Blog

17 Feb
0

யோனா அறிமுகம்

முன்னுரை :

நாம் தொடர்ச்சியாக யோனா தீர்க்கதரிசன புத்தகத்தில் இருந்து   சிந்திக்கயிருக்கிறோம். யோனா தீர்கதரிசியின் புத்தகம் வேதாகமத்தில் 32வது புத்தகம், 5 வது சிறிய தீர்க்கதரிசன புத்தகம், 4 அதிகாரங்களைக்  கொண்டது. இந்த யோனாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது. இந்த யோனா தீர்க்கதரிசன புத்தகத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது, தேவன் யோனாவை அழைத்தார், அவன்   கீழ்ப்படியாமல் போனான். தேவன் அவனுடைய  கீழ்ப்படியாமையிலிருந்து அவனை திருத்தி, தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றினார் என்று நாம் அநேகரால்  புரிந்துக்கொள்ளப்பட்ட செய்தியாக இருக்கிறது.  ஆனால் இந்த யோனா தீர்கதரிசன புத்தகம் இதையும் கடந்து அநேக கரியங்களை இன்றைக்கு வாழும் நமக்கு கற்றுத்தருகிறது. நாம் வசனங்களை பார்பதற்கு முன் சில குறிப்புகளை தெரிந்துகொள்வது இது புத்தகத்தை விளங்கிக்கொள்வதற்கு  உதவியாகயிருக்கும். 

யோனா தீர்க்கதரிசன புத்தகத்தைப் பற்றிய சில குறிப்புகள்: 

  1. இந்த யோனா தீர்கதரிசன புத்தகம் உவமையோ, சொப்பனமோ அல்லது கட்டுக்கதையோ அல்ல. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ஒரு நிஜ மனிதனுடைய வாழ்வில் நடந்த ஒரு நிஜமான நிகழ்வாகும். 
  2. புத்தகத்தின் தனித்துவம் மற்ற தீர்க்கதரிசனத்தை போல தீர்க்கதரிசியின் பிரசங்கத்தில் தேவனுடைய செய்தி கொடுக்கப்படவில்லை,  சொல்லப்பட வேண்டிய செய்தியானது  யோனாவுடன்  தேவன் எப்படி செயல்படுகிறார் என்பதில் இருக்கிறது.
  3. புத்தகத்தின் உட்கருத்து தேவன் இஸ்ரவேல் ஜனங்களுடைய குறுகிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். நம்முடைய தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு மட்டும் தேவன் அல்ல, அவர் முழு உலகத்திற்கும் தேவன். தேவனுடைய இருதயம் இஸ்ரவேல் ஜனங்களுடைய இருதயத்தை விட பெரியது என்பதே யோனா தீர்க்கதரிசன புத்தகம் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.   
  4. தேவனுடைய இரக்கம் புறஜாதிகளிடத்தில் செல்வதைக் கண்டு இஸ்ரவேல் ஜனங்கள் பொறமைக் கொள்கிறார்கள்.  உபாகமம் 32:21 “தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன்”.

இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த புத்தகத்தை நாம் படிக்கயிருக்கிறோம்.

தீர்க்கதரிசி ஏன் இஸ்ரவேல் யூதேயா தேசங்களில் இருக்கிறார்கள்?

தீர்க்கதரிசிகள் என்பவர்கள் இஸ்ரவேல், யூதேயா தேசம் கர்த்தருடைய தேசம்  ஆகவே தீர்க்கதரிசி ஒருவர் தேவை என்று வரலாற்றில் அவர்கள் இல்லை.  தீர்க்கதரிசி இருக்கிறார் என்றால், அது தேவனுடைய தொடர்ச்சியான இரக்கத்தின் வெளிப்பாடு. நான் தொடர்ச்சியாக உங்களை நேசிக்கிறேன் என்ற தேவனின் உடன்படிக்கையின் உறவின் வெளிப்பாடு. ஓவ்வொரு தீர்க்கதரிசியும் தேவனின் புதிய  அன்பையும் மற்றும் புதிய  இரக்கத்தின் வெளிப்பாடு. தேவன் ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் வரலாற்றில் நம்பிக்கையை இழந்த நிலையில் மிக முக்கியமாக தேவைப்படும் நிலையில் ஒரு தீர்க்கதரிசையை அந்த நிலையில் தேவைப்படும் செய்தியோடு குறித்த காலத்தில் தேவன் அனுப்புகிறார்.   

தீர்க்கதரிசி இருக்கிறார் என்றால், அது தேவனுடைய தொடர்ச்சியான இரக்கத்தின் வெளிப்பாடு. நான் தொடர்ச்சியாக உங்களை நேசிக்கிறேன் என்ற தேவனின்  உடன்படிக்கையின் உறவின் வெளிப்பாடு.

யோனாவின் அறிமுகம் 

யோனா 1:1அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

யார் இந்த யோனா? எங்கேயிருந்து வந்தான், எந்த பகுதியில், யாருடைய அரசாட்சியின் கீழ் தீர்க்கதரிசன ஊழியத்தை செய்து வருகிறான்.  மிக சிறிய அறிமுகம் மட்டுமே இந்த வசனம் நமக்கு  தருகிறது. தீர்க்கதரிசன புத்தகம் எப்பொழுதுமே ஒரு முழுமையான தகவலை கொடுக்கும்.

உதாரணமாக, நாம் மீகா 1:1,  “யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.”  வாசிக்கும்போது மீகா தீர்க்கதரிசி என்பர் இஸ்ரவேல் மற்றும் யூதேயா தேசத்தில் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு சொல்லிக்கொண்டு வந்தார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதை இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் இராஜாக்கள், நாளாகமம் புத்தகத்தை வாசித்தால் தெரிந்துக்கொள்ளலாம். அதேபோல ஏசாயா 1:1 “ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.” இந்த வசனத்தை வாசிக்கும்போது ஏசாயா தீர்க்கதரிசி யூதேயா தேசத்தில் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு சொல்லிக்கொண்டு வந்தார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

ஆனால், யோனா 1 :1 –ல் இப்படிப்பட்ட பிண்ணனி ஏதுமில்லை. அப்படியென்றால் எங்கிருந்து யோனாவைப் பற்றி அறிந்துக்கொள்வது?  2 இராஜாக்கள் 14: 23-27 யோனவைப்பற்றி அறிந்துக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டின் ஒரே பகுதி. இதை வாசிப்பதற்கு முன் இஸ்ரவேல் தேசத்தைப்பற்றிய ஒரு முக்கியமான காரியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

சவுலும், தாவீதும் முழு 12 கோத்திரத்தையும் ஆண்டார்கள் தங்கள் படைகளை வைத்து கானானியர்களை விரட்டி தேசத்தின் எல்லைகளை பெரிதாக்கினார்கள்.  சாலொமோனின் நாட்களில் முற்றிலுமாக கைப்பற்றி, சாலொமோன் ராஜா முழு இஸ்ரவேல் தேசத்தையும் அரசாண்டான். சாலொமோன் தன் வாழ்வின் கடைசியில் அவன் விக்கிரக ஆராதனைக்காரனாகி, அநேக பெண்களை மனந்து தேவனாகிய கர்த்தருடைய வழியை விட்டு விலகினான். அதற்காக தேவன் தன்னுடைய நியாயத்தீர்ப்பை கூறுகிறார் 1 இராஜாக்கள்11:11-12 “ஆகையால்  கர்த்தர்  சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன். ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.” இதன் விளைவாக 12 கோத்திரமாகயிருந்த  இஸ்ரவேல் தேசம் 10 கோத்திரமாகவும் ,2 கோத்திரமாகவும் (யூதா, பென்யமீன்)பிரிந்தது. 10 கோத்திரத்தை இஸ்ரவேல்என்று அழைக்கப்படும் – அதன் தலைநகரம் சமாரியா.  2  கோத்திரத்தை  யூதேயா தேசம் என்றழைக்கப்படும் – அதன் தலைநகரம் எருசலேம்.  10 கோத்திரம் வேகமாக வளர்ந்தது, நியாத்தீர்ப்பு, சிறையிருப்பும் முதலாவது வந்தது. ஒரு ராஜா கூட தேவனுக்கு பிரியமாய் வாழவில்லை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் யோனாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் கூறின வசனத்தை வாசிப்போம்.

2 இராஜாக்கள் 14: 23-27 “யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை. காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்  சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர்  பார்த்தார். இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று  கர்த்தர்  சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.

யோனாவின் ஊழியம் இஸ்ரவேல் தேசத்தில், தேசமும் இராஜாவும் தேவனுக்கு பொல்லாத கிரியைகளை செய்யும்போது யோனா தீர்க்கதரிசி தன்னுடைய ஊழியத்தை செய்கிறான். அவனுடைய செய்தி என்ன? வசனம் 25 ” காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்  சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்“. தேசம் தேவனுக்கு விரோதமாய் இருக்கும் காலத்தில் எலியா எலிசாவை போல  மனந்திரும்புதலை குறித்து பேசாமல் ஆசீர்வாதத்தைக் குறித்து பேசுகிறான். நியாத்தீர்ப்புக்கு மட்டுமே தகுதியாய் இருந்த ஜனத்திற்கு ஆசீர்வாதத்தை பேசுகிறான். யோனாவின் செய்தி மனந்திரும்புதலின் அழுகையாக இருந்திருக்க வேண்டும், செய்தி அதற்கு மாறாக இருந்தது. நியாத்தீர்ப்புக்கு மட்டுமே தகுதியாய் இருந்த ஜனத்திற்கு தேவன் கிருபையை அளித்து, தேசத்தை பெருக செய்கிறார். தேவன் தன்னுடைய இரக்கத்தை பொழிந்தார். தேவன் தன் இரக்கத்தின் ஐஸ்வரியத்தை காண்பிக்க யோனாவின் தீர்கதரிசனத்தை நிறைவேற்றினார். பொல்லாத நாட்களில் இஸ்ரவேலுக்கு இரக்கம் கிடைத்தது.  

தேவனுடைய ராஜ்ஜியத்தில் பயனுள்ளவனாய்  இருப்பது இரட்சிப்பின் அடையாளம் அல்ல. இருதயத்தில் தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றிருக்க வேண்டும் அதுவே இரட்சிப்பின் அடையாளம். பாவத்தின் மோசமான நிலையில் இருக்கிற தேசத்திற்கு நியாத்தீர்ப்பு மட்டுமே கிடைக்க வேண்டிய தேசத்திற்கு தேவன் இரக்கத்தை காண்பித்தார் என்பதை யோனா தன் வாழ்வில் நினிவேவுக்கு போக அழைப்பை பெருவதற்கு முன்பாகவே அனுபவித்திருந்தான். யோனா ஆயத்தம் இல்லாமல் இந்த அழைப்பை  பெறவில்லை. தேவன் இதற்கு முன்பே ஒரு அனுபவத்தை கொடுத்திருந்தார்.

இஸ்ரவேல் மனநிலையானது,  ஆவிக்குரிய வாழ்வில் சரியாக இருக்கும் போது அவர்களுக்கு தேவனுடைய இரக்கம் புறஜாதி மக்களுக்கு சென்றடைவது தடையாக இருந்ததில்லை. சங்கீதம் 67:1-3வசனங்களை வாசிக்கும்போது, தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.” தேவனுடைய மகிமையும் கீர்த்தியும், இரட்சிப்பும் எல்லா தேசங்களிலும் சென்றடைவது அவர்களுக்கு மகிமையாக இருந்தது. அதேவேளையில் இஸ்ரவேலுடைய ஆவிக்குரிய வாழ்வு பின்வாங்கும் போது, உலக சிந்தைகளால் அகப்பட்டு இருக்கும் போது, தேவன் எங்களுக்கு மட்டும் தான், நாங்கள் தான் தேவனுடைய ஜனம். புறஜாதிகளுக்கு தேவனுடைய இரக்கம் அவசியம் இல்லை என்ற குறுகிய எண்ணம், தேவனுடைய கிருபையை எண்ணி பார்க்க தவறிவிடுகிறார்கள். இது நமக்கும் ஒரு எச்சரிப்பு. உலக பிரகாரமாக நாம் வாழும் போது, மற்றவர்களை பற்றி குறுகிய எண்ணம் ஏற்படுகிறது. சுவிசேஷம் அவர்களுக்கு தேவையில்லை, அவர்கள் எல்லாம் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் குறைத்து மதிப்பீடுகிறோம். இது தான் இப்பொழுது யோனாவின் நிலை. 

தேவனின் கட்டளை

இப்படிப்பட்ட நிலையில் தேவன் யோனாவுக்கு ஒரு கட்டளையை கொடுக்கிறார். வசனம்-2

“நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.”

நினிவே எப்படிப்பட்ட நகரமாயிருந்தது:  நினிவே பட்டணம் அசரியா தேசத்தின்  தலைநகரம். பழைய ஏற்பாட்டை வசிக்கும்போது  தேவன், இந்த தேசத்தை பாவம் செய்த இஸ்ரவேலரை சிறைபிடித்து போகும்படியாய் நியமித்திருந்தார்.

வசனம் 3 கூறுகிறது  நினிவே மகா பெரிய நகரம்.

எந்த விதத்தில் பெரியது   ->  அளவு – பாபிலோனைவிட பெரியது.

                            • (யோனா 3:3) 3 நாள் ஆகும் நகரத்தை சுற்றிவர.
                            • ஜனத்தொகை.
                            • கட்டிடங்கள் பெரியது.
                            • அரசு அலுவலகம்.

வசனம் 2 தேவன் யோனாவுக்கு கொடுத்த கட்டளையின் தன்மையை விளக்குகிறது 

தேவன் கொடுத்த கட்டளையின் தன்மை: 

தேவன் தன்னுடைய முழு சர்வ அதிகாரத்தையும் இந்த கட்டளையில் வெளிப்படுத்துகிறார். எந்தவொரு விஷயத்தை முன் பேசாமால் நேரடியாக யோனாவே நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். வீரியமுள்ள தேவனுடைய அதிகாரம் இந்த கட்டளையில் வெளிப்படுகோறது. தேவன் தன்னுடைய ராஜரீக அதிகாரத்தை பயன்படுத்துகிறார். ஏசாயாவை  தேவன் தயார் செய்தார், ஒரு தரிசனத்தை கொடுத்து பிரசங்கி. ஒரு கடினமான வேலைக்கு தயார் செய்தார். ஏரேமியாவிடம் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக பேசி ஆயத்தப்படுத்தினார். ஆனால், யோனாவிடம் தேவன் அப்படி செயல்படவில்லை. அதேபோல எந்த தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்படாத ஒரு கட்டளை. இஸ்ரவேல் தேசத்தைவிட்டு வெளியே போய் தீர்க்கதரிசனம் கூறு என்று தேவன் யோனாவிடம் கூறுகிறார்.எந்தவொரு தீர்க்கதரிசியும் புறஜாதியிடம் போகவில்லை நீ போ! நான் கர்த்தர். யோனாவே நான் கர்த்தர், நான் என் சர்வ அதிகாரத்தை பயன்படுத்துகிறேன் நீ எழுந்து போ என்றார். யோனாவின் தேவன் இன்று என்னுடைய நம்முடைய தேவன். தேவன் பேசும் போது தன்னுடைய முழு அதிகாரத்தோடு பேசும் போது கீழ்ப்படிய வேண்டும். 

தேவன் பேசும் போது தன்னுடைய முழு அதிகாரத்தோடு பேசும் போது கீழ்ப்படிய வேண்டும். 

வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் தேவனுடைய முழு அதிகாரமுடைய வாக்கியம். அதை நாம் வாசிக்கும் போது கீழ்ப்படிய வேண்டும்.

இந்த கட்டளை எதற்கு என்றால் நினிவே நகரத்திற்கு தேவன் தன்னுடைய இரக்கத்தை வெளிப்படுத்த. இரக்கம் என்பது அப்படியே எங்கிருந்தோ வராது. இரக்கம் எப்பொழுதுமே கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிப்பதில் இருந்தே வரும். தேவன் உடனடியாக தன்னுடைய இரக்கத்தையும் கிருபையையும் காட்ட நினைக்கும்போது, அதை செய்யாமல் இருக்க கர்த்தருடைய பிள்ளைக்கு இது எவ்வளவு பெரிய அவமானம். நாம் சபையாக ஏன் இருக்கிறோம்,  சபையினுடைய அடிப்படையான வேலை என்ன? சபையின் வேலை இங்கு இருக்கிற மக்களை சந்தோஷமாகவும், பாதுகாப்பதும், உயர்வான நிலையை கொடுப்பதுமில்ல. சபையின் அடிப்படையான் வேலை சபை இந்த சமுதாயத்திற்குள் சுவிசேஷ செய்தியை கொண்டு செல்ல வேண்டும். தேசத்திற்கு இரட்சிப்பை கொண்டு வர தான் தேவன் நம்மை வைத்திருக்கிறார். மத்தேயு 28:18-20   வாசிக்கவும். தேவன் கிருபை என்ற ஈவை ஏன் கொடுத்திருக்கிறார் அதை தேசத்திற்கு கொடுக்க, நீ எழுந்து போ !

இரக்கம் எப்பொழுதுமே கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிப்பதில் இருந்தே வரும்.

கட்டளையின் மற்றொரு தன்னை என்னவென்று பார்க்கும்போது,

அது நீதியுள்ளது. வசனம்-2 அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார் . அந்த நகரம் தேவனுடைய நீதியான நியாத்தீர்ப்புக்கு முன்பாக  நிற்கிறது. மனிதன் பாவம் செய்து விட்டு, அவன் யோசிப்பது என்னுடைய பாவம் யாருக்கும் தெரியாது, அவர்களுடைய இருதயத்தில் பாவம் என்று ஒன்று இல்லாதது போல வாழ்வார்கள்.  

சங்கீதம் 50:21, 22 ” இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

மனிதனுடைய எல்லா செயல்களும் தேவனுடைய கணக்கில் உள்ளது. அதேபோல, தேவன் இஸ்ரவேலோடு உடன்படிக்கை உறவில் இருக்கும் போது,மற்ற எல்லாஜனங்களையும் தேவன் மறக்கவில்லை. அவரே முழு உலகத்தையும் ஆளுகிறவர். அவரே நீதியுள்ள நியாயதிபதி. அவர் ஒருவரே  இரக்கத்தையும், நீதியையும் காட்டுகிறவர். பிதாவான தேவன் சிலுவையில் தன்னுடைய ஒரே நேச குமாரனை மரிக்க செய்து தன்னுடைய நீதியையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தினார். தேவனுடைய இரக்கம் என்பது  எனக்கு உன் பாவம் தெரியும் இயேசு கிறிஸ்துவின் முலம் மன்னிப்பு உண்டு, தேவனுடைய நீதி என்பது நான் உன்மேல் கோபமாய் இருக்கிறேன், தண்டனை உண்டு. சிலுவையில் இயேசு கிறிஸ்து மீது தன்னுடைய நீதியை காண்பித்து, அவரை விசுவாசிக்கிற மனிதர்கள் மீது தன்னுடைய கிருபையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

எல்லாருடைய பாவத்தை அறிந்திருக்கிறார். நினிவே பாவத்தை போல நம்முடைய பாவமும் அவருடைய சமுகத்தை எட்டியது. எல்லாரிடத்திலும் பாவம் செய்திருக்கிறோம். இன்று வரை அவருடைய ஒரு நியாத்தீர்ப்பும் வரவில்லை இது அவருடைய இரக்கம். இரக்கத்தின் காலத்தில் எழுந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்க செல்லவேண்டும். இந்து தான் சபையின் பொறுப்பு. யோனா இந்த பொறுப்பை உணராமல் கீழ்ப்படியாமல் போனான். சபையின் வேலை மத்தேயு 28:18-20. விசுவாசியே மனந்திரும்பி பொறுப்பு உணர்ந்து செயல்பட தேவன் அழைக்கிறார். 

Read More
10 Feb
0

சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை எவற்றை விசுவாசிக்கிறது?

தனித்துவமும் சத்தியமும் நிறைந்த வேத கொள்கைகளை பற்றுறுதியுடன் விசுவாசிப்பதினால் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள்  மற்ற திருச்சபைகளில் இருந்து வேறுபட்டு தனிசிறப்புடன்  செயல்படுகிறது. பின்வரும் வேத கொள்கைகளை சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள்  விசுவாசிக்கின்றன. 

  1. கர்த்தருடைய வார்த்தை போதுமானது, அதிகாரமுடையது:

    சகல மெய் கிறிஸ்தவ விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையின் அகத்தூண்டுதலையும், தவறின்மையையும் விசுவாசித்தாலும், வேதம் போதுமானது என நம்புவதில்லை. வேதம் கர்த்தருடைய ஆவியானால் அருளப்பட்டதினால், அதில் எங்கும் பிழையோ தவறோ இல்லை என்று அனைத்து மெய் கிறிஸ்தவர்களும் விசுவாசிப்பதுண்டு. இதை மறுக்கிறவன் தேவனை பொய்யராக்கி தன் ஆத்துமாவை அழித்துப் போடுகிறான். இதை விசுவாசித்தபோதிலும், தங்களுடைய தனிப்பட்ட மற்றும் திருச்சபை வாழ்வின் எல்லா நிலைகளிலும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அனைவரும் வாழ்வதில்லை. இந்த நவீன மற்றும் பின் நவீன காலங்களில, வேதம் எல்லா தரப்பு மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் போதுமான வழிகாட்டியாக இல்லை என்பதே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மற்றும் போதகர்களின் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை அதுவல்ல. வேதம் எக்காலத்திற்கும், அணைத்து தரப்பினருக்கும், எல்லா காலகட்டங்களிலும் போதுமானதாகவே இருக்கிறது. அதற்குத் தங்களை உட்படுத்தி  வாழ ஜனங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, கிறிஸ்துவினால் நியமிக்கப்பட்ட  மந்தைகளின் மேய்ப்பராகிய போதகர்கள்  ஏசாயா தீர்க்கதரிசியைப் போல வேதத்தை எடுத்துரைக்க வேண்டும். வேதத்தையும், சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து  வெளிச்சமில்லை.

  2. எது திருச்சபை என வேதம் மட்டுமே போதிக்கிறது: 

    தேவ ஜனங்களுக்கு கிருபையின் சத்தியத்தை எடுத்துரைக்கின்ற ஸ்தலமாகிய திருச்சபை எவ்வாறிருக்க வேண்டுமென்றும், அதன் பணிகள் என்னவென்றும் வேதம் மட்டுமே போதிக்கிறது. மூப்பர்கள் மற்றும் உதவிக்கரர்கள் எனும் இரண்டு மகத்தான பணிகளையும், அவர்களுடைய தகுதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் வேதம் போதிக்கிறது. திருச்சபையில்  ஆராதனை  எவ்வாறிருக்கவேண்டும் என்றும், யார் திருச்சபையின் அங்கத்தவர்களாக முடியும் என்றும் அவர்களுடைய சிறப்புரிமைகள் மற்றும் வேதம் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறதென்றும் வேதம் தெளிவாகக்   கூறுகிறது. மேலும், திருச்சபை என்ன செய்ய வேண்டும்  எதனடிப்படையில் பிற திருச்சபைகளோடு ஐக்கியம் கொள்ள வேண்டும். சுவிசேஷம் அறிவிப்பதற்கு மிஷெனரிகளை எவ்வாறு அனுப்ப வேண்டும். ஊழியத்திற்கென்று மனுஷரை எப்படி பயிற்சிக்க வேண்டும் மற்றும் தனது ஜனங்களுக்கான தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான காரியங்கள் அனைத்திற்கும் வேதம் மட்டுமே போதுமானது.

  3. தேவ மகிமைக்கென்று திருச்சபை ஜீவிக்கிறது:

    இது சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகளின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். திருச்சபை தேவ மகிமைக்கென்று ஜீவிக்கிறபடியால், தேவனுடைய ஆராதனையும், கர்த்தருடைய வார்த்தையும் அதன் ஜீவதாரமாய் இருக்கிறது. திருச்சபை தேவனுடைய வீடேயல்லாமல்,  மனுஷருடையது  அல்ல. அங்கே அவர் தனது ஜனங்களோடு விஷேசித்த  முறையில் சந்தித்து உறவாடுகிறார். தேவன் வாசம் செய்கிற ஸ்தலமே பரிசுத்தவானுக்கு பூமியிலே  ஆதி உன்னதமான ஸ்தலமாகவும் தேவகிருபையை நாடுகின்ற பாவியினுடைய ஆத்மீகத் தாகத்தை தீர்க்கின்ற  நீரோடையாகவும் இருக்கிறது. அது பயபக்தியும், பரிசுத்தமும் நிறைந்த இடம். அதுவே தேவன் சஞ்சரிக்கும் வீடும், பரலோகத்தின் வாசலுமாய் இருக்கிறது. இந்த நம்பிக்கையே சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகளின் தேவ ஆராதனையில் காணப்படுகின்ற பயபக்திக்கும் கனத்திற்கும் கரரணம்.

  4. தேவனுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கான மையம் உள்ளூர் திருச்சபை:

    இக்காலகட்டத்தில், திருச்சபை சாரா அமைப்புகளும், ஸ்தாபனங்களும் அதிகமாய் பெருகி வருவதையும், எந்த திருச்சபையிலும்  அங்கமாயிராத  சுயாதின சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள் அங்குமிங்கும்  அலைந்து திரிவதையும் நாம் காண்கிறோம்.  இக்காரியம் ஆவிக்குரிய ஆபத்தாய் மட்டுமின்றி வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சிந்தைக்கு முற்றிலும் முரணானதாய் இருக்கிறது. திருச்சபை மட்டுமே  பூமியிலே தேவன் வாசஞ்செய்கிற  விஷேசித்த  கூடாரமாயிருக்கிறது. மனமாற்றம், ஞானஸ்நானம் மற்றும் சீஷத்துவத்தின் வாயிலாக புதிய திருச்சபைகளை   ஸ்தாபிக்கும்படி உள்ளூர் திருச்சபைகளினால் அனுப்பப்படுகின்ற  சுவிசேஷ பிரசங்கியாளர்களினாலே  திருச்சபைக்கு தேவன் நியமித்த பிரதான கட்டளை நிறைவேற்றப்படுகிறது. ஜீவனுள்ள தேவன் திருச்சபைக்கென்று  நியமித்த பிரதான பணியை அநேக கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் தங்கள் கைகளில் எடுத்து செயலாற்ற முயற்சிக்கின்றன.  மிஷெனரி பணியை தேவன் யாரிடத்தில் ஒப்புவித்தார்? விசுவாசிகளை சீஷராக்கி, உற்சாகப்படுத்தி,   போதிக்கும்படி  தேவன் யாருக்குக் கட்டளையிட்டார்? அடுத்தடுத்தத்  தலைமுறையினரை வேத சத்தியத்திற்குள்ளாக வழிநடத்தும்படி  பரிசுத்தவான்களைத் தகுதிப்படுதவும் ஆவிக்குரிய வரம் பெற்ற புருஷரை பயிற்றுவிக்கவும், தேவன் யாருக்குக் கட்டளையிட்டார்? இவ்வனைத்திற்க்கும் உள்ளூர் திருச்சபையே பொறுப்பு என எக்காலத்திற்கும் போதுமான வேதம் கூறுகிறது. இதை உறுதியாக விசுவாசித்து நடைமுறைப்படுத்துவதினாலேயே  சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை பிற திருச்சபைகளிடமிருந்து  வேறுபடுகிறது.

  5. பிரசங்கமே திருச்சபை வாழ்வின் அஸ்திபாரம்:   பாவிகளை இரட்சிக்கவும், தன்னுடைய பரிசுத்தவான்களை பலப்படுத்தவும் தன்னுடைய ராஜ்ஜியத்தைக் கட்டி  எழுப்பவும், ஜனங்களை  இருதயத்திலே கிறிஸ்து வல்லமையாய் உயர்த்தப்படவும் தேவன் எதை பயன்படுத்துகிறார்? கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிப்பதின் மூலாமகவே தேவன் இவை அனைத்தையும்  நிறைவேற்றுகிறார். ஆகையால், இந்நாட்களில் திருச்சபைகளில் காணப்படுகின்ற ஆழமற்ற போதனைகள், ஆராதனையில்  பிரசங்கத்திற்கு  முக்கியத்துவம் அளிக்காமல் சாட்சிகள், சினிமாக்கள், நாடகம், நடனம் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற வேத விரோத காரியங்களை  சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் நிராகரிக்கின்றன. கர்த்தருடைய  ஆராதனையில் வேதத்திற்கும்,  பிரசங்கத்திற்குமே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிரசங்கமே  ஆராதனையின் மையமாய் இருக்க வேண்டும்.  
  6. திருச்சபையில் ஆணின் தலைமைத்துவம் இருக்க வேண்டும்:

    நவீன மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள், சுயாதீன முற்போக்குச் சிந்தனைகளின் விளைவாக, இன்று கிறிஸ்தவம் பெண்ணியமாக்கப்பட்டு வருகிறது. தேவன் ஆணையும், பெண்ணையும் படைத்து, அவர்களுக்கு  வெவ்வேறான பணியையும், பங்கையும் கொடுத்தார். படைப்பு, வீழ்ச்சி மற்றும் மீட்பில் இவர்களிருவரும்  சமமாய் இருந்தாலும், வீட்டிலும், நாட்டிலும், திருச்சபையிலும் ஆணே தலைமை வகிக்கும்படி தேவன் தனது சர்வ ஏகாதிபத்ய திட்டத்திலே தீர்மானித்திருக்கிறார். குடும்பத்தை கணவனும், தகப்பனுமே ஆழ வேண்டும். திருச்சபை ஆராதனைகளில் ஆராதனையை வழிநடத்தவும், ஜெபிக்கவும், போதிக்கவும், பிரசங்கிக்கவும், மூப்பராகவும், உதவிக்காரராகவும், செயலாற்றவும்   தேவன் ஆண்களையே நியமித்திருக்கிறார். அதற்கு திருச்சபையும், விசுவாசிகளும் தாழ்மையுள்ள இருதயத்தோடு தலைவணங்கிக் கீழ்ப்படிய வேண்டும். இப்படிப்பட்ட  ஆராதனைகளையும், தலைமைத்துவத்தையும் குடும்ப அமைப்பையும்   சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகள் பின்பற்றுவது தேவனுக்கு  பிரியமாயிருக்கிறது.        

  7. திருச்சபை அங்கத்துவத்தின் நன்மை:  

சபை அங்கத்தவர்கள் கூடிவருதலையும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும், ஏவப்படவும், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லவும், வேண்டுமென  எபிரயேர் ‌‍‌10ஂ24-25  -ல் சொல்லப்பட்டுள்ளதை   சீர்திருத்த திருச்சபை தவறாமல்  பின்பற்றுகிறது. சபை அங்கத்தவர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவுற விளக்கி, அவற்றை தேவ மகிமைக்கென்று நிறைவேற்ற அயராது பாடுபடுகிறது. ஞாயிறு காலை – மாலை  ஆராதனைகளில் பங்குபெறுகின்ற சபை  அங்கத்தவர்களுடைய எண்ணிக்கையில் அதிகமான வித்தியாசம் காணப்படாதிருந்தால் அத்திருச்சபையின் ஆவிக்குரிய வளர்ச்சியும் முதிர்ச்சியும் அதிகரிக்கும். 

     8. இரட்சிப்பில் திருத்துவ தேவனின் செயல்:

தேவன் சர்வ ஏகாதிபத்யமுள்ள ஆண்டவர், அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னதாகவே, இரட்சிப்பிற்கென்று  குறிப்பிட்ட பாவிகளை முன்குறித்து, தெரிந்து கொண்டார் என்பது அவருடைய புகழ்ச்சிக்கும் மகிமைக்கும் ஏற்றதாயிருக்கிறது. காலம் நிறைவேறினபோது, கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, பிதாவாகிய தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுடைய பாவங்களுக்காக  மரித்ததினாலே, அவர் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார். பரிசுத்த ஆவியாகிய தேவனும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொரு  ஜனங்களினுடைய இருதயத்திலும் கிறிஸ்து நிறைவேற்றின மீட்பின் பணியை அவர்களுடைய மனமாற்றத்திருக்கு நேராக வழிநடத்தும்படி வல்லமையாக செயலாற்றுகிறார்.இப்படியாக, ஒரு மனிதனுடைய இரட்சிப்பில் திருத்துவ தேவனின் செயல் இருப்பதை சீர்திருத்த விசுவாசம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. மேலும், மனிதனுடைய முழுமையான வீழ்ச்சி, தேவனுடைய நிபந்தனையற்ற தெரிவு, குறிப்பிட்டோறுக்கான கிறிஸ்துவின் பாவபரிகாரபலி, நிராகரிக்கப்பட முடியாத வல்லமையான அழைப்பு மற்றும் பரிசுத்தவான்களுடைய விடாமுயற்சியும், பாதுகாப்பும் ஆகிய வேத சத்தியங்கள் அடங்கிய கிருபையின் போதனைகளை சீர்திருத்த விசுவாசம் பறைசாற்றுகின்றது. இவை மட்டுமின்றி, தேவனுடைய நியாயப்பிரமாணம்  மற்றும்   திருச்சபையைக் குறித்து உயர்வான சிந்தையை சீர்திருத்த விசுவாசம் கொண்டுள்ளது.

இத்தகைய மேன்மையும், கனமும் மகத்துவமும் நிறைந்த வேத சத்தியங்களின் தாக்கமும், பயிற்சியும் உங்களுடைய தனிப்பட்ட, குடும்ப மற்றும் திருச்சபை வாழ்வில் காணப்படுகிறதா? என உங்களை நீங்களே சோதித்து பாருங்கள்! இதனடிப்டையில் உங்கள் வாழ்கையை சீரமைக்க விரும்புவீர்களேயானால், உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்து செய்து முடித்த இரட்சிப்பின் பணியை விசுவாசித்து, வேதம் போதிக்கின்ற சத்தியங்களுக்கு முழு மனதோடு கீழ்ப்படியுங்கள். தேவன் உங்கள் இருதயத்தை மாற்றி, புதிதான ஆவியைத் தந்து, அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகின்ற விருப்பத்தையும் ஆசீர்வாதங்களையும் அருளி உங்களை                             ஆசீர்வதிப்பாராக!  சீர்திருத்த விசுவாசத்தையும் கிருபையின் போதனைகளையும் என்றென்றும் காத்து, அதை உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள்! தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக! ஆமென்!        

Read More
04 Feb
0

உபயோகமுள்ள வழிகளில் வேதாகமத்தை வாசிப்பது எப்படி?

தாமஸ் வாட்சன் என்கிற தேவ மனிதர் வேதத்தை வாசிக்க தேவையான  வழிமுறைகளை கொடுத்திருக்கிறார், அவைகள் பின்வருமாறு,

    1.  வேதம் வாசிக்க தடையாய் உள்ள அனைத்து காரியங்களையும் நம்மைவிட்டு அகற்றவேண்டும்.
    2. வேதம் வாசிக்கும் முன் உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும்.
    3. பயபக்தியோடு வேதாகமத்தை வாசிக்க வேண்டும்.
    4. வேதத்தை கிராமமாய் வாசிக்க வேண்டும்.
    5. வாசித்த வேதபகுதியை நினைவில்கொள்ள உழைக்க வேண்டும்.
    6. நீங்கள் வாசித்த வேத பகுதியை திரும்ப நினைத்து பார்க்க வேண்டும். 
    7. தாழ்மையுள்ள இருதயத்துடன் வேதத்தை வாசிக்க வேண்டும். 
    8. கொடுக்கப்பட்ட வேத வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். 
    9. வேதபுத்தகத்தை அவமதிக்ககூடாது.
    10. ஆழமான அன்போடு வேத வார்த்தையினிடத்தில் வா.
    11. வேதத்தை வாழ்வில் பயிற்றுவி.
    12. வேத பகுதிகளில் சொல்லப்பட்ட வார்த்தைகள், வாக்குத்தத்தங்கள்,ஞான போதனைகள், கட்டளைகளை கவனியுங்கள். 
    13. நீங்கள் வாசித்த வேத பகுதியோடு உங்களை ஒப்பிடுங்கள். 
    14. சில வேத பகுதிகள் உங்களோடு குறிப்பாக பேசும்போது அதை கவனமாய் எடுத்துக்கொள்ளுங்கள். 
    15. வாசிக்கிற வேத பகுதியை ஆசீர்வாதமாக்கி தர ஜெபிக்கவேண்டும். 

Read More
26 Jan
0

எதற்கு மற்றும் ஏன் வேதாகம வியாக்கியான முறை?

ஒரு பெரிய வர்த்தக மனிதன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து வெளிவூர் சென்றிருந்தான். அவன் அரசாங்கத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தான். அவன் தன் பயணத்தை முடித்து வனாந்திர பாதையில் வரும் போது வாசிக்கும் படியாக ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. அவன் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தான். அப்படி அவன் வாசித்துக்கொண்டிருந்த போது மற்றொரு மனிதன் அவன் வாசிக்கும் சத்தத்தை கேட்டு, நீர் வாசிக்கும் பகுதியின் அர்த்தத்தை நீ அறிந்த்திருக்கிறாயா என்றான்.

வாசித்த அந்த மனித எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும், அவளுடைய பொக்கிஷமேல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியன் (அப் 8:27).பிலிப்பு ஆவியானவரால் ஏவப்பட்டு ரதத்தோடு சேர்க்கப்பட்டு (அப் 8:26-29,30, 31, ஏசா 53:7-8)மந்திரிர்க்கு வேதத்தில் இருந்து வாசித்த பகுதியை விளக்கப்படுத்தினான். மந்திரியின் கேள்வி வேதத்தை விளக்கப்படுத்தலின் அவசியத்தை உணர்த்துகிறது. பிலிப்பு என்ன சொல்லுகிறார் என்றால் நீர் வாசிக்கிற வேத பகுதி இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்றான். அதின் விளைவாக அந்த எத்தியோப்பியன் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசித்து இரட்சிக்கப்பட்டான்.

இந்த நிகழ்வு இரண்டு காரியங்களை முன்வைக்கிறது. முதலாவது, வேதாகமத்தில் இருக்கிற வார்த்தைகளை பார்ப்பதால், வேதாகமத்தை வாசிக்கும் நபர் அதின் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்துவிட்டார் என்பது அல்ல. வாசிக்கப்படுகிற வேதபகுதி உண்மையிலே என்ன சத்தியத்தை கூறுகிறது என்று கவனிப்பது தான் அவசியம். இரண்டாவதாக, சரியான வழிகாட்டல் மற்றவர்களை வேதத்தை சரியான முறையில் புரிந்துக்கொள்ள உதவுகிறது. பிலிப்புவின் கேள்வி என்ன? நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்? அப்படி என்றால் அந்த மந்திரி தான் வாசிக்கும் பகுதின் கருத்தை புரியாமல் வாசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அதின் கருத்து புரியவில்லை என்பதாலே அவன் பிலிப்புவை தன் ரதத்தோடு சேர்த்துக்கொண்டு அவனிடம் விளக்கத்தை பெற்றுக்கொண்டான். 

நெகேமியா எருசலேமின் மதில்களை கட்டி முடித்த பின்பும், இஸ்ரவேல் புத்திர்கள் தங்கள் பட்டனங்களை சுதந்தரித்த பின்பு, எஸ்ரா என்னும் வேதபாரகன் மோசேயின் நியாயபிரமாணத்தை காலமே துடங்கி மத்தியானம் மட்டும் வாசித்தான் (நெகே 8:1-3). வாசித்த பின்பு அதை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள் வ-7.வசனம் 8 அவர்கள் தேவனுடைய நியாயபிரமாணத்தை தீர்க்கமாய் வாசித்து, அர்த்தம் சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளக்கம்பண்ணினார்கள். அதின் விளைவாக வசனம் 12 அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.

ஏன் வேதாகம வியாக்கியானம் முக்கியம்?

வேதாகம வியாக்கியானம் ஏன் முக்கியன் என்றால், வேதத்தை சரியாக புரிந்துக்கொள்ளவும், அதிலுள்ள போதனைகளை சரியாக போதிக்கவும் வேதாகம வியாக்கியானம் அவசியமாக இருக்கிறது. இன்றைக்கு வேதத்தின் செய்தியை சொல்லுவதற்கு முன்பாக அந்த செய்தியின் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டும். வேதத்தின் சிறப்புகளை சொல்லுவதற்கு முன்பாக அதின் சாராம்சத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும். வேதாகம வியாக்கியானம் இல்லை என்றால் நாம் அநேக முக்கிய சத்தியங்களை வேதத்தில் இருந்து பார்க்க தவறுகிறோம். வியாக்கியானம் என்பது மிகவும் கடினமான வேளை மற்றும் நேரம் அதிகம் செலவு செய்ய வைக்கும் வேளை. இந்த வியாக்கியானம் செய்ய குறுக்கு வழியை நாம் கையாளும் போது தவறான போதனைகளுக்குள்ளாக நம்மை வழிநடத்துகிறது. வியாக்கியானம் செய்ய குறுக்கு வழியை நாம் கையாளும் போது வேத சத்தியமானது புரட்டப்படுகிறது (2 கொரி 4:2), வேத சத்தியமானது அவர்களுக்கு கேடுவரத்தக்கதாக புரட்டுகிறார்கள் (2 பேதுரு 3:16). சிலர் தாங்களே அவர்களுடைய அறியாமையினால் தவறான வியாக்கியானத்தின் கொள்கைகளையே பின்பற்றாமல் இருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற கால கட்டத்தில் அநேக ஜனங்கள் வேதத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம்கொண்டுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அதிக வேத பாட கூடுகைகள் நடைபெறுகிறது, நிறைய வீட்டு கூடுகையில் வேதத்தை படிக்கின்றனர். அதில் எப்படி படிக்கின்றார்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட வேத பகுதியை எடுத்துக்கொண்டு ஒருவர் எனக்கு இந்த பகுதியில் உள்ள வசனம் இந்த அர்த்தத்தை தருகிறது என்பார்.மற்ற ஒரு நபர் இந்த பகுதி எனக்கு இந்த அர்த்தத்தை தருகிறது என்பார். அந்த மாதிரியான வேதாகம கூடுகையில் ஒழுங்கான வியாக்கியான முறைகள் பயன்படுத்தாததினால் அநேக குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள், மோதல்களுக்கு நேரே வழிநடத்தும்.

தேவன் வேதத்தை இந்த முறையில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறாரா? வேதத்தில் குழப்பமான வியாக்கியானங்கள் உள்ள பகுதிகள் நிறைந்திருக்கிறது. அதில் சில உதாரணங்கள். யோவான் 10:28 “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்ற இந்த வசனம் விசுவாசிகளின் நித்திய பாதுகாப்பை குறித்து போதிக்கிறது. இந்த வசனத்தை சிலர் விசுவாசியை கடவுளின் கையிலிருந்து பிரிக்கமுடியாது ஆனால் சிலர் விசுவாசியின் தொடர் பாவத்தினால் விசுவாசியே கடவுளின் கையிலிருந்து விலகி செல்கிறான் என்று போதிக்கிறார்கள். சில விசுவாசிகள் அந்நிய பாஷை பழக்கத்தை 1கொரிந்தியர் 12-14 அதிகாரங்களை தவறாக புரிந்துக்கொள்கிறதினால் அவைகளை நடைமுறைபடுத்தி வருகிறார்கள். சிலர் அதை வாசித்து இது இன்றைய காலத்திற்கு உட்பட்டது அல்ல இது அப்போஸ்தல காலத்தோடு நிறைவடைந்து என்று கூறுகிறார்கள். லூக்கா 1௦:25-37 நல்ல சமாரியனின் உவமையில் வரும் இரண்டு பணம் என்பது இன்று இருக்கும் திருவிருந்து மற்றும் திருமுழுக்கு என்று அடையாளப்படுத்தி போதித்து வருகிறார்கள். இந்த உதாரணங்கள் மற்றும் இன்னும் அநேக குழப்பமான பகுதிகள் ஏன் என்று பார்க்கும் போது விளக்கப்படுத்திவதில் ஏற்படும் தவறுகள். வேதத்தை வியாக்கியானம் செய்யும் முறைகளின் சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், நாம் வேதத்தை தவறாகவும், தீயதாகவும் பயன்படுத்த நேரிடும். வேதாகம வியாக்கியானம் ஏன் முக்கியன் என்றால், வேதத்தை சரியாக புரிந்துக்கொள்ளவும், அதிலுள்ள போதனைகளை சரியாக போதிக்கவும் வேதாகம வியாக்கியானம் அவசியமாக இருக்கிறது.

வேதத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேதாகம வியாக்கியானம் முக்கியமானதாய் இருக்கிறது;

வேதாகம வியாக்கியானம் முதலாவது கொடுத்திருக்கிற பகுதியை கூர்ந்து கவனிப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். வேதாகம தியானத்தின் நோக்கம் என்பது வேதத்தில் உள்ள காரியங்களை கண்டுபிடித்தல் அல்ல, அந்த வேதபகுதியின் அர்த்தத்தை புரிந்துக்கொண்டு, புரிந்துக்கொண்ட அர்த்தத்தை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே வேதாகம தியானத்தின் நோக்கம். நாம் புரிந்துக்கொண்டதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் தேவன் நமக்கு என்ன சொல்லுகிறார் என்பது தெரியாமலே போய்விடும். வேதாகமம் அநேக காரியங்களை நாம் அறியும்படியாக கூறியுள்ளது. தேவனைப்பற்றி, மனிதனைப்பற்றி, பாவத்தைப்பற்றி, இரட்சிப்பைப்பற்றி மற்றும் எதிர்காலத்தைப்பற்றி அறியும்படியாக கூறியுள்ளது. நாம் வேதத்திற்கு தகவல் மற்றும் அறிவை தேடி போகிறோம், அது சரி தான். ஆனால் அந்த தகவலையும், அறிவையும் கொண்டு என்ன செய்யபோகிறோம் என்பது தான் கேள்வி? வேதாகம வியாக்கியானம் என்பது வாசித்தல், கவனித்தல், புரிந்துக்கொள்ளுதல் மற்றும் வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்தல். வேதத்தை வாசிக்கும் போதும், படிக்கும் போதும், நாம் வாசித்த வேத பகுதியை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். வேத ஆராய்ச்சியின் நோக்கம் தலை அறிவு அல்ல, இருதய மாற்றம். இருதய மாற்றத்தின் முலமாக மட்டுமே விசுவாசி ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய முடியும். ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது வேதத்தை அறிவதினால் மாத்திரம் வருவதில்லை, வேதத்தை வாழ்வில் நடைமுறைபடுத்தும் போது முதிர்ச்சியடைகிறோம் [கொலோ 1:28, 1பேதுரு 2:2,3, 1கொரிந்தியர் 8:1, யோவான் 5:39,40] வ-40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.வேதாகம வியாக்கியானம் வேத ஆராய்ச்சியின் இரண்டாம் படி, அது மிகவும் முக்கியமான படி. வேத வியாக்கியானம் நடைமுறை கொள்கைகளை கொண்டுவர அடிப்படையமானது. சரியான முறையில் வியாக்கியானம் செய்யவில்லை என்றால், தவறான முறையில் வேத சத்தியத்தை நடைமுறை கொள்கைகளாக கொண்டுவருவோம். நீங்கள் எப்படி வேதத்தை வியாக்கியானம் செய்கிறீர்களோ அப்படிதான் உங்கள் நடத்தையும், உங்களை சார்ந்தவர்களிடத்திலும் காணப்படும். ஆகவே, வேதத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேதாகம வியாக்கியானம் முக்கியமானதாய் இருக்கிறது.

 

Read More