூடார மறைவில் வைத்து காக்கிறார். நமக்கு பூரணபாதுகாப்பு உண்டு. உன் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுதலையின் நம்பிக்கை உண்டு. அவர் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி நம்மை மீட்டுள்ளார். ஆகவே நமக்கு பூரண நம்பிக்கை உண்டு. யோவான் 10:28-30. நீ எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் இயேசுவண்டை வா. அவர் உன்னை காப்பார். 


 

Read More
29 Nov
0

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?

வேதபூர்வமான பிரசங்கம் என்றால் என்ன?

பிரசங்கம் என்பது – தேவனால், தேவனுடைய மனிதன், தேவனுடைய ஜனங்களிடத்தில், தேவ ஆவியின் வல்லமையால், தேவனுடைய சத்தியத்தை (வார்த்தையை)கொண்டு செயலாற்றுவது.

தேவனின் வார்த்தையை தேவனின் ஆள்தன்மையோடு கொண்டு சேர்ப்பது தான் பிரசங்கம் என்று Mark Dever கூறுகிறார். அறிவித்தல்அல்ல, விளக்கபடுத்துதல் அல்ல, உபதேசித்தல் அல்ல, உணர்ச்சி வசபடுத்துதல் அல்ல, மக்களை ஆச்சர்யத்திற்குள்ளாக வழிநடத்துவதல்ல,  அவர்களின் முழு ஆள்தன்மையையும் கிறிஸ்துவுக்குள்ளாய் மாற்றமடைய செய்வது தான் பிரசங்கம்.

Preaching is not a speaking, it is a living.- பிரசங்கம் என்பது சத்தியத்தை பேசுவதல்ல, அதில் வாழ்வது. பிரசங்கம் என்பது பாவியான மனிதனை பரிசுத்த தேவனோடு எதிர்கொள்ள செய்வது ஆகும்.- மார்டின் லாய்ட் ஜோன்ஸ்.

பிரசங்கி பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டு தேவனுடைய வாயாக தான் இருக்கிறான் என்பதை ஒரு நொடியும் அவன் மறக்க கூடாது.

வேத வியாக்கியான பிரசங்கம் நான் செய்யவில்லை என்றால் திரித்துவ தேவனை கலங்க படுத்துகிறேன். தேவனின் வழிமுறையை நிராகரிக்கிறேன், கிறிஸ்துவின் அதிகாரத்தை அசட்டை செய்கிறேன், பரிசுத்த ஆவியானவரை செயல்பட விடாமல் கனவீனபடுதுகிறேன்.

வசனத்தின் வல்லமை என்பது ஆவியானவரை தவிர வேறு யாரிடமும் இல்லை. வார்த்தையை செய்தியாக அவரால மட்டுமே மாற்ற முடியும். ஆவியானால் நடத்தபடாதவன், அவரின் சத்தத்திற்கு கீழ்படியாதவனால் ஆவிக்குரிய காரியங்களை விளக்க படுத்த முடியாது. ஆவிக்குரிய காரியங்களை போதிக்க முடியாது. (யாக்.1:21)

வேத வியாக்கியான பிரசங்கத்தின் நோக்கம் என்ன?

1. பாவியை தாழ்மை படுத்துவது, (வீழ்ச்சியின் ஆழம்)

2. மீட்பருக்கு மகிமையை கொண்டுவருவது (கிறிஸ்துவின் சிலுவை)

3.பரிசுத்தத்தை மேம்படுத்துவது. ( தேவனின் சித்தம்) 

இவைகள் உங்களது பிரசங்கத்தில் உள்ளதா ? 

இன்றைய கால பிரசங்கங்கள் எப்படி உள்ளது? இதற்கு முற்றிலுமாக எதிரான நிலையைத்தான் திருச்சபைகளில் பார்க்கிறோம்.
பாவியை உயர்த்தி பேசுவது, கிறிஸ்துவை கனவீனபடுத்துவது, பரிசுத்தம் சீர்குலைவது.


Read More
29 Nov
0

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள்.

உண்ம்மையான் இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1யோவான், ரோமர் 8ம் அதிகாரத்தில் இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ நடைமுறையில் காணப்படும் அடையாளங்களை தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றன. பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிகப்பட்டவர்களின் மனப்பான்மையிலும், வாழ்க்கையிலும் காணப்பட்ட மாற்றத்தை அப்போஸ்தலர் நடபடிகள் 2:37-38,41-47 ஆகிய வசனங்களில் நாம் காண்கிறோம்.


37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.42. அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.43. எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.44. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.45. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.


மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

  1. பாவத்தை குறித்த உணர்வு
  2. வேதத்தை விளங்கிக் கொள்ளுதல்
  3. கிறிஸ்தவ ஐக்கியம்
  4. ஜெபத்தில் ஆர்வம்
  5. புதிய இருதயம்
  6. இரட்சிப்பைக் குறித்த ஆரம்ப நிச்சயம் 
  7. சாத்தானின் தாக்குதல்

பீட்டர் மாஸ்டர்ஸ் அவர்கள் எழுதின புத்தகத்தின் சுருக்கம். இந்த புத்தகம் புதிதாய் இரட்சிக்கப்பட்ட நபர்களுக்கும், இரட்சிப்பின் நிச்சயத்தை பற்றிய கேள்வியோடு வாழும் நபர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக அமையும். 

இந்த புத்தகத்தை பெற்று வாசிக்க விரும்புவோர் எங்களது Email-க்கு உங்களது முகவரியை அனுப்பவும்.

Email Id: [email protected]

Read More
678912